20 பயன்இல சொல்லாமை

அதிகாரம் 20.

பயன்இல சொல்லாமை

191      

பல்லார் முனியப் பயனில சொல்லுவா

னெல்லாரு மெள்ளப் படும்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்களுள் ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய்,குறளை,கடுஞ்சொல்,பயனில் சொல் என வாக்கின்கண் நிகழும் பாவம் நான்கனுள், பொய் துறந்தார்க்கு அல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃது ஒழித்து இல்வாழ்வாரால் கடியப்படும் ஏனை மூன்றனுள் , கடுஞ்சொல் இனியவை கூறலானும் , குறளை புறங்கூறாமையானும் விலக்கி, நின்ற பயனில் சொல் இதனான் விலக்குகின்றார் ஆகலின், இது புறங்கூறாமையின் பின் வைக்கப்பட்டது.)

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் – அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், ‘எல்லாரும் எள்ளப்படும்’ – எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.)

**

மு.வரதராசனார் உரை

கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான்.

**

மணக்குடவர் உரை

பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்,

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் – அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன்; எல்லாரும் எள்ளப்படும் – எல்லாராலும் இழிவாய் எண்ணப்படுவான்.

எல்லாரும் என்று பிற்குறித்ததனால் பல்லார் என்று முற்குறித்தது அறிவுடையாரை யென்பது உய்த்துணரப்படும். அறிவுடையார் வெறுக்கவே அவரைப் பின்பற்றி ஏனையோரும் வெறுப்பர் என்பது கருத்து. எள்ளுதல் மனத்தின் செயல்.

**

கலைஞர் உரை

பலரும்   வெறுக்கும்படியான   பயனற்ற    சொற்களைப்  பேசுபவரை

எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Words without sense, while chafe the wise,

Who babbles, him will all despise.

**

Yogi Shuddhananda Translation

With silly words who insults all

Is held in contempt as banal.

**

192      

பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்

மக்கட் பதடி யெனல்.

பரிமேலழகர் உரை

பயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல் – பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க, மக்கட் பதடி எனல் – மக்களுள் பதர் என்று சொல்லுக. (அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், ‘மக்கள் பதடி’ என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது; மக்களுள் பதர் என்றே சொல்ல வேண்டும்.

**

மணக்குடவர் உரை

பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே,

இது பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் – பயனற்ற சொற்களைப் பலகாலும் விரும்பிச் சொல்பவனை மகன் (மாந்தன்) என்று சொல்லற்க; மக்கட் பதடி எனல் – மக்களுட் பதர் என்று சொல்லுக.

அல் என்னும் வியங்கோளீறு முன்பு எதிர்மறையிலும் பின்பு உடன்பாட்டிலும் வந்தது. பதர் உள்ளீடல்லாத கூல மணி. மக்கட்பதர் அறிவாகிய உள்ளீடற்றவன் அல்லது அற்றவள்.

**

கலைஞர் உரை

பயனற்றவைகளைச்   சொல்லிப்  பயன்பெற  நினைப்பவனை, மனிதன்

என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who makes display of idle words’ inanity,

Call him not man,- chaff of humanity!

**

Yogi Shuddhananda Translation

Call him a human chaff who prides

Himself in weightless idle words.

**

193      

நயனில னென்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கு முரை.

பரிமேலழகர் உரை

பயன் இல பாரித்து உரைக்கும் உரை – பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் – இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன் ‘நயனிலன்’ என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, ‘உரை சொல்லும்’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

**

மணக்குடவர் உரை

நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள்,

இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பயன் இல பாரித்து உரைக்கும் உரை – ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரித்துரைக்கும் உரையே; நயன் இலன் என்பது சொல்லும் – அவன் நேர்மை (நீதி) யில்லாதவன் என்பதை அறிவிக்கும்.

அறிவித்தலும் பயனளவிற் சொல்லுதலை ஒக்குமாதலின் ‘சொல்லும்’ என்றார்.

**

கலைஞர் உரை

பயனற்றவைகளைப்பற்றி  ஒருவன்  விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே

அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Diffusive speech of useless words proclaims

A man who never righteous wisdom gains.

**

Yogi Shuddhananda Translation

The babbler’s hasty lips proclaim

That “good-for-nothing” is his name.

**

194      

நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப்

பண்பிற்சொற் பல்லா ரகத்து.

பரிமேலழகர் உரை

பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து – பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும் – அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும். (பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், ‘சொல்லுமாயின்’ என்பதும், ‘அவர் மாட்டு’ என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.)

**

மு.வரதராசனார் உரை

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

**

மணக்குடவர் உரை

ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும்.

இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பல்லாரகத்துப் பயன் சாராப் பண்பு இல்சொல் – ஒருவன் பலரிடத்தும் பயனொடு பொருந்தாத பண்பற்ற சொற்களைச் சொல்லுதல்; நயன் சாரா நன்மையின் நீக்கும் – நேர்மையொடு பொருந்தாது அவனை நற்குணத்தினின்று நீக்கும்.

சொற் பண்புகள் ஓசையினிமை , இலக்கண வழுவின்மை, பொருள் நன்மை முதலியன. சொல்லும் என்பது சொல்லெச்சம். ‘சாரா’ இரண்டனுள் முன்னது ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்; பின்னது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

**

கலைஞர் உரை

பயனற்றதும்,   பண்பற்றதுமான   சொற்களைப்   பலர்முன்   பகர்தல்

மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Un meaning , worthless words, said to the multitude,

To none delight afford, and sever men from good.

**

Yogi Shuddhananda Translation

Vain words before an assembly

Will make all gains and goodness flee.

**

195      

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

பரிமேலழகர் உரை

பயன் இல நீர்மையுடையார் சொலின் – பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் – அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். (நீர்மை: நீரின் தன்மை. ‘சொலின்’ என்பது சொல்லாமையை விளக்கிற்று.)

**

மு.வரதராசனார் உரை

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

**

மணக்குடவர் உரை

பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம்

இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நீர்மை உடையார் பயன் இல சொலின் – இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற சொற்களைச் சொல்வாராயின்; சீர்மை சிறப்பொடு நீங்கும் -அதனால் அவருடைய உயர்வும் அது பற்றிய மதிப்பும் நீங்கிவிடும்.

‘சொலின்’ என்னும் நிலைப்பாட்டு வினையெச்சம் சொல்லாமையை உணர்த்திற்று.

**

கலைஞர் உரை

நல்ல  பண்புடையவர்  பயனில்லாத  சொற்களைக்     கூறுவாரானால்

அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Gone are both fame and boasted excellence,

When men of worth speak of words devoid of sense.

**

Yogi Shuddhananda Translation

Glory and grace will go away

When savants silly nonsense say.

**

196      

பயனில பல்லார்முற் சொல்ல னயனில

நட்டார்கட் செய்தலிற் றீது.

பரிமேலழகர் உரை

பயன் இல பல்லார்முன் சொல்லல் – பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது – விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. (‘விருப்பமில’ – வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

**

மணக்குடவர் உரை

பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில்

பதரென்று சொல்லுக,

இது மக்கட் பண்பிலனென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பயன் இல பல்லார்முன் சொல்லல் -ஒருவன் பயனற்ற சொற்களை அறிவுடையோர் பலர்முன் சொல்லுதல் ; நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது – விரும்பப்படாத செயல்களைத் தன் நண்பரிடத்துச் செய்தலினுந் தீயதாம்.

நயத்தல் விரும்புதல். நயம் விருப்பம். ‘நயன்’ போலி. அறிவுடையோர்க்குப் பயனில் சொல்லின் மீதுள்ள வெறுப்பின் அளவைக் கூறியவாறு.

**

கலைஞர் உரை

பலர்முன்   பயனில்லாத  சொற்களைக்   கூறுவது, நட்புக்கு  மாறாகச்

செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Words without sense, where many wise men hear, to pour

Than deeds to friends ungracious done offendeth more.

**

Yogi Shuddhananda Translation

Vain talk before many is worse

Than doing to friends deeds adverse.

**

197      

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

பரிமேலழகர் உரை

நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக – சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்று – அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று (‘சொல்லினும்’ எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம்; சான்றோர் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

**

மணக்குடவர் உரை

சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று.

இது சான்றோர்க்கு ஆகாதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

சான்றோர் நயன் இல சொல்லினும் சொல்லுக – அறிவுடையோர் நேர்மையில்லாத சொற்களை என்றேனும் தப்பித் தவறிச் சொல்லினும் சொல்லுக; பயன் இல சொல்லாமை நன்று.. ஆயின் எக்கரணியத்தையிட்டும் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தலே அவர்க்கு நன்றாம்.

இது நேர்மையில்லாச் சொல்லை நெருக்கடி நிலைமையிற் சொல்ல இசைவளித்ததன்று; நேர்மையில்லாச் சொல்லினும் பயனில்லாச் சொல் தீயதென்பதை உணர்த்துவதேயாம்.

**

கலைஞர் உரை

பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி   விடலாம்;

ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Let those who list speak things that no delight afford,

‘Tis good for men of worth to speak no idle word.

**

Yogi Shuddhananda Translation

Let not men of worth vainly quack

Even if they would roughly speak.

**

198      

அரும்பய னாயு மறிவினார் சொல்லார்

பெரும்பய னில்லாத சொல்.

பரிமேலழகர் உரை

அரும்பயன் ஆயும் அறிவினார் – அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் – மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. ‘பெரும்பயன் இல்லாத’ எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.)

**

மு.வரதராசனார் உரை

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

**

மணக்குடவர் உரை

அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை,

இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அரும்பயன் ஆயும் அறிவினார் – அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார்; பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் – மிகுந்த பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லார்.

அறிதற்கரிய பயன்களாவன நாள்கோளியக்கமும் மெய்ப் பொருளியலும் வீடுபேறும் முதலியன. பெரும்பயனில்லாத சொல்லை சொல்லாரெனவே , சிறு பயன் தரும் சொல்லும் அவர் வாயினின்று வராதென்பது பெறப்படும். இதனால் அரும்பயனாராயும் அறிவினார்க்குச் சிறுபயன் சொல்லும் அறவே விலக்கப்பட்டது.

**

கலைஞர் உரை

அரும்பயன்களை   ஆராய்ந்து  அறியக்கூடிய   ஆற்றல் படைத்தவர்,

பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The wise, who weigh the worth of every utterance,

Speak none but words of deep significance.

**

Yogi Shuddhananda Translation

The wise who weigh the worth refrain

From words that have no grain and brain.

**

199      

பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீரந்த்

மாசறு காட்சி யவர்.

பரிமேலழகர் உரை

பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் – பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், ‘மருள் தீர்ந்த’ மாசுஅறு காட்சியவர் – மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். “(‘தூய அறிவு’ மெய்யறிவு. ‘மருள் தீர்ந்த’ என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்ட.து)

**

மு.வரதராசனார் உரை

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

**

மணக்குடவர் உரை

பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார்,

இது தெளிவுடையார் கூறாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

மருள் தீரந்த மாசு அறு காட்சியவர் – மயக்கத்தினின்று நீங்கிய குற்ற மற்ற அறிவுடையார்; பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் -பயனில்லாத சொற்களை மறந்துஞ் சொல்லார்.

மயக்கம் ஐயமுந் திரிபும். குற்ற மற்ற அறிவு மெய்யறிவு அல்லது தூய அறிவு.

**

கலைஞர் உரை

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப்  பயனற்ற

சொற்களைச் சொல்ல மாட்டார்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The men of vision pure, from wildering folly free,

Not e’en in thoughtless hour, speak words of vanity.

**

Yogi Shuddhananda Translation

The wise of spotless self-vision

Slip not to silly words-mention.

**

200      

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.

பரிமேலழகர் உரை

சொல்லில் பயன் உடைய சொல்லுக – சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக, சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க – சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக. (‘சொல்லில்’ என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வருநிலை என்னும் அணி நோக்கி வந்தது. “வைகலும் வைகல் வரக்கண்டும்” (நாலடி 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.)

**

மு.வரதராசனார் உரை

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும்; பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவேகூடாது.

**

மணக்குடவர் உரை

சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக.

இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

சொல்லின் பயன் உடைய சொல்லுக – ஏதேனு மொன்றைச் சொல்லின் பயனுள்ள சொற்களையே சொல்லுக; சொல்லில் பயனிலாச் சொல் சொல்லற்க – சொற்களிற் பயனில்லாதவற்றைச் சொல்லாதிருக்க.

ஒரே பொருளை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் கூறியது அதை வலியுறுத்தற்காதலின் , கூறியது கூறலன்று. ஒரே சொல் பொருள் மாறாது திரும்பத் திரும்ப வந்தது ‘சொற்பொருட் பின்வருநிலை’ யணியாம்.

**

கலைஞர் உரை

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக்

கூடிய சொற்களையே கூற வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

If speak you will, speak words that fruit afford;

If speak you will, speak never fruitless word.

**

Yogi Shuddhananda Translation

To purpose speak the fruitful word

And never indulge in useless load.

**

×