23ஆம் அதிகாரம் (ஈகை)

அதிகாரம் 23.

ஈகை

221      

வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, வறியராய் ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தல். இது மறுமை நோக்கியது ஆகலின், இம்மை நோக்கிய ஒப்புரவு அறிதலின் பின் வைக்கப்பட்டது.)

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை – ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து – அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து. (ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. ‘நீரது’ என்புழி, ‘அது’ என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், ‘குறியெதிர்ப்பை நீரது உடைத்து’ என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.

**

மணக்குடவர் உரை

ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து.

இது கொடுக்குங்கால் இல்லார்க்குக் கொடுக்கவேண்டுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை – பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய இயலாதவருமான ஏழையர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச் செயலாம்; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து – மற்றக் கைம்மாறு கருதிய கொடுப்பெல்லாம் அளவு குறித்துக் கடன் கொடுக்கும் தன்மையதாம்.

குறியெதிர்ப்பாவது அளவு குறித்துக் கொடுத்து அவ்வளவில் திரும்பப் பெறுங் கடன். நீரது என்பதில் அது என்பது முதனிலைப் பொருளீறு. “ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே”.(928) என்னும் தொல்காப்பிய நெறிப்படி, ஈகை என்னும் சொல் சிறப்பாகத் தாழ்ந்தோர்க்கு ஈதலைக் குறிக்கும்.

**

கலைஞர் உரை

இல்லாதவர்க்கு    வழங்குவதே   ஈகைப்  பண்பாகும். மற்றவர்களுக்கு

வழங்குவது     என்பது      ஏதோ   ஓர்   ஆதாயத்தை  எதிர்பார்த்து

வழங்கப்படுவதாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

call that a gift to needy men thou dost dispense,

All else is void of good, seeking for recompense.

**

Yogi Shuddhananda Translation

To give the poor is charity

The rest is loan and vanity.

**

222      

நல்லா றெனினுங் கொளறீது மேலுலக

மில்லெனினு மீதலே நன்று.

பரிமேலழகர் உரை

கொளல் நல் ஆறு எனினும் தீது – ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று – ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் , ஈதலே நன்று. (‘எனினும்’ என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.)

**

மு.வரதராசனார் உரை

பிறரிடமிருந்து பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.

**

மணக்குடவர் உரை

ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று.

கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

கொளல் நல் ஆறு எனினும் தீது – பிறரிடத்தினின்று வாங்குவது வீட்டுலகத்திற்கு நல்வழியென்று அறநூல் கூறினும் வாங்குவது தீயது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று – பிறருக்குக் கொடுப்பதால் அவ்வுலகத்தை அடைய முடியாதென்று அந்நூல் கூறினும், கொடுத்தலே நல்லது.

உம்மை ஈரிடத்தும் எதிர்மறை, கொடுத்தல் தருதல் என்னும் சொற்களினும் ஈதல் என்னும் சொல்லே இவ்வதிகாரத்திற்கு ஏற்றதாம்.

**

கலைஞர் உரை

பிறரிடமிருந்து    நல்வழியில்    பொருளைப்    பெற்றாலும்    அது

பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை  வழங்குவதால்    மேலுலகம்

என்று  சொல்லப்படுவது    கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக்

கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Though men declare it heavenward path, yet to receive is ill;

Though upper heaven were not, to give is virtue still.

**

Yogi Shuddhananda Translation

To beg is bad e’en from the good

To give is good, were heaven forbid.

**

223      

இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்

குலனுடையான் கண்ணே உள.

பரிமேலழகர் உரை

‘இலன் என்னும் எவ்வம் உரையாமை – யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், ஈதல் – அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், உள குலன் உடையான் கண்ணே- இவை இரண்டும் உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே. (மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை உணர்த்தியவாறு. இனி இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல்’ எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால் கொடுத்தல் எனவும், யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் ‘எனக் கரப்பார்’ சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும் உரைப்பாரும் உளர். அவர் ‘ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.)

**

மு.வரதராசனார் உரை

`யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.

**

மணக்குடவர் உரை

இரந்துவந்தார்க்கு இலனென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம்.

இது கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இலன் என்னும் எவ்வம் உரையாமை – யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் சொல்லாமையும்; ஈதல் – அவ் விரப்போன் வேண்டியதொன்றை இல்லையென்னாது அவனுக்கு ஈதலும்; குலன் உடையான் கண்ணே உள – ஆகிய இரண்டும் உயர்குடிப் பிறந்தான் கண்ணே உள்ளன.

எவ்வம் துன்பம். அது இங்குத் துன்பந்தரும் இழிவுரையைக் குறித்தது.

இனி, ‘ இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்’ என்னும் தொடருக்குப் பின்வருமாறும் உரைகள் கூறப் பெறும்.

(1) யான் பொருளில்லாதவன் என்று இரப்போன் தன் இளிவரவைச் சொல்லுமுன் அவன் குறிப்பறிந்து கொடுத்தல்.

(2) அவ்விழிவுரையைப் பின்னும் இன்னொருவனிடம் சென்று உரையா வண்ணம் அவ்விரப்போனுக்கு நிரம்பக் கொடுத்தல்.

(3) இல்லத்தான் என்னிடம் இப்பொழுது பொருளில்லையென்று ஈயாதார் சொல்லும் இழிவுரையைச் சொல்லாது கொடுத்தல்.

இம் மூவுரையும் எளிதாய்ப் பொருந்துவன. இனி, வலிந்து பொருந்தும் வேறுமூவுரையுமுள.அவை வருமாறு : –

(1) அவ்விரப்போனை ஒன்றுமில்லாதவனென்று பிறர் இழிந்துரையா வண்ணம் கொடுத்தல்.

(2) அவ்விரப்போனுக்கு மறுத்த இல்லறத்தான் அது பற்றிப்பின்பு வறியனானபின், தானும்

(3) அவனை யிரந்தோனும் பிறரும் இலனென்னும் இனிவரவு கூறாவண்ணங் கொடுத்தல்.

இவ்வுரைகட்கெல்லாம் ‘ ஈதல் ‘ என்பது 139 ஆம் குறளிலுள்ள ‘ சொலல் ‘ என்பது போலப் பன்மையாம். இக்குறளால், உயர்குடிப் பிறந்தோன் ஈகையாளனே யன்றிப் பிராமண னல்லன் என்பது பெறப்பட்டது.

**

கலைஞர் உரை

தமக்குள்ள  வறுமைத்     துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு

ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘I’ ve nought’ is ne’er the high – born man’s reply;

He gives to those who raise themselves that cry.

**

Yogi Shuddhananda Translation

No pleading, “I am nothing worth,”

But giving marks a noble birth.

**

224      

இன்னா திரக்கப் படுத லிரந்தவ

னின்முகங் காணு மளவு.

பரிமேலழகர் உரை

இரக்கப்படுதல் இன்னாது – இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று, இரந்தவர் இன்முகம் காணும் அளவு – ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்; (எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப் படுதல் – ‘இரப்பார்க்கு ஈவல்’ என்று இருத்தல். அதனை ‘இன்னாது’ என்றது. ‘எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை’ (நாலடி.145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது.

**

மணக்குடவர் உரை

பிறன் ஒருவனா லிரக்கப்படுதலும் இன்னாது எவ்வளவு மெனின், இரந்து வந்தவன் தான் வேண்டியது பெற்றதனானே இனிதான முகங் காணுமளவும்.

இது கொடுக்குங்கால் தாழாது கொடுக்க வேண்டுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இரந்தவர் இன்முகம் காணும் அளவு – ஒருபொருளை இரந்தவர் அதைப் பெற்றதினால் மலரும் அவரது இனிய முகத்தைக் காணுமளவும்; இரக்கப்படுதல் இன்னாது – இரத்தலேயன்றி இரக்கப் படுதலும் குடிப்பிறந்தானுக்குத் துன்பந்தருவதாம்.

படுதலும் என்னும் எச்சவும்மையும் அளவும் என்னும் முற்றும் மையுந் தொக்கன. இன்முகங் காணுமளவுந் துன்பமென்றதனால், இரந்த பொருள்களை யெல்லாம் ஈதல் வேண்டுமென்பது பெறப்பட்டது. ஆயினும், தன் மானத்திற்கு இழுக்கு நேராவாறு என்னும் வரையறை பகுத்தறிவாற் கொள்ளப்பெறும்.

**

கலைஞர் உரை

ஈதல்   பண்புடையவர்க்குத்  தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை

பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரைவில், அவருக்காக இரக்கப்படுவதும்

ஒரு துன்பமாகவே தோன்றும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The suppliants’cry for aid yeilds scant delight,

Until you see his face with grateful gladness bright.

**

Yogi Shuddhananda Translation

The cry for alms is painful sight

Until the giver sees him bright.

**

225      

ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை

மாற்றுவா ராற்றலிற் பின்.

பரிமேலழகர் உரை

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் – தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல், அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் – அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின். (தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

**

மணக்குடவர் உரை

பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்: அதுவும் பெரிதாவது பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு.

இது தவம்பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடைய ரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் – தவத்தால் வலிமையடைந்தாரது வலிமையெல்லாம் தம்மை வருத்தும் பசியைப் பொறுத்துக் கொள்ளுதலே; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின்பின் – அவ்வலிமையும் அப்பொறுத்தற்கரிய பசியை ஈகையால் ஒழிப்பவரது வலிமைக்குப் பிற்பட்டதே. தம்பசியை மாற்ற மாட்டாதவரது வலிமையினும், தம்பசியையும் பிறர் பசியையும் ஒருங்கே மாற்றுவாரது வலிமை சிறந்ததென்பதாம்.

“யான்வாழு நாளும் பண்ணன் வாழிய

பாணர் காண்கிவன் கடும்பின திடும்பை

யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன

வூணொலி யரவந் தானுங் கேட்கும்

பொய்யா வெழிலி பெய்விட நோக்கி

முட்டை கொண்டு வற்புலஞ் சேருஞ்

சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்

சோறுடைக் கையர் வீறுவீ றியங்கு

மிருங்கிளைச் சிறா அர்க் காண்டுங் கண்டு

மற்று மற்றும் வினவுதுந் தெற்றெனப்

பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே.”

என்று (புறம். 173) சிறுகுடிகிழான் பண்ணனின் பசியாற்ற லறத்தைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சிறப்பித்துப் பாடியிருத்தல் காண்க.

**

கலைஞர் உரை

பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்  பிடிப்பதைவிடப்

பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘Mid devotees they’re great who hunger’s pangs sustain,

Who hunger’s pangs relieve a higher merit gain.

**

Yogi Shuddhananda Translation

Higher’s power which hunger cures

Than that of penance which endures.

**

226      

அற்றார் ரழிபசி தீர்த்த லஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

பரிமேலழகர் உரை

அற்றார் அழிபசி தீர்த்தல் – வறியாரது மிக்க பசியை அறன் நோக்கித் தீர்க்க, பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி அஃது – பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான். (எல்லா நன்மைகளும் அழிய வருதலின், ‘அழி பசி’ என்றார். ‘அறம் நோக்கி’ என்பது எஞ்சி நின்றது. ‘அற்றார் அழிபசி தீர்த்த’ பொருள் பின் தனக்கே வந்து உதவும் என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

**

மணக்குடவர் உரை

பொருளற்றாராது குணங்களையழிக்கும் பசியைப் போக்குக. அது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றானாம்.

இது பகுத்துண்ணப் பொருளழியாது என்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அற்றார் அழிபசி தீர்த்தல்-வறியவரின் கடும்பசியைத் தீர்க்க; அஃது ஒருவன் பொருள் வைப்புழி பெற்றான்-அவ்வறச் செயலால் ஒருவன் தான் தேடிய செல்வத்தை மறுமையில் தனக்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கும் ஏம வைப்பகத்தைப் (Savings Bank) பெற்றானாவன்.

கொல்வது போல வருத்துவதனாலும், குடிப்பிறப்பு கல்வி மானம் அறிவுடைமை முதலிய பேறுகளையும் பண்புகளையும் அழிப்பதனாலும், கடும்பசி அழிபசி யெனப்பட்டது. வறியவரின் பசியைத் தீர்த்தற்குச் செலவிட்ட பொருள் பின்பு தனக்கே வந்துதவுதலால் அருள் நோக்கிச் செய்யாவிடினும் தனக்குப் பயன்படும் அறம் நோக்கியேனும் அதைச்செய்க என்றவாறு.

‘தீர்த்தல்’ தல்லீற்று வியங்கோள். பெற்றான் என்பது தேற்றம் பற்றிய காலவழுவமைதி. அஃதொருவன் என்பது அதுவொருவன் என்றும் இருக்கலாம். அடுத்த அதிகார முதற் குறளில் ‘வாழ்தலதுவல்லது’ என வருதல் காண்க.

**

கலைஞர் உரை

பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண்  போகாது.

அதுவே, தான் தேடிய பொருளைப்  பிற்காலத்தில்   உதவுவதற்கு  ஏற்பச்

சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Let men relieve the wasting hunger man endure;

For treasure gained thus finds he treasure-house secure.

**

Yogi Shuddhananda Translation

Drive from the poor their gnawing pains

If room you seek to store your gains.

**

227      

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்

தீப்பிணி தீண்ட லரிது.

பரிமேலழகர் உரை

பாத்து ஊண் மரீஇயவனை – எஞ்ஞான்றும் பகுத்து உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது – பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல் இல்லை. (இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், ‘தீப்பிணி’ எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை.

**

மணக்குடவர் உரை

பகுத்து உண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை.

இஃது ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றமை ஈந்தால் பொருள் குறையும். அதனாலே பசியுண்டாமென் றஞ்சியன்றோ? அவ்வாறு நினைத்தல் வேண்டா. பகுத்துண்ணப் பசிவாராதென்று கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பாத்து ஊண் மரீஇ யவனை-எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டு பயின்றவனை; பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது-பசியென்று சொல்லப்படும் கொடிய நோய் தாக்குதலில்லை.

நாள்தோறும் வந்து வருத்துவதாலும், நல்லார் வல்லாருட்பட எல்லாரையுந் தாக்குவதாலும், எம்மருந்தாலும் அறவே நீக்கப்படாமையாலும், பிற நோய்கள் அழிக்காதவற்றையும் அழித்து மறுமையிலுந் துன்புற வழிகோலுவதாலும், பசி தீப்பிணி யெனப் பட்டது . “இறைக்க வூறும் மணற் கேணி; ஈயப் பெருகும் பெருஞ் செல்வம் .” ஆதலின், பாத்துண்டு பயின்றவனைப் பசிப்பிணி தீண்டுவதில்லை. தீண்டுவதுமில்லை யெனவே வருத்தாமையைச் சொல்ல வேண்டுவதில்லை. ‘மரீஇ’ (மருவி) இன்னிசையளபெடை. அரிது என்பது இங்கு இன்மைப் பொருளது.

**

கலைஞர் உரை

பகிர்ந்து  உண்ணும்  பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய

நோய் அணுகுவதில்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

Whose soul delights with hungry men to share his meal,

The hand of hunger’s sickness sore shall never feel.

**

Yogi Shuddhananda Translation

Who shares his food with those who need

Hunger shall not harm his creed.

**

228      

ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.

பரிமேலழகர் உரை

தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் – தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் – வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.)

**

மு.வரதராசனார் உரை

தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன்கண்மை உடையவர் பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?

**

மணக்குடவர் உரை

கொடுத்த கொடையினால் பெற்றவர்க்கு வரும் முகமலர்ச்சியைக் கண்டறியாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் னிழக்கின்ற வன்கண்ணர்.

இஃது இடார் இழப்பரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் – தாம் உடைய பொருளை ஈயாது வைத்திருந்து பின்பு கள்வராலும் கொள்ளைக்காரராலும் இழக்கும் கன்னெஞ்சர்; ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல்-வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியாரோ!

அறிந்தாராயின், தாம்வைத்திழந்து வருந்தாது வறியார்க்கீந்து மகிழ்ந்து மறுமையிலும் இன்புறுவர் என்பது கருத்து. ‘கொல்’ ஐயம்.

**

கலைஞர் உரை

ஏழை எளியோர்க்கு    எதுவும்   அளித்திடாமல்   ஈட்டிய  பொருள்

அனைத்தையும் இழந்திடும்   ஈவு   இரக்கமற்றோர்,   பிறர்க்கு   வழங்கி

மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?

**

Rev. Dr. G.U.Pope Translation

Delight of glad’ning human hearts with gifts do they not know,

Men of unpitying eye, who hoard their wealth, and lose it so?

**

Yogi Shuddhananda Translation

The joy of give and take they lose

Hard-hearted rich whose hoarding fails.

**

229      

இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய

தாமே தமிய ருணல்.

பரிமேலழகர் உரை

நிரப்பிய தாமே தமியர் உணல் – பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற – ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின், ‘இரத்தலின் இன்னாது’ என்றார். ‘நிரப்பிய’ என்பதற்குத் ‘தேடிய உணவுகளை’ என்று உரைப்பாரும் உளர்.)

**

மு.வரதராசனார் உரை

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.

**

மணக்குடவர் உரை

இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல்.

தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நிரப்பிய தாமே தமியர் உணல்-தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி வறியார்க் கொன்றீயாது தாமே தமித்துண்டல்; மன்ற-திண்ணமாக; இரத்தலின் இன்னாது-இரத்திலினும் தீயதாம்.

ஆசைக்கோரளவில்லை யாதலின், ஈயாத கஞ்சர் மேன்மேலும் பொருளீட்டற் பொருட்டு இடைவிடாது உடலையும் உள்ளத்தையும் வருத்தி, எத்துணைப் பொருளீட்டினும் எள்ளளவும் பொந்திகை (திருப்தி) யின்மையால் உண்மையிற் செல்வராயினும் உள்ளத்தில் வறியராய், இன்பமும் அறப்பயனும் ஒருங்கே தரும் பாத்துண்டலின்றி நடைப்பிணமாய் உழல்வதினும்; ஆசையுங் கவலையுமில்லாத இரப்போர் உடல் வருத்தமின்றித் தாம் பெற்றதைக் கொண்டு மகிழ்வதோடு, தாம் இரப்பெடுத்ததையும் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை மேலாதலின்; ‘இரத்தலினின்னாது’ என்றார். ‘மன்ற’ தேற்றப் பொருளிடைச் சொல் . ‘நிரப்பிய’ செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம்.

**

கலைஞர் உரை

பிறர்க்கு  ஈவதால்   குறையக்  கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத்

தாமே   உண்ணுவது    என்பது  கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும்

கொடுமையானது.

**

Rev. Dr. G.U.Pope Translation

They keep their garners full, for self alone the board they spread;-

‘Tis greater pain, be sure, than begging daily bread!

**

Yogi Shuddhananda Translation

Worse than begging is that boarding

Alone what one’s greed is hoarding.

**

230      

சாதலி னின்னாத தில்லை யினிததூஉ

மீத லியையாக் கடை.

பரிமேலழகர் உரை

சாதலின் இன்னாதது இல்லை – ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது – அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் ‘இனிது’ என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச்சாதலும் இனியதே ஆகும்.

**

மணக்குடவர் உரை

சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து.

இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

சாதலின் இன்னாதது இல்லை-ஒருவனுக்கு இறத்தலைப்போலத் துன்பந் தருவது வேறொன்றுமில்லை; அதுவும் ஈதல் இயையாக்கடை இனிது-அவ்விறப்பும் வறியார்க்கொன்றீதல் இயலாவிடத்து இன்பந்தருவதாம்.

ஈகையாளனுக்கு இறப்புத் துன்பத்திலும் ஈயாத்துன்பம் பெரியதும் பொறுத்தற்கரியது மாதலின், சாதல் அவனுக்கு இனிதென்றார். இது வெளிப்படை. இனி, ஈயாத கஞ்சர் உலகத்திலிருத்தல் தகாது என்பது குறிப்பு. “ஈயாத புல்லரிருந்தென்ன போயென்ன எட்டிமரம்; காயாதிருந்தென்ன காய்த்துப் பலனென்ன” என்று படிக்காசுப் புலவரும் பாடியமை காண்க. ‘இனிததூஉம்’ இன்னிசை யளபெடை.

**

கலைஞர் உரை

சாவு   எனும்   துன்பத்தைவிட  வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத

மனத்துன்பம் பெரியது.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘Tis bitter pain to die. ‘Tis worse to live,

For him who nothing find to give!

**

Yogi Shuddhananda Translation

Nothing is more painful than death

Yet more is pain of giftless dearth.

**

×