11 செய்ந்நன்றி அறிதல்

அதிகாரம் 11.

செய்ந்நன்றி அறிதல்

101      

செய்யாதார் செய்த வுதவிக்கு வையகமும்

வானகமு மாற்ற லரிது.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின் , அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவை கூறலின்பின் வைக்கப்பட்டது. )

செய்யாமல் செய்த உதவிக்கு – தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது – மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. ‘செய்யாமைச் செய்த உதவி’ என்று பாடம் ஓதி ‘மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி’ என்று உரைப்பாரும் உளர்.)

**

மு.வரதராசனார் உரை

தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

**

மணக்குடவர் உரை

முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

செய்யாமல் செய்த உதவிக்கு — தன்னிடத்திலிருந்து ஓர் உதவியையும் முன்பு பெறாதிருந்தும் ஒருவன் தனக்குச் செய்த வுதவிக்கு ; வையகமும் வானகமும் வானகமும் ஆற்றல் அரிது – ‘ மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அலை ஈடு செய்தல் அரிது .

கைம்மாறுகளெல்லாம் எத்துணைச் சிறந்தன வாயினும் , முதல் வினையைப் பின்பற்றின வழிவினைகளாதலின் முதல் வினைக்கு ஈடாகா என்பது கருத்து .

செய்யாமைச் செய்தவுதவி யென்று பாடமோதி, மறுத்துதவ மாட்டாமை யுள்ள விடத்துச் செய்த வுதவி யென்று பொருளுரைக்கத் தேவையில்லை. அப்பொருள்,

“கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்

டென்னாற்றுங் கொல்லோ வுலகு”

(211)

என்னுங் குறளாற் பெறப்படுதலால்.

**

கலைஞர் உரை

“வாராது  வந்த  மாமணி”  என்பதுபோல்,  “செய்யாமற் செய்த உதவி”

என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த  வானமும்

பூமியும் கூட ஈடாக மாட்டா.

**

Rev. Dr. G.U.Pope Translation

Assistance given by those who ne’er received our aid,

Is debt gift of heaven and earth but poorly paid.

**

Yogi Shuddhananda Translation

Unhelped in turn good help given

Exceeds in worth earth and heaven.

**

102      

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு

ஞாலத்தின் மாணப் பெரிது.

பரிமேலழகர் உரை

காலத்தினால் செய்த நன்றி – ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப்பெரிது – தன்னை நோக்கச் சிறிதாயிருந்தது ஆயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரியது. (அக்காலம் நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். ‘காலத்தினால்’ என்பது வேற்றுமை மயக்கம்.)

**

மு.வரதராசனார் உரை

உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரிதாகும்.

**

மணக்குடவர் உரை

உதவவேண்டுங்காலந் தப்பாமற் செய்தவுதவி தான்சிறிதாயிருந்ததாயினும், உலகத்தினும் மிகப் பெரிது.

இது காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரிதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

காலத்தினால் செய்த நன்றி- ஒருவனது வாழ்க்கைக்கேனும் தொழிற்கேனும் இறுதி நேரும் நெருக்கடி வேளையில் அதை நீக்க இன்னொருவன் செய்த வுதவி; சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது- பொருளளவிலும் முயற்சியளவிலும் சிறிதாயிருந்தாலும், அக்கால நிலைநோக்க நிலவுலகத்தினும் பெரிதாம்.

ஒருவர் செய்த நன்றியை அது செய்யப்பட்ட காலநிலைக்கேற்ப மதிக்க வேண்டுமென்பது கருத்து. ‘காலத்தினால்’ என்பது காலத்தாலே வந்தான் என்னும், மேலைவடார்க்காட்டு வழக்குப் போன்ற வேற்றுமை மயக்கம்.

**

கலைஞர் உரை

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும்,

அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

A timely benefit,-though thing of little worth,

The gift itself, – in excellence transcends the earth.

**

Yogi Shuddhananda Translation

A help rendered in hour of need

Though small is greater than the world.

**

103      

பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி

னன்மை கடலிற் பெரிது.

பரிமேலழகர் உரை

பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் – இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது – அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும்.

**

மணக்குடவர் உரை

தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பயன் தூக்கார் செய்த வுதவி நயன் தூக்கின்- இவருக்கு இன்னது செய்தால் நமக்கு இன்னது கிடைக்குமென்று ஆராயாது ஒருவர் செய்த வுதவியின் அருமையை ஆய்ந்து நோக்கின்; நன்மை கடலின் பெரிது- அதன் நன்மை கடலினும் பெரியதாம்.

காலத்தினாற் செய்த நன்றி பயன்தூக்கியதாகவு மிருக்கலா மாதலால், பயன் தூக்காது செய்த வுதவியும் ஒருவகையிற் பெரியதே யென்றார்.

**

கலைஞர் உரை

என்ன  பயன்  கிடைக்கும்  என்று  எண்ணிப் பார்க்காமலே, அன்பின்

காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Kindness, shown by those who weigh not what the returns may be;

When you ponder right its merit, ‘Tis Vaster than the sea.

**

Yogi Shuddhananda Translation

Help rendered without weighing fruits

Outweighs the sea in grand effects.

**

104      

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்றெரி வார்.

பரிமேலழகர் உரை

தினைத்துணை நன்றி செயினும் – தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் – அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். (‘தினை’, ‘பனை’ என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனம் கருதுவார்க்கு வரும் பயன்.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

**

மணக்குடவர் உரை

தினையளவு நன்றி செய்தாராயினும், அதனை யவ்வளவிற்றென்று நினையாது, பனையளவாகக் கொள்வார் அதன் பயனை யறிபவர்.

பனையளவு- அதனுயர்ச்சி

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தினைத்துணை நன்றி செயினும்- தினையளவினதாகிய சிற்றுதவியையே ஒருவன் தமக்குச் செய்தானாயினும்; பயன் தெரிவார் பனைத் துணையாக் கொள்வர்- அதன் பயனளவை யறிந்தவர் அதைப் பனையளவினதாகிய பேருதவியாகக் கருதுவர்.

‘தினை’ ‘பனை’ என்னும் நிலைத்திணைப் பெயர்கள் இங்குச் சிறுமை பெருமை குறிக்கும் அளவைப் பெயர்களாக வந்தன, ‘உம்மை’ இழிவு சிறப்பு. ஒருவர் செய்த வுதவியைப் பொருளளவிலும் முயற்சியளவிலும் நோக்காது பயனளவில் நோக்க வேண்டு மென்பது, இங்குக் கூறப்பட்டது.

**

கலைஞர் உரை

ஒருவர்  செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும்

நன்றியுள்ளவர்  பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக்

கருதுவார்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Each benefit to those of actions’ fruit who rightly deem,

Though small as millet-seed, as palm-tree vast will seem.

**

Yogi Shuddhananda Translation

Help given though millet- small

Knowers count its good palm- tree tall.

**

105      

உதவி வரைத்தன் றுதவி யுதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.

பரிமேலழகர் உரை

உதவி உதவி வரைத்து அன்று – கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து – அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று. ‘(சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்’ என்பார், “சால்பின்” வரைத்து என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

கைம்மாறாகச் செய்யும் உதவி முன்செய்த உதவியின் அளவை உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

**

மணக்குடவர் உரை

முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி: அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி.

இது மாற்றுதவிக்கு அளவில்லை என்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

1`

உதவி உதவி வரைத்து அன்று -கைம்மாறான உதவி காரணத்தானும் பொருளானுங் காலத்தானுமாகிய மூவகையானும் முன் செய்த உதவியளவினதன்று ; உதவி செயப் பட்டார் சால்பின் வரைத்து-அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதியளவிற்று.

பெரும்பாலும் இக்கருத்தைத் தழுவியே மணக்குடவ பரிதி காளிங்கர் உரைகளும் உள்ளன.

இக்குறள் கைம்மாறு பற்றியது என்பதற்கு அதில் ஒரு குறிப்புமில்லை. செய்யாமற் செய்ததும் காலத்தினாற் செய்ததும் கைம்மாறு கருதாமற் செய்ததும் பயனளவிற் பெரியதுமான நன்றிகள் இதுவரை கூறப்பட்டன. அவையல்லாது, பெரியார்க்குச் செய்த நன்றியென்றும் ஒரு சிறப்புவகை யுளது. அதுவே இக்குறளிற் கூறப்பட்டுள்ளது.

உதவி உதவி வரைத்தன்று-ஒருவர் ஒருவர்க்குச் செய்த நன்றி மேற் கூறிய நால்வகை யுதவியளவினது மட்டுமன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து-நன்றி செய்யப்பட்டவரின் மேன்மையளவினது மாகும்.

இது, “இனைத்துணைக் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்”.

என்னுங் கருத்தை யொத்தது. அங்குக் கூறியது விருந்தோம்பல் பற்றியது. இங்குக் கூறியது வேறு வகை நன்றி பற்றியது. எச்ச வும்மை தொக்கது.

   “The kindly aid’s extent is of its worth no measure true

   It’s worth is as the worth of him to whom the act you do.”

-G. U. P

   “The benefit itself is not the measure of the benefit, the worth

   of those who have received it is the measure.”

-W.H.D

   “Help has no measure of its own. Its worth is as much as the

   worth of the recipient.”

-M.S.P

**

கலைஞர் உரை

உதவி      என்பது,     செய்யப்படும்    அளவைப்     பொறுத்துச்

சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப்  பொறுத்தே

அதன் அளவு மதிப்பிடப்படும்.

 **

Rev. Dr. G.U.Pope Translation

The kindly aid’s extent is of its worth no measure true;

It’s worth is as the worth of him to whom the act you do.

**

Yogi Shuddhananda Translation

A help is not the help’s measure

It is gainer’s worth and pleasure.

**

106      

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துட் டுப்பாயார் நட்பு.

பரிமேலழகர் உரை

துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க – துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க – அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.)

**

மு.வரதராசனார் உரை

குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறத்தலாகாது, துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடலாகாது.

**

மணக்குடவர் உரை

தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினர் நட்பை விடாதொழிக: எக்காலத்துங் குற்றமற்றாரது நட்பை மறவாதொழிக.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

துன்பத்துள் துப்பு ஆயார் நட்புத் துறவற்க-துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை விடாதிருக்க; மாசு அற்றார் கேண்மை மறவற்க-மனத்திற் குற்றமற்றவரது உறவை மறவாதிருக்க.

மாசற்றார் கேண்மை இம்மைக்கும் மறுமைக்கும் பலவகையில் உதவும் என்பது கருத்து.

**

கலைஞர் உரை

மாசற்றவர்களின்    உறவை   மறக்கவும்  கூடாது; துன்பத்தில் துணை

நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Kindness of men of stainless soul remember evermore!

Forsake thou never friends who were thy stay in sorrow sore!

**

Yogi Shuddhananda Translation

Forget not friendship of the pure

Forsake not timely helpers sure.

**

107      

எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.

பரிமேலழகர் உரை

தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு – தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் – எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். (‘எழுமை’ என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள் 62) விரைவு தோன்றத் ‘துடைத்தவர்’ என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது,)

**

மு.வரதராசனார் உரை

தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

**

மணக்குடவர் உரை

தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு-தங்கட்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினவருடைய நட்பை; எழுமை யெழுபிறப்பும் உள்ளுவர்-ஏழேழு பிறவியளவும் அன்புடன் நினைப்பர் நன்றியறிவுடையோர்.

எழுவகைப் பிறப்பிலும் நினைப்பர் என்பது பகுத்தறிவிற்குப் பொருந்தாமையின், ஏழேழ் மக்கட் பிறப்பு என உரைக்கப்பட்டது. அதுவும் உயர்வு நவிற்சியே. ஏழேழு என்பது கழிநெடுங் காலத்தைக் குறிக்க வந்த இருமடி நிறைவெண். நீக்கின வினையின் விரைவும் நிறைவுந் தோன்றத் ‘துடைத்தல்’ என்றார்.

**

கலைஞர் உரை

ஏழேழு    தலைமுறைக்கு   என்றும்  ஏழேழு   பிறவிக்கு   என்றும்

மிகைப்படுத்திச்      சொல்லுவதுபோல,    ஒருவருடைய    துன்பத்தைப்

போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப்  போற்றுவதற்குக்   கால

எல்லையே கிடையாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Through all seven worlds, in seven – fold birth,

  Remains in mem’ry of the wise,

Friendship of those who wiped on earth,

  The tears of sorrow from their eyes.

**

Yogi Shuddhananda Translation

Through sevenfold births, in memory fares

The willing friend who wiped one’s tears.

**

108      

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல

தன்றே மறப்பது நன்று.

பரிமேலழகர் உரை

நன்றி மறப்பது நன்று அன்று -ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று; நன்று அல்லது அன்றே மறப்பது நன்று – அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன். (இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவர் முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.

**

மணக்குடவர் உரை

பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல: பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம்.

இது தீமையை மறக்க வேண்டுமென்று கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நன்றி மறப்பது நன்று அன்று-ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறனன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று-அவர் செய்த தீமையை அன்றே மறப்பது அறனாவது.

நன்றி மறப்பதென்பது மறந்து ஈடான நன்மை செய்யாமையும் தீமை செய்தலுமாம். நன்றல்லது மறப்பதென்பது மறந்து எதிர்த் தீமை செய்யாமையும் நன்மை செய்தலுமாம்.

**

கலைஞர் உரை

ஒருவர்  நமக்குச்  செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை

செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘Tis never good to let the thought of good things done thee pass away;

Of things not good, ’tis good to rid thy memory that very day.

**

Yogi Shuddhananda Translation

To forget good turns is not good

Good it is over wrong not to brood.

**

109      

கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த

வொன்றுநன் றுள்ளக் கெடும்.

பரிமேலழகர் உரை

கொன்று அன்ன இன்னா செயினும் – தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர், பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் – அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம். (தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

முன் செய்த உதவி செய்தவர் பின்பு கொன்றாற் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

**

மணக்குடவர் உரை

தமக்கு முன்பு நன்மை செய்தார் தம்மைக் கொன்றாலொத்த இன்னாமையைப் பின்பு செய்யினும் அவர் முன்பு செய்த நன்றி யொன்றை நினைக்க அவ்வின்னாமை யெல்லாங் கெடும்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

கொன்ற அன்ன இன்னா செயினும்-தமக்கு முன் பொருகால் ஒரு நன்மை செய்தவர் பின்பு கொன்றாற் போன்றபெருந் தீமைகளைச் செய்தாராயினும்; அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும்-அவையெல்லாம் அவர் செய்த நன்மை யொன்றையே நினைத்த மட்டில் நன்றியறிவுடையார் மனத்தில் இல்லாமல் மறைந்துபோம்.

இஃது உண்மையான அல்லது தலையாய நன்றியறிவுடையார் செயலாம்.

**

கலைஞர் உரை

ஒருவர்  செய்யும்  மிகக்  கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப்

புண்படுத்தாமல்   அகன்றுவிட   வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர்

நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Effaced straightway is deadliest injury,

By thought of one kind act in days gone by.

**

Yogi Shuddhananda Translation

Let deadly harms be forgotten

While remembering one good-turn.

**

110      

எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

பரிமேலழகர் உரை

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் – பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை – ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை. (பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

**

மணக்குடவர் உரை

எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்-எத்துணப் பெரிய அறங்களைக் கெடுத்தவர்க்கும் அத்தீவினைகள் நீங்கும் கழுவாய் ( பிராயச் சித்தம்) உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை-ஆயின், ஒருவர் செய்த நன்றியைக் கெடுத்தவனுக்கோ தப்பும் வழியே இல்லை.

பேரறக் கெடுப்புகளாவன, ஆவின் மடியறுத்தலும் குழவிகளையும் நிறை சூலியரையும் தூய துறவியரையுங் கொல்லுதலும், ஊருண்ணுங் கிணற்றில் நஞ்சிடுதலும், இவை போல்வன பிறவுமாம்.

 **

கலைஞர் உரை

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர்  செய்த

உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who every good have killed, may yet destruction flee;

Who ‘benefit’ has killed, that man shall ne’er ‘scape free!

**

Yogi Shuddhananda Translation

The virtue-killer may be saved

Not benefit-killer who is damned.

**

×