12 நடுவு நிலைமை

அதிகாரம் 12.

நடுவுநிலைமை

111      

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்

பாற்பட்ட டொழுகப் பெறின்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, பகை ,நொதுமல்,நட்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை .இது நன்றி செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்தவழிச் சிதையுமன்றே? அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்குச் செய்ந்நன்றி அறிதலின்கண் வைக்கப்பட்டது.)

தகுதி என ஒன்றே நன்று – நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் – பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். (தகுதி உடையதனைத் ‘தகுதி’ என்றார்.”ஊரானோர் தேவகுலம்” என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு’தோறு’ம் தன் பொருட்டாய் நின்றது. ‘பெறின்’ என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

**

மணக்குடவர் உரை

நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்-பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப் பெறின்; தகுதி என ஒன்றே நன்று-நேர்மை என்று சொல்லப்படும் ஒர் அறமே நல்லதாம்.

தகுதி என்ற சொல்லால் இங்குக் குறிக்கப்பட்டது நடுவுநிலை. தமிழரின் ஏமாளித்தனத்தினால் ‘யோக்கியதை’ என்னும் வடசொல் வழக்கூன்றவே தகுதி என்னும் தகுந்த தமிழ்ச்சொல் வழக்கு வீழ்ந்தது. ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. ‘பகுதியான்’ என்பது பகுதிதொறும் என்று பொருள் படுதலால், ஆனுருபு உடனிகழ்ச்சிப் பொருளது. ‘பெறின்’ என்பது அவ்வொழுக்கத்தின் அருமை தோன்ற நின்றது.

**

கலைஞர் உரை

பகைவர், அயலோர்,  நண்பர்  எனப்  பகுத்துப்  பார்த்து  ஒருதலைச்

சார்பாக  நிற்காமல்  இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும்

தகுதியாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

If justice, failing not, its quality maintain,

Giving to each his due, -’tis man’s one highest gain.

**

Yogi Shuddhananda Translation

Equity is supreme virtue

It is to give each man his due.

**

112      

செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி

யெச்சத்திற் கேமாப் புடைத்து.

பரிமேலழகர் உரை

செப்பம் உடையவன் ஆக்கம் – நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் ‘எச்சம்’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியிலுள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

**

மணக்குடவர் உரை

நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து.

நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

செப்பம் உடையவன் ஆக்கம்-நடுவுநிலைமை யுடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து-பிறர் செல்வம் போல் அழியாது அவன் வழியினர்க்கும் வலிமையாதலை யுடையது. வலிமை-பாதுகாப்பு.

எச்சவும்மை தொக்கது. ஒருவனுக்குப் பின் எஞ்சி நிற்பதாகலின் வழிமரபு எச்சமெனப்பட்டது.

**

கலைஞர் உரை

நடுவுநிலையாளனின்  செல்வத்திற்கு   அழிவில்லை;  அது,  வழிவழித்

தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The just man’s wealth unwasting shall endure,

And to his race a lasting joy ensure.

**

Yogi Shuddhananda Translation

Wealth of the man of equity

Grows and lasts to posterity.

**

113      

நன்றே தரினு நடுவிகந்தா மாக்கத்தை

யன்றே யொழிய விடல்.

பரிமேலழகர் உரை

நன்றே தரினும் – தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் -நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக. (நன்மை பயவாமையின் நன்றே தரினும் என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச்செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.)

**

மு.வரதராசனார் உரை

தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவுநிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

**

மணக்குடவர் உரை

பெருமையே தரினும் நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நன்றே தரினும்-அறவழியில் வந்த செல்வம் போல் நன்மையே விளைப்பினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்-நடுவுநிலை திறம்புவதால் வரும் செல்வத்தை அப்பொழுதே விட்டு விடுக.

நன்மை தராமையின் ‘நன்றே தரினும்’ என்பது எதிர்மறை யும்மை தன்னை மட்டுமன்றித் தன் எச்சத்தையுந் தாக்குமாதலின், ‘அன்றேயொழிய விடல்’ என்றார். விடல் என்பது அல்லீற்று வியங்கோள்.

**

கலைஞர் உரை

நடுவுநிலை  தவறுவதால்   ஏற்படக்கூடிய   பயன் நன்மையையே தரக்

கூடியதாக   இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான்

கடைப்பிடிக்க வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Though only good it seem to give, yet gain

By wrong acquired, not e’en one day retain!

**

Yogi Shuddhananda Translation

Though profitable, turn away

From unjust gains without delay.

**

114      

தக்கார் தகவில ரென்ப தவரவ

ரெச்சத்தாற் காணப் படும்.

பரிமேலழகர் உரை

தக்கார் தகவிலர் என்பது – இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் – அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

**

மணக்குடவர் உரை

செவ்வை யுடையார் செவ்வையிலரென்பது அவரவர் ஆரவாரத்தொழிலினானே காணப்படும்.

இது தம்மளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று. (இதனால் எச்சத்தால் என்பதற்கு மக்களானே என்றுரையிருக்கலாமென்பது விளங்குகின்றது.)

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தக்கார் தகவு இல்லர் என்பது-இவர் நேர்மை யுடையவர் அல்லது இல்லாதவர் என்னும் உண்மை; அவரவர் எச்சத்தால் காணப்படும்-அவரவருடைய மக்களால் அறியப்படும்.

தக்கார்க்கு நன்மக்களும் தகவிலார்க்குப் புன்மக்களும் பிறத்தல் இயல்பாதலின் , ‘அவரவர் எச்சத்தாற் காணப்படும்’ என்றார். எச்சம் என்னும் சொல் , மக்களின் வாழ்க்கை மட்டுமன்றிப் பெற்றோரின் முகத்தோற்றமும் குணவமைதியும் எஞ்சி நிற்பதைக் குறிக்கும் . அதனால் , மக்கள் என்னுஞ் சொல்லினும் தகுதியும் பொருட்பொலிவு முடையதாம் .

‘யோக்கியர்’ என்னும் வடசொல் வழக்கூன்றியதால் , தக்கார் என்னும் தமிழ்சொல் வழக்கற்றதென அறிக .

**

கலைஞர் உரை

ஒருவர்  நேர்மையானவரா  அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா

என்பது  அவருக்குப்  பின்  எஞ்சி  நிற்கப்  போகும்  புகழ்ச் சொல்லைக்

கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who just or unjust, lived shall soon appear;

By each one’s offspring shall the truth be clear.

**

Yogi Shuddhananda Translation

The worthy and the unworthy

Are seen in their posterity.

**

115      

கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு கணி.

பரிமேலழகர் உரை

கேடும் பெருக்கமும் இல் அல்ல – தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி – அவ்வாற்றை யறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது. (அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். ‘அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

**

மணக்குடவர் உரை

கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல: அவ்விரண்டினுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

கேடும் பெருக்கமும் இல் அல்ல – பழம் பிறப்பிற் செய்த தீவினையாற் கேடும் நல்வினையால் ஆக்கமும் ஏற்கெனவே எல்லார்க்கும் வகுக்கப்பட்டிருத்தலால் , அவை இப்பிறப்பில் யார்க்கும் இல்லாத வையல்ல ; நெஞ்ச்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி – ஆதலால் இவ்வுண்மையறிந்து வரும் பிறப்பிலும் கேடு நேராதவாறு மனத்துக்கண் ஒருபாற் கோடாமை , அறிவுநிறைந்தோர்க்கு அழகாம்.

அறிவுநிறைந்தோரும் உண்மையறியாது நடுவிகந்தா மாக்கம் விரும்பி ஒருபாற் கோடுவராயின் , தம் சிறப்பிழந்து பிறர்போலாவர் என்பது கருத்து.

**

கலைஞர் உரை

ஒருவர்க்கு    வாழ்வும்,   தாழ்வும்   உலக  இயற்கை;  அந்த   இரு

நிலைமையிலும்  நடுவுநிலையாக  இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு

அழகாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The gain and loss in life are not mere accident;

Just mind inflexible in sage’s ornament.

**

Yogi Shuddhananda Translation

Loss and gain by cause arise;

Equal mind adorns the wise.

**

116      

கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச

நடுவொரீஇ யல்ல செயின்.

பரிமேலழகர் உரை

தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் – ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக – அந்நினைவை ‘யான் கெடக்கடவேன்’ என்று உணரும் உற்பாதமாக அறிக. (நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், ‘செயின்’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

தன் நெஞ்சம் நடுவுநிலைமை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், `நான் கெடப்போகின்றேன்’ என்று ஒருவன் அறிய வேண்டும்.

**

மணக்குடவர் உரை

தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யுமாயின் அஃதேதுவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் – ஒருவன் தன் மனம் நடுநிலை திறம்பித் தீயவற்றைச் செய்யக் கருதுமாயின் ; யான் கெடுவல் என்பது அறிக – அக்கருத்தையே தன் கேட்டை முன்னறிவிக்குந் தீக்குறியாகக் கொண்டு , ” நான் இனிக்கேடடைவேன் , ” என்று திட்டமாய் அறிந்து கொள்க.

கருதுதல் மனத்தின் செயலாதலின் ‘ செயின் ‘ என்றார் . ஒருவி என்பது ஒரீஇ என அளபெடுத்தது இன்னிசை யளபெடை . நெஞ்சார நடுநிலை திறம்புவார்க்கு எச்சரிக்கை இக்குறளாற் கூறப் பட்டது.

**

கலைஞர் உரை

நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு

வந்துவிடுமானால்  அவன்  கெட்டொழியப்  போகிறான் என்று அவனுக்கே

தெரிய வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

If, right deserting, heart to evil turn,

Let man impending ruin’s sign discern!

**

Yogi Shuddhananda Translation

Of perdition let him be sure

Who leaves justice to sinful lure.

**

117      

கெடுவாக வையா துலக நடுவாக

நன்றிக்கட் டங்கியான் றாழ்வு.

பரிமேலழகர் உரை

நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு – நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம் – வறுமை என்று கருதார் உயர்ந்தோர். (கெடு என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். ‘செல்வம் என்று கொள்ளுவர் என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா என்பதூஉம். கோடுதல் கேட்டிற்கேதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடு அன்று என்பதூஉம் கூறப்பட்டன.)

**

மு.வரதராசனார் உரை

நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என்று கொள்ளாது உலகம்.

**

மணக்குடவர் உரை

நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின் அதனை உலகத்தார் கேடாகச் சொல்லார். ஆக்கத்தோடே யெண்ணுவர்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு – நடுநிலை நின்று அறத்தின்கண் தங்கினவனது வறுமையை ; உலகம் கெடுவாக வையாது – உயர்ந்தோர் கேடாகக் கருதார் .

‘கேடு’ என்பது முதனிலைத் தொழிற் பெயர் . உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே “உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர் ” (திருமுரு . கஉச). கெடுவாக வையாது எனவே , செல்வமாகக் கொள்ளும் என்பது கருத்து .

“ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்

விற்றுக்கோட் டக்க துடைத்து .”

(220)

என்பதால் அறத்தினால் வருங்கேடெல்லாம் விரும்பத் தக்கது என்பதே அறிஞர் கொள்கை.

**

கலைஞர் உரை

நடுவுநிலைமை   தவறாமல்  அறவழியில்  வாழ்கிற  ஒருவருக்கு அதன்

காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை

உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

The man who justly lives, tenacious of the right,

In low estate is never low to wise man’s sight.

**

Yogi Shuddhananda Translation

The just reduced to poverty

Is not held down by equity.

**

118      

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க் கணி.

பரிமேலழகர் உரை

சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் – முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம் போல; அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம். (உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர் தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர்தூக்கலாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும், ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க.)

**

மு.வரதராசனார் உரை

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர் தூக்கும் துலாக்கோல்போல் அமைந்து, ஒரு பக்கமாகச் சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

**

மணக்குடவர் உரை

சமன்வரைப்பண்ணி யிரண்டுதலையுஞ் சீரொத்தால் தூக்கிப் பார்க்கப்படுகின்ற கோலைப்போல, வீக்கம் தாக்கமற்று ஒருவன் பக்கமாக நெஞ்சைக் கோடவிடாமை சான்றோர்க்கு அழகாவது.

இது நடுவுநிலைமை வேண்டுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் – இயல்பாகச் சமனாக நின்று தன்கண் வைத்த பொருளின் நிறையை வரையறுத்துக்காட்டும் துலாக்கோல் போல் ; அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – மனத்திற் சம நிலையாக விருந்து ஒரு பக்கஞ்சாயாது உண்மை யுரைத்தல் அறிவு நிறைந்தோர்க்கு அழகாம் .

சமன் செய்தலும் சீர் தூக்கலும் ஆகிய உவம வடைகள் , முறையே , அமைதலும் ஒருபாற்கோடாமையும் ஆகிய பொருளடைகளை ஒப்பனவாம் . ஒருபாற் கோடாமையாவது , துலாக்கோல் சீர்தூக்கிப் பொருள்களின் நிறையை உள்ளவாறு காட்டுதல்போல , முத்திறத்தாரிடத்தும் ஒத்து நின்று ஆய்ந்து கண்ட உண்மையை உள்ளவாறுரைத்தல் . இங்குக் கோடாமை என்றது கோடாதிருந்து உண்மையுரைத்தலை . ஆகவே , ஒருபாற்கோடாமையுள்ளேயே ஆய்ந்துண்மை காண்டலும் அடங்கிற்றென அறிக . இது ‘ கவர்ந் தற்று ‘ என்றது கவர்ந்துண்டலைக் குறித்தது போன்றதாம்.

**

கலைஞர் உரை

ஒரு  பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து

நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

To stand, like balance rod that level hangs and rightly weighs,

With calm unbiassed equity of soul, is sages’ praise.

**

Yogi Shuddhananda Translation

Like balance holding equal scales

A well poised mind is jewel of the wise.

**

119      

சொற்கோட்ட மில்லது செப்ப மொருதலையா

வுட்கோட்ட மின்மை பெறின்.

பரிமேலழகர் உரை

செப்பம் சொற்கோட்டம் இல்லது – நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் (சொல் : ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது. அஃது அன்னதாவது மனத்தின் கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின் என்றவாறு.)

**

மு.வரதராசனார் உரை

உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லினும் கோணுதல் இல்லா திருத்தல் நடுவுநிலைமையாம்.

**

மணக்குடவர் உரை

நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம்: உறுதியாக மனக்கோட்ட மின்மையோடு கூடுமாயின்.

இது நடுவுநிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம் இது பொருட் பொதுமொழி கூறதலன்றென்பதூஉம் கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

செப்பம் சொல் கோட்டம் இல்லது – நடுவுநிலைமையாவது ஆய்ந்து கூறும் தீர்ப்பின்கண் சிறிதும் சொற்கோடுதல் இல்லதாம் ; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் – அது அங்ஙனம் நிகழ்வது மனத்தின்கண் கோட்டமின்மையை முழுவுறுதியாகப் பெற்றவிடத்தே .

மனம் வாய் மெய் என்னும் முக்கரணங்களுள் மனமே ஏனை யிரண்டிற்கும் மூலமாதலாலும், மனத்துக்கண் மாசிலனாதலே அறமாதலாலும், சொற்கோட்ட மில்லா நடுவுநிலைக்கு உட்கோட்ட மின்மை இன்றியமையாத தென்றார். ஆயினும், கண்ணன்ன கேளிருக்கும் பெருநன்றி செய்தவர்க்கும் செல்வத்தாலும் அதிகாரத்தாலும் ஆட்டுணையாலும் வலியவர்க்கும் கருதியது செய்து முடிக்கும் கயவருக்கும் மாறாக, உயிர்நாடிச் செய்திகளில் உண்மை கூறுவதற்குத் தெய்வத் தன்மையான மனச்சான்றும் இறுதிவரினும் அஞ்சாத் தறுகண்மையும் வேண்டியிருத்தலின், அவையிரண்டும் அமையும் அருமை நோக்கி, ‘உட்கோட்ட மின்மை பெறின்’ என்றார்.

**

கலைஞர் உரை

நேர்மையும்  நெஞ்சுறுதியும்  ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில்

நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

 **

Rev. Dr. G.U.Pope Translation

Inflexibility in word is righteousness,

If men inflexibility of soul possess.

**

Yogi Shuddhananda Translation

Justice is upright, unbending

And free from crooked word-twisting.

**

120      

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவுந் தமபோற் செயின்.

பரிமேலழகர் உரை

பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம் – வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம். (பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின்; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.)

**

மு.வரதராசனார் உரை

பிறர் பொருளையும் தம்பொருள்போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.

**

மணக்குடவர் உரை

வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம், பிறர் பொருளையுந் தமது பொருள்போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின்.

வாணிகம் – இலாபம்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பிறவும் தம்போல் பேணிச் செயின்-பிறர் பொருளையுந் தம் பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம்-வாணிகஞ் செய்வார்க்கு நடுநிலையான நல்வாணிகமாம்.

“கொடுமேழி நசையுழவர்

நெடுநுகத்துப் பகல்போல

நடுவுநின்ற நன்னெஞ்சினோர்

வடுவஞ்சி வாய்மொழிந்து

தமவும் பிறவு மொப்ப நாடிக்

கொள்வதூஉ மிகைகொளாது

கொடுப்பதூஉங் குறைகொடாது

பல்பண்டம் பகர்ந்து வீசும்”

(பட்டினப். 205-211)

வாணிகம் கொள்வினையையும் விற்பனையையும் ஒப்பக் கருதுவதனாலும், பொய்க்குங் கொள்ளைக்கும் இடந்தராமையாலும், மொத்த வணிகர் சில்லறை வணிகர் கொள்வோர் ஆகிய முத்திறத்தார்க்கும் தீதுங்கேடுமில்லா நல்வாணிகமாம்.

**

கலைஞர் உரை

பிறர்  பொருளாக  இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே

கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

As thriving trader is the trader known,

Who guards another’s interests as his own.

**

Yogi Shuddhananda Translation

A trader’s trade prospers fairly

When his dealings are neighbourly.

**

×