16 பொறை உடைமை

அதிகாரம் 16.

பொறை உடைமை

151      

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

யிகழ்வார்ப் பொறுத்த றலை.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, காரணம் பற்றியாதல், மடைமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கண் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும் பொறுக்க வேண்டும் என்றற்கு, இரு பிறன்இல் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.)

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)

**

மு.வரதராசனார் உரை

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

**

மணக்குடவர் உரை

தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம்.

இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அகழ்வாரைத் தாங்கு நிலம்போல – தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலம்போல;தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை – தம்மை மதியாது தீங்கு செய்தாரைப் பொறுத்தல் தலையாய அறமாம்.

இகழ்தல் புகழ்தலுக்கு எதிர். அது இங்கு மதியாது சொல்லும் சொல்லை மட்டுமன்றிச் செய்யுஞ் செயலையுங் குறித்தது.

**

கலைஞர் உரை

தன்மீது  குழி  பறிப்போரையே  தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை

இகழ்ந்து   பேசுகிறவர்களின்   செயலையும்  பொறுத்துக்     கொள்வதே

தலைசிறந்த பண்பாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

As earth bears up the men who delve into her breast,

To bear with scornful men of virtues is the best.

**

Yogi Shuddhananda Translation

As earth bears up with diggers too

To bear revilers is prime virtue.

**

152      

பொறுத்த லிறப்பினை யென்றும் மதனை

மறத்த லதனின்று நன்று.

பரிமேலழகர் உரை

என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று. (‘மிகை’ என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை ‘அதனினும் நன்று’ என்றார்)

**

மு.வரதராசனார் உரை

வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது.

**

மணக்குடவர் உரை

பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இறப்பினை என்றும் பொறுத்தல் – பொறை நன்றாதலால் , பிறர் செய்த மிகையை எக்காலத்தும் பொறுத்துக் கொள்க; அதனை மறத்தல் அதனினும் நன்று – இனி , அதை மனத்திற் கொள்ளாது அப்பொழுதே அடியோடு மறக்க முடியுமாயின் அது அப்பொறையினும் நன்றாம்.

பழிக்குப் பழி வாங்கக்கூடிய அல்லது தீங்கு செய்தாரைத் தண்டிக்கக் கூடிய காலத்துப் பொறுத்துக் கொள்ளுதலே உண்மையான பொறையாதலின், அக்காலமும் அடங்க ‘என்றும்’ என்றார். இறப்பு சொல்லிலும் செயலிலும் நெறி கடந்த நடத்தை. அதைப் பொறுத்த காலத்தும் அது உள்ளத்திலிருத்தலால் , மறத்தல் அதனினும் நன்றென்றார். மறத்தலாவது தீங்கு செய்தாரை நட்பாகக் கருதுதலும் அவருக்கு நன்மை செய்தலும். ‘பொறுத்தல்’ வியங்கோள் வினை.

**

கலைஞர் உரை

அளவுகடந்து   செய்யப்பட்ட    தீங்கைப்   பொறுத்துக் கொள்வதைக்

காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Forgiving trespasses is good always;

Forgetting them hath even higher praise.

**

Yogi Shuddhananda Translation

Forgive insults is a good habit

Better it is to forget it.

**

153      

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

பரிமேலழகர் உரை

இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல். [இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.]

**

மு.வரதராசனார் உரை

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

**

மணக்குடவர் உரை

வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல்.

புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இன்மையுள் இன்மை விருந்து ஒரால் – ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது விடுதல் ; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை – அதுபோல வலிமையுள் வலிமையாவது அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்துக் கொள்ளுதல்.

இது ஓர் உவமியத்திற்கு வேறோர் உவமியத்தை உவமமாக்கிய எடுத்துக் காட்டுவமை. ஒரால்-ஒருவுதல். உவமியம் பொருள்.

**

கலைஞர் உரை

வறுமையிலும்    கொடிய   வறுமை; வந்த  விருந்தினரை   வரவேற்க

முடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின்

செயலைப் பொறுத்துக் கொள்வது.

**

Rev. Dr. G.U.Pope Translation

The sorest poverty is bidding guest unfed depart;

The mightiest might to bear with men of foolish heart.

**

Yogi Shuddhananda Translation

Neglect the guest is dearth of dearth

To bear with fools is strength of strength.

**

154      

நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை

போற்றி யொழுகப் படும்.

பரிமேலழகர் உரை

நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுக்கப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும். (பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

**

மணக்குடவர் உரை

தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின், பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும்.

நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நிறையுடைமை நீங்காமை வேண்டின் – ஒருவன் நற்குண நிறைவு தன்னிடத்தினின்று நீங்காமையை விரும்பின்; பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – அவனாற் பொறையுடைமை பேணிக்காத் தொழுகப்படும்.

பொறையுடைமை யின்றி நற்குண நிறைவில்லை யென்றவாறு . படும் என்பது வேண்டும் என்று பொருள்படும் துணைவினையுமாம்.

**

கலைஞர் உரை

பொறுமையின்   உறைவிடமாக  இருப்பவரைத்தான் நிறைவான மனிதர்

என்று உலகம் புகழும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Seek’st thou honour never tarnished to retain;

So must thou patience, guarding evermore, maintain.

**

Yogi Shuddhananda Translation

Practice of patient quality

Retains intact integrity.

**

155      

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

பரிமேலழகர் உரை

ஒறுத்தாரை ஒன்றாக வையார் – பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் – அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், ‘ஒன்றாகவையார்’ என்றார். ‘பொதிந்து வைத்தல்’, சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.)

**

மு.வரதராசனார் உரை

(தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால் பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

**

மணக்குடவர் உரை

தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஒறுத்தாரை ஒன்றாக வையார் – பிறன் செய்த தீங்கைப் பொறாது அவனைத் தண்டித்தாரை அறிவுடையோர் ஒரு பொருட்டாகக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் – ஆனால் அத்தீங்கைப் பொறுத்தாரையோ பொன்போற் போற்றி வைத்துக் கொள்வர்.

தீங்கு செய்தவனைத் தண்டித்தவரும் அத் தீங்கு செய்தவனை யொத்தலின் , ‘ஒன்றாக வையார்’ என்றார். பொன்போற் பொதிதலாவது மிக மேன்மையாகப் போற்றுதல். ஏகாரம் தேற்றம்.

**

கலைஞர் உரை

தமக்கு   இழைக்கப்படும்   தீமையைப்   பொறுத்துக் கொள்பவர்களை

உலகத்தார்   பொன்னாக   மதித்துப்     போற்றுவார்கள்.    பொறுத்துக்

கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who wreak their wrath as worthless are despised;

Who patiently forbear as gold are prized.

**

Yogi Shuddhananda Translation

Vengeance is not in esteem held

Patience is praised as hidden gold.

**

156      

ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்.

பரிமேலழகர் உரை

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் – தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் – அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம். [ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் ‘கருதியது முடித்தேம்’ எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய ‘உலகு’ என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது]

**

மு.வரதராசனார் உரை

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

**

மணக்குடவர் உரை

ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம்.

இது புகழுண்டா மென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் – தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளை யின்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் -ஆனால், அத்தீங்கைப் பொறுத்தார்க்கோ உலகம் அழியும்வரையும் புகழுண்டாம்.

‘ஒருநாளை யின்பம்’ சரிக்குச் சரி செய்தேம் என்னும் பொந்திகை (திருப்தி). புகழ் உலகமுள்ள காலமெல்லாம் தொடருமாதலால் , பொன்றுதல் இங்கு உலகத்தின் தொழில்.

**

கலைஞர் உரை

தமக்குக்   கேடு  செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த

ஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம்  எனப்

பொறுமை கடைப் பிடிப்போருக்கோ,  வாழ்நாள்  முழுதும்   புகழ்மிக்கதாக

அமையும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who wreak their wrath have pleasure for a day;

Who bear have praise till earth shall pass away.

**

Yogi Shuddhananda Translation

Revenge accords but one day’s joy

Patience carries its praise for aye.

**

157      

திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்

தறனல்ல செய்யாமை நன்று.

பரிமேலழகர் உரை

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் – செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று – அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று. [உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது “உம்மை – எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்” (நாலடி. 58) என்று பரிதல்.]

**

மு.வரதராசனார் உரை

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து அறம் அல்லாதவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

**

மணக்குடவர் உரை

தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும் அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் -செய்யத்தகாத கொடியவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று — அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக உளம் நொந்து அறனல்லாதவற்றைத் தான் அவர்க்கு செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நல்லதாம்.

உம்மை உயர்வு சிறப்பு. துன்பத்திற்கு நோதலைத்

“தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்

றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் – உம்மை

எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று

பரிவதூஉம் சான்றோர் கடன்”

(58)

என்னும் நாலடியார்ச் செய்யுளால் அறிந்து கொள்க.

**

கலைஞர் உரை

பிறர் செய்திடும் இழிவான  காரியங்களுக்காகத்   துன்பமுற்று  வருந்தி;

பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி  வாங்காமலிருப்பதுதான் சிறந்த

பண்பாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Though others work thee ill, thus shalt thou blessing reap;

Grieve for their sin, thyself from vicious action keep!

**

Yogi Shuddhananda Translation

Though others cause you wanton pain

Grieve not; from unjust harm refrain.

**

158      

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்

தகுதியான் வென்று விடல்.

பரிமேலழகர் உரை

மிகுதியான் மிக்கவை செய்தாரை – மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் – தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்.

**

மணக்குடவர் உரை

தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக.

இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

மிகுதியான் மிக்கவை செய்தாரை – செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரை ; தாம் தம் தகுதியான் வென்று விடல் – தாம் தம் பொறையினால் வென்று விடுக.

சரிக்குச் சரி தீங்கு செய்யும் இழுக்க வெற்றி ஒழுக்கத் தோல்வி யென்றும்; தீயவை செய்தாரைப் பொறுத்துக் கொள்ளும் ஒழுக்க வெற்றியே உண்மையான வெற்றி யென்றும் உணர்த்தற்குத் ‘தகுதியான் வென்று விடல்’ என்றார். ‘விடல்’ வியங்கோள் வினை.

**

கலைஞர் உரை

ஆணவங்கொண்டு  அநீதி  விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக்

குணத்தால் வென்று விடலாம்.

**

Rev. Dr. G.U.Pope Translation

With overweening pride when men with injuries assail,

By thine own righteous dealing shalt thou mightily prevail.

**

Yogi Shuddhananda Translation

By noble forbearance vanquish

The proud that have caused you anguish.

**

159      

துறந்தாரிற் தூய்மை யுடையா ரிறந்தார்வா

யின்னாச்சொ னோக்கிற் பவர்.

பரிமேலழகர் உரை

துறந்தாரின் தூய்மை உடையர் – இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் – நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர். (தூய்மை : மனம் மாசு இன்மை. ‘வாய்’ என வேண்டாது கூறினார், ‘தீய சொற்கள் பயின்றது’ எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.)

**

மு.வரதராசனார் உரை

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

**

மணக்குடவர் உரை

மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார்.

இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர்-நெறி கடந்த கீழ் மக்களின் வாயினின்று வரும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றலுடைய மேன்மக்கள்; துறந்தாரின் தூய்மை உடையர் – இல்லறத்தின் கண் நின்றாலும் துறவியர் போல மனத் தூய்மையுடைய ராவர்.

‘வாய்’ என மிகைபடக் கூறியது, கீழோர் வாயினின்று தீய சொற்களே மிகுதியாக வரும் என்பதை உணர்த்தற்கு. ஐந்தாம் வேற்றுமை யின்னுருபு உறழ் பொருளிற்கே யுரியதாதலால், துறந்தாரைவிடத் தூயர் எனினுமாம். சுடுகின்ற வெயிலைப் பொறுத்தலினும் சுடுகின்ற சொல்லைப் பொறுத்தல் அரிதாதல் காண்க. ‘கில்’ ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வெயில் பிறப்பிக்காத சினத்தைச் சுடுசொல் பிறப்பித்தலால், அதைப் பொறுத்துக் கொள்ளுதலே மிகுந்த மனத் தூய்மையைக் காட்டும் என்பது கருத்து.

**

கலைஞர் உரை

எல்லை  கடந்து   நடந்துகொள்பவர்களின்    கொடிய   சொற்களைப்

பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

They who transgressors’ evil words endure

With patience, are as stern ascetics pure.

**

Yogi Shuddhananda Translation

More than ascetics they are pure

Who bitter tongues meekly endure.

**

160      

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு

மின்னாச்சொ னோற்பாரிற் பின்.

பரிமேலழகர் உரை

உண்ணாது நோற்பார் பெரியர் – விரதங்களான் ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்- அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின் (பிறர் – அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், ‘இன்னாச் சொல் நோற்பாரின் பின்’ என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

**

மணக்குடவர் உரை

உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின்,

இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

உண்ணாது நோற்பார் பெரியர் – நோன்பினால் உணவைத் தவிர்ந்து பசியையும் தட்ப வெப்பத்தையும் பொறுத்துக் கொள்ளும் துறவியர் மக்கட்குட் பெரியவரே; பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின் – ஆயின் அவர் பெரியவராவது பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் இல்லறத்தார்க்கு அடுத்தபடியே.

பிறர் என்றது தீயவரை. இன்பம் பெறுதற்குரிய இல்லறத்திலிருந்து கொண்டே துன்பம் பொறுத்தற்குரிய துறவியரினும் மிகுந்த பொறையை மேற்கொள்வதால், முதற்படியாகப் பெரியவர் என்றார்.

**

கலைஞர் உரை

பசி  பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப்

பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக்  கொள்பவர்களுக்கு,  அடுத்த

நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Though ‘great’ we deem the men that fast and suffer pain,

Who others’ bitter words endure, the foremost place obtain.

**

Yogi Shuddhananda Translation

Who fast are great to do penance

Greater are they who bear offence. **

×