21 தீவினை அச்சம்

அதிகாரம் 21.

தீவினை அச்சம்

201      

தீவினைய ரஞ்சா விழுமியா ரஞ்சுவர்

தீவினை யென்னுஞ் செருக்கு.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனான் மெய்யின்கண் நிகழும் பாவங்கள் எல்லாம் தொகுத்து விளக்குகின்றார் ஆகலின்.இது பயன்இல சொல்லாமையின்பின் வைக்கப்பட்டது.)

தீவினை என்னும் செருக்கு – தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் – முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் – அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். (‘தீவினை என்னும் செருக்கு’ எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் ‘அஞ்சார்’ என்றும், செய்து அறியாமையான் ‘அஞ்சுவர்’ என்றும் கூறினார்.)

**

மு.வரதராசனார் உரை

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார்; தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

**

மணக்குடவர் உரை

என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை.

இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தீவினை என்னும் செருக்கு-தீவினை என்று சொல்லப்படும் இறுமாப்பிற்கு; தீவினையார் அஞ்சார். தீவினை செய்து பழகிய தீயோர் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-ஆயின் அதைச் செய்தறியாத சீரியோர் அஞ்சுவர்.

தீவினைக்குக் கரணியமான இறுமாப்பு தீவினை யென்னும் கருமியமாகச் சார்த்திக் கூறப்பட்டது. அஞ்சாமை மனச்சான்றின் மழுக்கத்தாலும் அச்சம் அதன் கூர்மையாலும் ஏற்படுவனவாம்.

**

கலைஞர் உரை

தீயவர்கள்  தீவினை  செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி

ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

With sinful act men cease to feel the dread of ill within,

The excellent will dread the wanton pride of cherished sin.

**

Yogi Shuddhananda Translation

Sinners fear not the pride of sin.

The worthy dread the ill within.

**

202      

தீயவை தீய பயத்தலாற் றீயவை

தீயினு மஞ்சப் படும்.

பரிமேலழகர் உரை

தீயவை தீய பயத்தலான் – தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)

**

மு.வரதராசனார் உரை

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

**

மணக்குடவர் உரை

தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தீய தீயவே பயத்தலால்-ஒருவன் தனக்கின்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமையிலும் துன்பங்களையே தருதலால்; தீயவை தீயினும் அஞ்சப்படும்-அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப்படத்தக்கனவாம்.

தீயானது தொட்டவரைச் சுடினும் எரிப்பினும், சமைத்தலும் குளிர் போக்கலும் நோய் நீக்கலும் கொடுவிலங்கு விரட்டலுமாகிய நன்மைகளையுஞ் செய்தலாலும்; தீவினையானது செய்த காலத்தில் மட்டுமன்றிப் பின்பு வேறொரு காலத்திலும் வேறொரிடத்திலும் வேறோ ருடம்பிலுஞ் சென்று சுடுதலாலும், எவ்வகை நன்மையுஞ் செய்யாமையாலும்; ‘தீயவை தீயினும் அஞ்சப்படும்’ என்றார். தீவினை நன்மை செய்யாமை பற்றியே ‘தீயவே’ என்னும் பாடம் இங்குக் கொள்ளப்பட்டது.

**

கலைஞர் உரை

தீய  செயல்களால்  தீமையே  விளையும்  என்பதால் அச்செயல்களைத்

தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட  அஞ்சிட

வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Since evils new from evils ever grow,

Evil than fire works out more dreaded woe.

**

Yogi Shuddhananda Translation

Since evil begets evil dire

Fear ye evil more than fire.

**

203      

அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்குஞ் செய்யா விடல்.

பரிமேலழகர் உரை

அறிவினுள் எல்லாம் தலை என்ப – தமக்கு உறுதி நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும் தீய செய்யா விடல் – தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச் செய்யாது விடுதலை. (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை ‘விடுதல்’ என்றும் , செய்யத் தக்குழியுஞ் ‘செய்யாது’ ஒழியவே தமக்குத் துன்பம் வாராது என உய்த்துணர்தலின், அதனை ‘அறிவினுள் எல்லாம் தலை’ என்றும் கூறினார். செய்யாது என்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.

**

மணக்குடவர் உரை

எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையான அறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமை செய்யாதொழிதலை.

இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

செறுவார்க்கும் தீய செய்யா விடல்-தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் செய்யாது விடுதலை; அறிவினுள் எல்லாம் தலை என்ப-அறிவுச் செயல்களெல்லாவற்றுள்ளும் தலையாயதென்பர் அறிவுடையோர்.

நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையுஞ் செய்வதே மக்களியல்பாதலால், தீமைக்கு நன்மை செய்வதை அல்லது தீமை செய்யாமையைச் சிறந்த அறிவுச் செயலென்றார். உம்மை இழிவு சிறப்பு. ‘செய்யா’ ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். அறிவினால் ஒழுக்கம் பயனாதலின் ஒழுக்கம் அறிவெனப்பட்டது.

**

கலைஞர் உரை

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச்  செய்யாமலிருத்தலை,  எல்லா

அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Even to those that hate make no return of ill;

So shalt thou wisdom’s highest law. ‘Tis said, fulfil.

**

Yogi Shuddhananda Translation

The wisest of the wise are those

Who injure not even their foes.

**

204      

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி

னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

பரிமேலழகர் உரை

பிறன் கேடு மறந்தும் சூழற்க – ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் – எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். (‘கேடு’ என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

**

மணக்குடவர் உரை

பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும்.

இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பிறன்கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எவனேனும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும்.

தப்பாது பழிக்குப் பழிவாங்க வலிமை மிக்க அறத் தெய்வம் உடனிருத்தலால், ஒருவனுக்குத் தீங்கை எண்ணுதலும் ஆகாது என்பதாம்.

**

கலைஞர் உரை

மறந்தும்கூட  மற்றவர்க்குக்  கேடு  செய்ய நினைக்கக் கூடாது; அப்படி

நினைத்தால்  அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு

விடும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Though good thy soul forget, plot not thy neighbour’s fall,

Thy plans shall ‘virtue’s Power’ by ruin to thyself forestall.

**

Yogi Shuddhananda Translation

His ruin virtue plots who plans

The ruin of another man’s.

**

205      

இலமென்று தீயவை செய்யற்க செய்யி

னிலனாகு மற்றும் பெயர்த்து.

பரிமேலழகர் உரை

இலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் – செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை ‘உளனா என் உயிரை உண்டு’ (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று – அசை நிலை. ‘இலம்’ என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.)

**

மு.வரதராசனார் உரை

`யான் வறியவன்’ என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

**

மணக்குடவர் உரை

நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது.

இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இலன் என்று தீயவை செய்யற்க-எவனேனும் யான் பொருளில்லாதவன் என்று கருதி அதைப் பெறற் பொருட்டுப் பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்யாதிருக்க; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்-செய்வானாயின் மீண்டும் வறியனாவான்.

தீவினையான் வந்த பொருளை விரைந்து இழந்து விடுவானாதலின் மீண்டும் வறியனாவான் என்றார். ‘இலன்’ இரண்டுள், முன்னது தன்மை யொருமைக் குறிப்பு வினைமுற்று; பின்னது படர்க்கையாண்பாற் குறிப்புவினையாலணையும் பெயர். ‘மற்று’ அசைநிலை. உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது.

**

கலைஞர் உரை

வறுமையின்  காரணமாக   ஒருவன்  தீய செயல்களில் ஈடுபடக்கூடாது;

அப்படி    ஈடுபட்டால்    மீண்டும்    அவன்    வறுமையிலேயே வாட

வேண்டியிருக்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Make not thy poverty a plea for ill;

Thy evil deeds will make thee poorer still.

**

Yogi Shuddhananda Translation

Who makes poverty plea for ill

Shall reduce himself poorer still.

**

206      

தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால

தன்னை யடல்வேண்டா தான்.

பரிமேலழகர் உரை

நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் – துன்பம் செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண் செய்யற்க – தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின் அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறர்க்குச் செய்யாமலிருக்கவேண்டும்.

**

மணக்குடவர் உரை

தன்னைத் துன்பப்பகுதியானவை நலிதல் வேண்டாதவன் தீமையாயினவற்றைத் தான் பிறர்க்குச் செய்யதா தொழிக.

இது நோயுண்டாமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்-துன்புறுத்துந் திறத்தனவாகிய குற்றங்கள் தன்னைப் பின் வந்து வருத்துதலை விரும்பாதவன்; தீப்பால தான் பிறர்கண் செய்யற்க-தீமை செய்யுந் திறத்தனவாகிய வினைகளைத் தான் பிறரிடத்துச் செய்யாதிருக்க.

தன்னலம் பற்றியேனும் பிறர்க்குத் தீமை செய்யாதிருக்க என்றவாறு.

**

கலைஞர் உரை

வேதனை  விளைவிக்கும்  தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என

எண்ணுகிறவன் அவனும் அத் தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல்  இருக்க

வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

What ranks as evil spare to do, if thou would’st shun

Affliction sore through ill to thee by others done.

**

Yogi Shuddhananda Translation

From wounding others let him refrain

Who would from harm himself remain.

**

207      

எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை

வீயாது பின்சென் றடும்.

பரிமேலழகர் உரை

எனைப்பகை உற்றாரும் உய்வர் – எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர், வினைப்பகை வீயாது பின் சென்று அடும் – அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும் (‘வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.’ (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.)

**

மு.வரதராசனார் உரை

எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும்.

**

மணக்குடவர் உரை

எல்லாப்பகையும் உற்றார்க்கும் உய்தியுண்டாம்; தீவினை யாகிய பகை நீங்காது என்றும் புக்குழிப் புகுந்து கொல்லும்.

அஃதாமாறு பின் கூறப்படும்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

எனைப் பகை உற்றாரும் உய்வர்-எத்துணைப் பெரிய பகையுடையாரும் அதனின்று ஒருவகையால் தப்புவர்; வினைப்பகை வீயாது பின் சென்று அடும்-ஆயின், தீவினையாகிய பகையோ நீங்காது தொடர்ந்து சென்றவிடமெல்லாஞ் சென்று வருத்தும்.

தீவினைப் பயனுக்குத் தப்ப முடியாதென்பதாம்.

**

கலைஞர் உரை

ஒருவர்  நேரடியான  பகைக்குத்  தப்பி வாழ முடியும்; ஆனால், அவர்

செய்யும்  தீய  வினைகள்    பெரும்  பகையாகி  அவரைத்   தொடர்ந்து

வருத்திக்கொண்டே இருக்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

From every enmity incurred there is to ‘scape, a way;

The wrath of evil deeds will dog men’s steps, and slay.

**

Yogi Shuddhananda Translation

Men may escape other foes and live

But sin its deadly blow will give.

**

208      

தீயவை செய்தார் கெடுத னிழறன்னை

வீயா தடியுரைந் தற்று.

பரிமேலழகர் உரை

தீயவை செய்தார் கெடுதல் – பிறர்க்குத் தீவினை செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று – ஒருவன் நிழல் நெடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து அடியின்கண் தங்கியதன்மைத்து. (இவ்வுவமையைத் தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச் செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு அடி உறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, வீயாது அடி உறைந்தற்று என்ற பாடமே கரியாயிற்று. மேல் ‘வீயாது பின் சென்று அடும்’ என்றார்.ஈண்டு அதனை உவமையான் விளக்கினார்.)

**

மு.வரதராசனார் உரை

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

**

மணக்குடவர் உரை

தீயவானவற்றைப் பிறர்க்குச் செய்தார் கெடுதல், நிழல் தன்னை நீங்காதே உள்ளடியின்கீழ் ஒதுங்கினாற் போலும்.

மேல் வினைப்பகை பின் சென்றடுமென்றார் அஃதடுமாறு காட்டினார்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பிறர்க்குத் தீமையான வற்றைச் செய்தவர் அவற்றின் விளைவால் தப்பாது கெடுதல் எது போன்றதெனின்; நிழல் தன்னை வீயாது அடி உறைந்த அற்று- ஒருவனது நிழல் அவன் எங்குச் செல்லினும் உடன் சென்று, இருள் வந்த விடத்துக்கண்ணிற்கு மறையினும் மீண்டும் ஒளியில் தோன்றுமாறு, என்றும் அவனை விட்டு நீங்காது அவன் காலடியிலேயே தங்கியதன்மையது.

மேல் ‘வீயாது பின்சென் றடும்’ என்றதை இங்கு உவமையால் விளக்கினார்.

**

கலைஞர் உரை

ஒருவருடைய  நிழல்  அவருடனேயே  ஒன்றியிருப்பதைப்போல்,  தீய

செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல்,   தொடர்ந்து

ஒட்டிக் கொண்டிருக்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Man’s shadow dogs his steps wher’er he wends;

Destruction thus on sinful deeds attends.

**

Yogi Shuddhananda Translation

Ruin follows who evil do

As shadow follows as they go.

**

209      

தன்னைத்தான் காதல னாயி னெனைத்தொன்றுந்

துன்னற்க தீவினைப் பால்.

பரிமேலழகர் உரை

தன்னைத் தான் காதலன் ஆயின் – ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க – தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், ‘தன்னைத்தான் காதலன் ஆயின்’ என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.

**

மணக்குடவர் உரை

தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக.

இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தான் தன்னைக் காதலன் ஆயின்-ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின்; தீவினைப் பால் எனைத்து ஒன்றும் துன்னற்க-பிறர்க்குத் தீமை செய்யும் பகுதியொடு எத்துணைச் சிறிதும் பொருந்தற்க.

பிறர்க்குச் செய்த தீவினை தப்பாது தனக்குத் துன்பம் விளைத்தலால், ‘தன்னைத்தான் காதலனாயின்’ என்றார். காதல் என்றது அறிவோடு கூடிய காதலை. தீவினைப் பகுதியொடு பொருந்தாமையாவது தீவினை செய்யாதிருத்தலே. ஒன்று என்னும் எண்ணுப் பெயர் இங்குச் சிறிதளவுப் பொருளினது.

**

கலைஞர் உரை

தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம்  சிறிதளவுகூட

நெருங்கலாகாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Beware, if to thyself thyself is dear,

Lest thou to aught that ranks as ill draw near!

**

Yogi Shuddhananda Translation

Let none who loves himself at all

Think of evil however small.

**

210      

அருங்கேட னென்ப தறிக மருங்கோடித்

தீவினை செய்யா னெனின்.

பரிமேலழகர் உரை

மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் – ஒருவன் செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அருங்கேடன் என்பது அறிக – அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, ‘சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்’ (அகநா.42) என்பது போலக் கொள்க. ‘ஓடி’ என்னும் வினையெச்சம் ‘செய்யான்’ என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

**

மணக்குடவர் உரை

ஒருமருங்கு ஓடிப் பிறர்க்குத்தீவினைகளைச் செய்யானாயின் தனக்குக் கேடுவருவ

தில்லை யென்று தானே யறிக.

இது கேடில்லை யென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

மருங்கு ஓடித்தீவினை செய்யான் எனின் – ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு பக்கமாக விலகிச் சென்று பிறர்க்குத் தீமை செய்யானாயின்; அருங்கேடன் என்பது அறிக – அவன் கேடில்லாதவன் என்பதை அறிந்து கொள்க.

அருமை இங்கு இன்மை குறித்தது. அருங் கேடன் என்பது காலில்லாதவனை இல்லாக் காலன் என்றாற் போல்வது. இது செய்யுள் வழக்கு. மருங்கோடுதல் விரைந்து விலகுதல்.

**

கலைஞர் உரை

வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்கா தவர்க்கு

எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.

**

Rev. Dr. G.U.Pope Translation

The man, to devious way of sin that never turned aside,

From ruin rests secure, whatever ills betide.

**

Yogi Shuddhananda Translation

He is secure, know ye, from ills

Who slips not right path to do evils.

**

×