24ஆம் அதிகாரம் (புகழ்)

அதிகாரம் 24.

புகழ்

231      

ஈத லிசைபட வாழ்த லதுவல்ல

தூதிய மில்லை யுயிர்க்கு.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, இல்வாழ்க்கை முதல் ஈகை ஈறாகச் சொல்லப்பட்ட இல்லறத்தின் வழுவாதார்க்கு இம்மைப்பயனாகிய இவ்வுலகின்கண் நிகழ்ந்து இறவாது நிற்கும் கீர்த்தி. இது, பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருதலின் , அதன்பின் வைக்கப்பட்டது.)

‘ஈதல்’ – வறியார்க்கு ஈக, இசைபட வாழ்தல் – அதனால் புகழ் உண்டாக வாழ்க, அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை – அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப்பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.்(இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும் உணவின் பிண்டம் உண்டி முதற்று (புறநா.18) ஆகலின் ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக ‘ஈதல்’ என்றார். உயிர்க்கு என்பது, பொதுப்படக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.)

**

மு.வரதராசனார் உரை

வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

**

மணக்குடவர் உரை

புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல். அக்கொடையா னல்லது உயிர்க்கு இலாபம் வேறொன்றில்லை.

இது புகழுண்டாமாறு கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஈதல்-வறியார்க்கு வேண்டியலற்றை இயன்ற வரை ஈக; இசைபட வாழ்தல்-அதனாற் புகழுண்டாக வாழ்க; அது அல்லது உயிர்க்கு ஊதியமில்லை-அப்புகழன்றி மக்களுக்கு இவ்வுலகத்திற் பெறக்கூடிய நிலையான பேறு வேறு ஒன்றுமில்லை.

இடத்தில் வறியார்க்கு நிலமும் கருவியில் வறியார்க்குப் பொறியும் நலத்தில் வறியார்க்கு மருந்தும் அறிவில் வறியார்க்கு நூலும் காப்பில் வறியார்க்குப் பாதுகாப்பும் அளிப்பதும் ஈதல் வகைகளேயாயினும்,

“உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

உண்டி முதற்றே யுணவின் பிண்டம்”

என்று குடபுவியனாரும் (புறம் : 18).

“உடம்பா ரழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ் ஞானஞ் சேரவு மாட்டார்”

என்று திருமூலரும் (திருமந்திரம், 724) கூறுவதால், பொருளில் வறியார்க்கு உணவேனும் அதற்குரிய பொருளேனும் ஈதலே முன்மையும் (Priority) முதன்மையும் பெறுவதாம். ‘ ஈதல் ‘, ‘ வாழ்தல் ‘ இரண்டும் தல்லீற்று வியங்கோள். ஈதல் வேறுயிரினங்கட்கு இன்மையின், இங்கு உயிரென்றது மக்களுயிரை.

**

கலைஞர் உரை

கொடைத்  தன்மையும்,   குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம்

தரக் கூடியது வேறெதுவும் இல்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

See that thy life the praise of generous gifts obtain;

Save this for living man exists no real gain.

**

Yogi Shuddhananda Translation

They gather fame who freely give

The greatest gain for all that live.

**

232      

உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்

றீவார்மே னிற்கும் புகழ்.

பரிமேலழகர் உரை

உரைப்பார் உரைப்பவை எல்லாம் – உலகத்து ஒன்று உரைப்பார் உரைப்பன எல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ் – வறுமையான் இரப்பார்க்கு அவர் வேண்டியது ஒன்றை ஈவார் கண் நிற்கும் புகழாம். (புகழ்தான் உரையும் பாட்டும் என இருவகைப்படும்(புறநா.27) அவற்றுள் ‘உரைப்பார் உரைப்பவை’ என எல்லார்க்கும் உரிய வழக்கினையே எடுத்தாராயினும்,இனம் பற்றிப் புலவர்க்கே உரிய செய்யுளும் கொள்ளப்படும், படவே ‘பாடுவார் பாடுவன எல்லாம் “புகழாம் என்பதூஉம் பெற்றாம். ஈதற்காரணம் சிறந்தமை இதனுள்ளும் காண்க. இதனைப் பிறர்மேலும் நிற்கும் என்பார். தாம் எல்லாம் சொல்லுக ; புகழ் ஈவார் மேல் நிற்கும்’ என்று உரைப்பாரும் உளர். அது புகழது சிறப்பு நோக்காமை அறிக.)

**

மு.வரதராசனார் உரை

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

**

மணக்குடவர் உரை

சொல்லுவார் சொல்லுவனவெல்லாம் இரந்துவந்தார்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடுப்பார்மேல் நில்லாநின்ற புகழாம்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் – உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்வதெல்லாம்; இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் – வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈவார்மேல் நிற்கும் புகழே.

உரைத்தல் உரைநடையுஞ் செய்யுளுமாகிய இருவடிவிலும் நிகழுமாதலின், இங்கு உரைத்தலென்றது அவ்விருவடிவிற்கும் பொதுவாம். மேற்குறளிற் குறிப்பாகச் சொன்ன ஈதல்வகை இங்கு வெளிப்படையாகக் கூறப்பட்டது.

**

கலைஞர் உரை

போற்றுவோர்     போற்றுவனவெல்லாம்     இல்லாதவர்க்கு   ஒன்று

வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The speech of all that speak agrees to crown

The men that give to those that ask, with fair renown.

**

Yogi Shuddhananda Translation

The glory of the alms-giver

Is praised aloud as popular.

**

233      

ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்

பொன்றாது நிற்பதொன் றில்.

பரிமேலழகர் உரை

ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்- தனக்கு இணையின்றாக ஓங்கிய புகழல்லது; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்-உலகத்து இறவாது நிற்பது பிறிதொன்று இல்லை. (இணை இன்றாக ஓங்குதலாவது : கொடுத்தற்கு அரிய உயிர் உறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடு ஒப்பது இன்றித் தானே உயர்தல். அத்தன்மைத்தாகிய புகழே செய்யப்படுவது என்பதாம். இனி ‘ஒன்றா’ என்பதற்கு ஒரு வார்த்தையாகச் சொல்லின் எனவும், ஒரு தலையாகப் பொன்றாது நிற்பது எனவும் உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் புகழ் சிறப்புக் கூறப்பட்டது.

**

மு.வரதராசனார் உரை

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

**

மணக்குடவர் உரை

உயர்ந்த புகழல்லது இணை யின்றாக உலகத்துக் கெடாது நிற்பது பிறிதில்லை.

இது புகழ் மற்றுள்ள பொருள்போலன்றி அழியாது நிற்கு மென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்-தனக்கு இணையில்லாவாறு உயர்ந்த புகழல்லாமல்; உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்- இவ்வுலகத்து அழியாது நிற்பது வேறொன்றும் இல்லை.

ஓர் உயிரைக் காத்தற்கு உணவும் பொருளும் மட்டுமன்றி உறுப்பும் உடம்பும் உதவ நேருமாதலின், இணையின்றி யுயர்ந்த புகழ் என்றார். ஒன்றா என்பது ஒன்றாக என்பதன் ஈறு தொகல்.

**

கலைஞர் உரை

ஒப்பற்றதாகவும்,     அழிவில்லாததாகவும்       இந்த    உலகத்தில்

நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

**

Rev. Dr. G.U.Pope Translation

Save praise alone that soars on high,

Nought lives on earth that shall not die.

**

Yogi Shuddhananda Translation

Nothing else lasts on earth for e’er

Saving high fame of the giver!

**

234      

நிலவரை நீள்புக ழாற்றிற் புலவரைப்

போற்றாது புத்தே ளுலகு.

பரிமேலழகர் உரை

நிலவரை நீள் புகழ் ஆற்றின் – ஒருவன்நில எல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின் புத்தேள் உலகு புலவரைப் போற்றாது – புத்தேள் உலகம் அவனையல்லது தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. (புகழ் உடம்பான் இவ்வுலகும், புத்தேள் உடம்பான் அவ்வுலகும் ஒருங்கே எய்தாமையின், புலவரைப் போற்றாது என்றார். அவன் இரண்டு உலகும் ஒருங்கு எய்துதல், ‘புலவர் பாடும் புகழுடையோர்விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தி எய்துப என்பதம் செய்வினை முடித்து’ (புறநா.27), எனப் பிறராலும் சொல்லப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

**

மணக்குடவர் உரை

ஒருவன் நிலத்தெல்லையின் கண்ணே நெடிய புகழைச் செய்வனாயின் தேவருலகம் புலவரைப் போற்றாது இவனைப் போற்றும்.

புலவரென்றார் தேவரை, அவர் புலனுடையாராதலான். இது புகழ் செய்தாரைத் தேவருலகம் போற்றுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நிலவரை நீள்புகழ் ஆற்றின் – ஒருவன் ஈகையால் நிலவுலகத்தின்கண் நிலையான புகழைச் செய்வானாயின், புத்தேள் உலகு புலவரைப் போற்றாது-தேவருலகம் அவனையன்றி அறிவால் மட்டுஞ் சிறந்தவரை விரும்பாது. இக் கொள்கையை.

“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவ னேவா வான வூர்தி

யெய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்

கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி

யருள வல்லை யாகுமதி யருளிலர்

கொடாமை வல்ல ராகுக

கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே”.

என்னும் 27-ஆம் புறப்பாட்டுப் பகுதியாலும் அறிக. இதனால் வேள்வி செய்தவர் விண்ணுல கடைவர் என்னும் ஆரியக் கொள்கை மறுக்கப் பட்டமை காண்க.

**

கலைஞர் உரை

இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ்

ஈட்டிய      பெருமக்களை  விடுத்து, அறிவாற்றல்  உடையவரை  மட்டும்

போற்றிக் கொண்டிராது.

**

Rev. Dr. G.U.Pope Translation

If men do virtuous deeds by world-wide ample glory crowned,

The heavens will cease to laud the sage for other gifts renowned.

**

Yogi Shuddhananda Translation

From hailing gods heavens will cease

To hail the men of lasting praise

**

235      

நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்

வித்தகற் கல்லா லரிது.

பரிமேலழகர் உரை

நத்தம் (ஆகும்) கேடும் – புகழுடம்பிற்கு ஆக்கமாகுங் கேடும், உளது ஆகும் சாக்காடும் – புகழுடம்பு உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது – சதுரப்பாடுடையார்க்கு அல்லது இல்லை. (‘நந்து’ என்னும் தொழிற்பெயர் விகாரத்துடன் ‘நத்து’ என்றாய் பின் ‘அம்’ என்னும் பகுதிப் பொருள் விகுதிபெற்று ‘நத்தம்’ என்று ஆயிற்று. ‘போல்’ என்பது ஈண்டு உரையசை. ‘ஆகும்’ என்பதனை முன்னும் கூட்டி, ‘அரிது’ என்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க. ஆக்கமாகும் கேடாவது; புகழ் உடம்பு செல்வம் எய்தப் பூதஉடம்பு நல்கூர்தல். உளதாகும் சாக்காடாவது; புகழ் உடம்பு நிற்கப் பூத உடம்பு இறத்தல். நிலையாதனவற்றான் நிலையின் எய்துவார் வித்தகர் ஆகலின், ‘வித்தகர்க்கு அல்லால்’ அரிது என்றார். இவை இரண்டு பாட்டானும் புகழ் உடையார் எய்தும் மேன்மை கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும், அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.

**

மணக்குடவர் உரை

ஆக்கம்போலக் கேடும் உளதானாற்போலச் சாதலும் வல்லவற்கல்லது அரிது.

இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நத்தம் போல் கேடும் – புகழுடம்பின் கரு வளரச்சியடைவது போல் (முழு வளரச்சிபுற்ற) பூதவுடம்பு தளர்ச்சியடைவதும்; உளது ஆகும் சாக்காடும் – அப்புகழுடம்பின் பிறப்பாகிய பூதவுடம்பின் இறப்பும்; வித்தகர்க்கு அல்லால் அரிது – திறப்பாடுடையவர்க்கன்றி ஆகாவாம்.

பொதுவாக, ஒருவன் வாழ்க்கைப் பொறுப் பேற்ற பின்பே புகழுக் கேற்ற ஈகை வினைகளையும் தொண்டுகளையுஞ் செய்ய முடியும். அதற்குள் அவன் உடம்பு முழு வளர்ச்சி யடைந்திருக்கும். புகழ்த் தொண்டி லீடுபட்டுக் காலஞ் செல்லச் செல்ல, மூப்பினால் உடம்பு தளர்ந்து வருகின்றது. இறுதியில் சாக்காடு நேர்கின்றது. அதுவரை பொதுநலத் தொண்டைத் தொடர்ந்து செய்து வந்ததினால், புகழும் படிப்படியாக வளர்ந்து அவன் சாக்காட்டுச் சமையத்தில் முழுவளர்ச்சி யடைந்து, பூதவுடம்பு மறைந்தபின் தானே விளங்கித் தோன்றுகின்றது.

புகழை ஓர் உடம்பாக உருவகிப்பது இலக்கிய மரபு. பூதவுடம்பு தாய்வயிற்றிற் கருவாகத் தொடங்கிப் படிப்படியாக வளர்ந்து பத்தாம் மாதம் முழுவளர்ச்சி யடைந்து குழவியாகப் பிறக்கின்றது. இந்நிலைமையைப் புகழுடம்பிற்கும் பொருத்திக் கூறியுள்ளார் ஆசிரியர் வள்ளுவனார். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் பொதுநல வூழியத்தைத் தொடங்கும்போது, புகழுடம்பு கருக்கொள்கின்றது. ஊழியம் நீட நீடப் புகழுடம்பு வளர்கின்றது. பூதவுடம்பு தளர்கின்றது. சாக்காட்டிற் புகழுடம்பு வளர்கின்றது. பூதவுடம்பு இறக்கின்றது. இதையே ‘ நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும்’ என்றார். போல் என்பது வளர்ச்சிக்கும் தளர்ச்சிக்கும் ஒப்புமை கூறிய உவமையுருபு. இது குழவி வளர்ந்தது போலக்கிழவி தளர்ந்தாள் என்பது போன்றது. ஆதலால், போல் என்பது பரிமேலழகர் கூறுவது போல் உரையசையன்று. நந்துதல் வளர்தல்.நத்தம்-வளர்ச்சி; முதனிலை வலித்து ஈறுபெற்ற தொழிற் பெயர். ‘அம்’ முதனிலைப் பொருளீறு (பகுதிப் பொருள் விகுதி) அன்று. வாழ்நாள் முழுதும் பொதுநலத் தொண்டாற்றுவது திறப்பாடான செயலே.

**

கலைஞர் உரை

துன்பங்களுக்கிடையேகூட   அவற்றைத்   தாங்கும் வலிமையால் தமது

புகழை   வளர்த்துக்   கொள்வதும், தமது சாவிலும்கூடப்   புகழை  நிலை

நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Loss that is gain, and death of life’s true bliss fulfilled,

Are fruits which only wisdom rare can yeild.

**

Yogi Shuddhananda Translation

Fame in fall and life in death

Are rare but for the soulful worth.

**

236      

தோன்றிற் புகழோடு தோன்றுக வஃதிலார்

தோன்றலிற் றோன்றாமை நன்று.

பரிமேலழகர் உரை

தோன்றின் புகழோடு தோன்றுக-மக்களாய்ப் பிறக்கின் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க; ‘அஃது இலார்’ தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குணமில்லாதார் மக்களாய்ப் பிறத்தலின் விலங்காய்ப் பிறத்தல் நன்று (புகழ்; ஈண்டு ஆகுபெயர். அஃது இலார் என்றமையின் மக்களாய் என்பதூஉம், ‘மக்களாய்ப் பிறவாமை’ என்ற அருத்தாபத்தியான் ‘விலங்காய்ப் பிறத்தல்’ என்பதூஉம் பெற்றாம். இகழ்வார் இன்மையின் ‘நன்று’ என்றார்)

**

மு.வரதராசனார் உரை

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும்; அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பது நல்லது.

**

மணக்குடவர் உரை

பிறக்கிற் புகழுண்டாகப் பிறக்க; அஃதிலார் பிறக்குமதிற் பிறவாமை நன்று.

இது புகழ்பட வாழவேண்டு மென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தோன்றின் புகழொடு தோன்றுக-ஒருவர் இவ்வுலகத்திற் பிறக்கின் புகழ்க் கேதுவான குணத்தொடு பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குண மில்லாதார் பிறத்தலை விடப் பிறவாதிருத்தலே நல்லது.

பிறத்தலும் பிறவாமையும் இறைவன் ஏற்பாட்டின்படி அல்லது ஊழின் அமைப்புப்படியே நிகழ்வதால், அவை பிறப்பவரின் உணர்ச்சியொடு கூடியனவும் விருப்பிற்கு அடங்கியனவுமல்ல. ஆதலால், இங்குத் ‘தோன்றுக’, ‘தோன்றற்க’ என்று கூறியதெல்லாம், புகழுக் கேற்ற நல்வினை செய்வானைப் பாராட்டியதும் அது செய்தானைப் பழித்ததுமேயன்றி வேறல்ல என அறிக . புகழ் என்பது இங்கு ஆகுபொருளது.

**

கலைஞர் உரை

எந்தத்   துறையில்  ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்;

இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.

**

Rev. Dr. G.U.Pope Translation

If man you walk the stage, appear adorned with glory’s grace;

Save glorious you can shine, ’twere better hide your face.

**

Yogi Shuddhananda Translation

Be born with fame if birth you want

If not of birth you must not vaunt.

**

237      

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

யிகழ்வாரை நோவ தெவன்.

பரிமேலழகர் உரை

புகழ்பட வாழாதார்- தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதார்; தம் நோவார் அதுபற்றிப் பிறர் இகழ்ந்தவழி, ‘இவ்விகழ்ச்சி நம் மாட்டாமையான் வந்தது’ என்று தம்மை நோவாதே தம்மை இகழ்வாரை நோவது எவன்-தம்மை இகழ்வாரை நோவது என் கருதி? (புகழ்பட வாழலாயிருக்க அதுமாட்டாத குற்றம் பற்றிப் பிறர் இகழ்தல் ஒரு தலையாகலின், இகழ்வாரை என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்துகொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்துக்கொள்ளக் காரணம் என்ன?

**

மணக்குடவர் உரை

புகழ்பட வாழ மாட்டாதார் தங்களை நோவாது தம்மை யிகழ்வாரை நோகின்றது யாதினுக்கு?

இது புகழ்பட வாழமாட்டாதார் இகழப்படுவரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

புகழ்பட வாழாதார்-தமக்குப் புகழுண்டாக வாழாதவர்; தம் நோவார்-அது பற்றிப் பிறர் தம்மை யிகழ்ந்த விடத்து அதற்குக் கரணியமான தம்மையே நொந்து கொள்ளாது; தம்மை இகழ்வாரை நோவது எவன் – தம்மை யிகழ்ந்தவரை நோவது எதற்கு?

புகழ்பட வாழாமையின் தீய விளைவு இங்குக் கூறப் பட்டது.

**

கலைஞர் உரை

உண்மையான   புகழுடன்   வாழ  முடியாதவர்கள் அதற்காகத் தம்மை

நொந்து   கொள்ள   வேண்டுமே  தவிரத்  தமது   செயல்களை இகழ்ந்து

பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?

**

Rev. Dr. G.U.Pope Translation

If you your days will spend devoid of goodly fame,

When men despise, why blame them? You ‘ ve yourself to blame.

**

Yogi Shuddhananda Translation

Why grieve at those who blame the shame

Of those who cannot live in fame?

**

238      

வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு

மெச்சம் பெறாஅ விடின்.

பரிமேலழகர் உரை

இசை என்னும் எச்சம் பெறாவிடின் – புகழ் என்னும் எச்சம் பெறலாயிருக்க, அது பெறாது ஒழிவாராயின், வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப – வையகத்தோர்க்கு எல்லாம் அது தானே வசை என்ற சொல்லுவர் நல்லோர். ( ‘எச்சம்’ என்றார், செய்தவர் இறந்து போகத் தான் இறவாது ‘நிற்றலின்’ இகழப்படுதற்குப் பிறிதொரு குற்றம் வேண்டா என்பது கருத்து.)

**

மு.வரதராசனார் உரை

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைக் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

**

மணக்குடவர் உரை

உலகத்தார்க்கெல்லாம் புகழாகிய ஒழிபு பெறாவிடின், அப்பெறாமைதானே வசையாமென்று சொல்லுவர்.

மேல் புகழில்லாதாரை யிகழ்பவென்றார் அவர் குற்றமில்லா ராயின் இகழப்படுவரோவென்றார்க்கு வேறு குற்றம் வேண்டா, புகழின்மைதானே யமையுமென்றார்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இசை என்னும் எச்சம் பெறாவிடின்-ஒருவன் புகழைத் தனக்குப் பின் நிறுத்தாவிடின்; வையத்தார்க்கு எல்லாம் வசை என்ப- அது உலகத்திலுள்ள மக்கட் கெல்லாம் பழிப்பாகு மென்று கூறுவர் நல்லோர்.

புகழ் மக்களைப் போல எஞ்சி நிற்பது என்னுங் கருத்துப்பட ‘எச்சம் பெறாஅ விடின்’ என்றார். மக்களெல்லாரும் ஓரினத்தாராதலானும், புகழ்பட வாழ்தலே உயர்திணைப் பண்பாதலானும், ஒருவன் பழி அவன் இனத்தையும் சாரும் என்னும் நெறிமுறை பற்றி, வையத்தார்க் கெல்லாம் வசை யென்றார். ‘பெறாஅ’ இசைநிறை யளபெடை.

**

கலைஞர் உரை

தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய  புகழைப்  பெறாவிட்டால்,  அது

அந்த வாழ்க்கைக்கே வந்த பழி யென்று வையம் கூறும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Fame is virtue’s child, they say; if, then,

You childless live, you live the scorn of men.

**

Yogi Shuddhananda Translation

To men on earth it is a shame

Not to beget the child of fame.

**

239      

வசையிலா வண்பயன் குன்று மிசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.

பரிமேலழகர் உரை

இசைஇலா யாக்கை பொறுத்த நிலம் – புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த நிலம் , வசை இலா வண்பயன் குன்றும் – பழிப்பு இல்லாத வளப்பத்தை உடைய விளையுள் குன்றும். ( உயிர் உண்டாயினும் அதனால் பயன் கொள்ளாமையின் யாக்கை எனவும் அது நிலத்திற்குப் பொறையாகலின் ‘பொறுத்த’ எனவும் கூறினார். விளையுள் குன்றுதற்கேது, பாவ யாக்கையைப் பொறுக்கின்ற வெறுப்பு. ‘குன்றும்’ என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. இவை நான்கு பாட்டானும் புகழ் இல்லாதாரது தாழ்வு கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.

**

மணக்குடவர் உரை

புகழில்லாத வுடம்பைப் பொறுத்த நிலம் பழியற்ற நல்விளைவு குறையும்.

இது புகழில்லாதா னிருந்தவிடம் விளைவு குன்றுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இசை இலா யாக்கை பொறுத்த நிலம்-புகழைச் செய்யாத வுடம்பைச் சுமந்த நிலம்; வசை இலா வண்பயன் குன்றும்-பழிப்பில்லாத வளமுள்ள விளைச்சல் குறையும்.

உயிரோடு கூடியிருந்தும் அதனாற் பயன் பெறாமையின் ‘யாக்கை’ என்றார். மக்களின் தன்மைக் கேற்ப அவர் வாழும் நிலமுமிருக்கும் என்பது, “எவ்வழி நல்லவ ராடவ-ரவ்வழி நல்லை வாழிய நிலனே”. என்னும் (புறம். 188) ஒளவையார் கூற்றானும் அறியப்படும். இனி, உடம்பு பெரும்பாலும் நிலத்தின் கூறாதலின், தன்னைப் போற் பயன்படாத தன் கூற்றைச் சுமப்பது தனக்கிழி வென்னும் வெறுப்பினால் நிலம் தன்வளங் குன்றும், எனவும் ஒரு கருத்துத் தோன்ற நின்றது. பயன் குன்றும் என்பது பயன்படும் என்பது போல ஒரு சொற்றன்மைப் பட்டதாகும்.

**

கலைஞர் உரை

புகழ்   எனப்படும்  உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால்,

இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The blameless fruits of fields ‘increase will dwindle down,

If earth the burthen bear of men without renown.

**

Yogi Shuddhananda Translation

The land will shrink in yield if men

O’erburden it without renown.

**

240      

வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.

பரிமேலழகர் உரை

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் – தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார், இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் – புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார். (வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின், இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், ‘இசை இலா யாக்கை’ என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் ‘வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ (குறள்50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம். இனி, மனு முதலிய அற நூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும்: அஃது அறிந்து அடக்கிக் கொள்க: யாம் உரைப்பின் பெருகும்.)

**

மு.வரதராசனார் உரை

தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.

**

மணக்குடவர் உரை

வசையொழிய வாழுமவர்களே உயிர் வாழ்வாராவர்; புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார்.

இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்-தமக்குப் பழிப்பில்லாமல் வாழ்பவரே உயிர் வாழ்பவராவர்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர்-புகழின்றி வாழ்பவரே உயிரோடிருந்தும் இறந்தவராவர்.

இனி, புகழோடு வாழ்பவரே சிறப்பாகவும் செழிப்பாகவும் வாழ்பவராவர்; அஃதிலாதார் இழிவாகவும் வறுமையிலுங் காலங்கழிப்பார் போன்றவரே என்று உரைகூறினும் அமையும். கூறும் பொருள் வலியுறற் பொருட்டு உடன்பாட்டு வடிவிலும் எதிர்மறை வடிவிலும் கூறினார்.

இதனால் இல்லற வாழ்க்கையின் சிறந்த இம்மைப் பயன் புகழே என்பது கூறப்பட்டது. இதைக் குறித்தற்கே இவ்வதிகாரமும் இல்லறவியலின் இறுதியில் வைக்கப்பட்டது. இக்குறளும் இவ்வதிகாரத்தின் இறுதியதாயிற்று.

இல்லற வாழ்க்கையின் பொதுவான மறுமைப் பயன் விண்ணுலக வின்பம் என்பது, ஏற்கெனவே 50-ஆம் 58 -ஆம் 75-ஆம் 234-ஆம் குறள்களிற் கூறப்பட்டுள்ளது.

இனி

“அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவ தெவன்.” (46)

“இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாரு ளெல்லாந் தலை”. (47)

“ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை யுடைத்து”. (48)

“அறனெனப் பட்டதே யில்வாக்கை” (49)

“துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்பாகிற் பவர்”. (159)

“உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்” (160)

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை

“மாற்றுவா ராற்றலின் பின்” (225)

என்று வள்ளுவரே கூறியிருப்பதனாலும், அன்புடைமை முதல், ஈகைவரை கூறப்பட்டுள்ள பதினாறறங்களையும் கடைப்பிடித்தல் துறவறத்திற்கொப்பான தூய்மையைத் தருமாதலானும்,

“மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்” (3)

“பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க.

நெறிநின்றார் நீடுவாழ் வார்” (6)

என்பன இல்லறம் துறவறம் என்னும் இருவகையறத்திற்கும் பொதுவாகவே இருத்தலானும், இல்லறத்தினின்றும் இறைவன் திருவடியடைந்த பலர் வரலாறுகள் கூறப்படுதலானும், வழிபாடு, ஒழுக்கம், தொண்டு, ஈகம் (தியாகம்) என்னும் நால் வாயிலால் இல்லறத்தாரும் வீட்டை யடையலாம் என்பதே வள்ளுவர் கூறும் தமிழறச் சிறப்பாம் ; இதனால், துறவறத்தால் மட்டும் வீடுபேறுண்டா மென்பது ஆரியக் கொள்கையே என அறிக. அது அன்பிற்கும் தொண்டிற்கும் தப்பிக் கொள்ளும் சூழ்ச்சியே யன்றி வேறன்று.

இனி, நல்வினையுந் தீவினைபோற் பிறவிக் கேதுவா மென்றும் அதனால் இருவினையும் முறையே பொன் விலங்கும் இருப்பு விலங்கும் போலாமென்றும், கொண்முடிபு (சித்தாந்த ) நூல்கள் கூறுவதும் பிற்காலக் கொள்கையே யென்று தெரிகின்றது. நல்வினையுந் தீவினையுங் கலந்து செய்தவனே நல்வினைப் பயனைத் தேவருலகத்திலும் தீவினைப் பயனைத் தீயுழியிலும் மாறிமாறிப் பிறப்பா னென்பதும், தீவினையின்றி நல்வினையே செய்தவன் இறைவன் திருவருளாற் பேரின்ப வீட்டைப் பெறுதலுங் கூடுமென்பதுமே, பண்டைத் தமிழர் கொள்கையாம். இதை,

“செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே

ஐய மறாஅர் கசடீண்டு காட்சி

நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்

செய்வினை மருங்கி னெய்த லுண்டெனின்

தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்

தொய்யா வுலகத்து நுகர்ச்சியில்லெனின்

மாறிப் பிறப்பி னின்மையும் கூடும்

மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்

கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்

தீதில் யாக்கை மாய்தறவத் தலையே.”

என்னுங் கோப்பெருஞ் சோழன் பாட்டாலும் (புறம். 214) இளையான்குடி நாயனார் வரலாற்றாலும் அறிக.

**

கலைஞர் உரை

பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும். புகழ்  இல்லாதவர்

வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who live without reproach, them living men we deem;

Who live without renown, live not, though living men they seem.

**

Yogi Shuddhananda Translation

They live who live without blemish

The blameful ones do not flourish.

**

×