29ஆம் அதிகாரம் (கள்ளாமை)

அதிகாரம் 29.

கள்ளாமை

281      

எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்

கள்ளாமை காக்கதன் னெஞ்சு.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, பிறர் உடைமையாயிருப்பது யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை. கருதலும் செய்தலோடு ஒத்தலின் , ‘கள்ளாமை’ என்றார். இல்வாழ்வார்க்கு ஆயின், தமரோடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்ஙனம் கொள்ளினும் அமையும். துறந்தார்க்கு ஆயின், அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம்ஆகலின், இது துறவறமாயிற்று. புறத்துப் போகாது மடங்கி ஒரு தலைப்பட்டு உயிரையே நோக்கற்பாலதாய அவர் மனம் , அஃது ஒழிந்து, புறத்தே போந்து பல தலைப்பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்குதலேயன்றி , அது தன்னையும் வஞ்சித்துக்கொள்ளக் கருதுதல் அவர்க்குப் பெரியதோர் இழுக்காதல் அறிக. இவ்வாறு ‘வாய்மை’ முதல் ‘கொல்லாமை’ ஈறாய நான்கு அதிகாரத்திற்கும் ஒக்கும். பொருள் பற்றி நிகழும் குற்றத்தை விலக்குகின்ற தாகலின், இது காமம் பற்றி நிகழ்வதாய கூடா ஒழுக்கத்தின்பின் வைக்கப்பட்டது.)

எள்ளாமை வேண்டுவான் என்பான் – வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்து ஒன்று கள்ளாமை தன் நெஞ்சு காக்க – யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க. (‘எள்ளாது’ என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும்,நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், ‘எனைத்து ஒன்றும்’ என்றார். ‘நெஞ்சு கள்ளாமல் காக்க’ எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.)

**

மு.வரதராசனார் உரை

பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன், எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்கவேண்டும்.

**

மணக்குடவர் உரை

பிறரா லிகழப்படாமையை வேண்டுவா னிவனென்று சொல்லப்படுமவன் யாதொரு பொருளையுங் களவிற் கொள்ளாமல் தன்னெஞ்சைக் காக்க.

இது களவு ஆகாதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

எள்ளாமை வேண்டுவான் என்பான் – கள்வன் என்று பிறரால் இழித்தெண்ணப் படாமையை விரும்புகின்றவன் என்று சொல்லப்படுவான் ; தன் நெஞ்சு எனைத்து ஒன்றும் கள்ளாமை காக்க -தன்மனம் எவ்வகைப் பொருளையும் மறைவிற் கவரக் கருதாவகை காத்துக்கொள்க.

அறிவு போன்ற கருத்துப் பொருளும் அடங்க ‘யாதொன்றும் என்றார். நெஞ்சு கள்ளாமை காக்க என்றதனால் , கள்ளுதல் இங்குக் கள்ளக் கருதுதல் என்பது பெறப்படும். என்பான் என்னும் செய்வினை வடிவுச் சொல் செயப்பாட்டுவினைப் பொருள் கொண்டது.

**

கலைஞர் உரை

எந்தப்   பொருளையும்  களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல்

பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who seeks heaven’s joys, from impious levity secure,

Let him from every fraud preserve his spirit pure.

**

Yogi Shuddhananda Translation

Let him who would reproachless be

From all frauds guard his conscience free.

**

282      

உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தாற் கள்வே மெனல்.

பரிமேலழகர் உரை

உள்ளத்தால் உள்ளலும் தீதே – குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம், பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் – ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க. (‘உள்ளத்தால்’ என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. உள்ளலும் என்பது இழிவு சிறப்பு உம்மை. ‘அல்’ விகுதி வியங்கோள் ‘எதிர்மறைக்கண்’ வந்தது. இவை இரண்டு பாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃது என்பதூஉம் அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.)

**

மு.வரதராசனார் உரை

குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே; அதனால் பி்றன் பொருளை அவன் அறியாத வகையால், `வஞ்சித்துக் கொள்வோம்’ என்று எண்ணாதிருக்க வேண்டும்.

**

மணக்குடவர் உரை

பிறன் பொருளை நெஞ்சினால் நினைத்தலும் தீதாம்; ஆதலால் அதனை மறைவினாலே கள்வேமென்று முயலாதொழிக.

இது களவு தீதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

உள்ளத்தால் உள்ளலும் தீதே – தீவினைகளைத் தம் நெஞ்சாற் கருதுதலும் துறவறத்தார்க்குக் குற்றமாம் ; பிறன் பொருளைக் கள்ளத்தாற் கள்வேம் எனல் – ஆதலால் , பிறன் பொருள் எதையேனும் அவனறியாமற் கவர்வேம் என்று கருதற்க.

‘உள்ளத்தால்’ என்னும் வேண்டாச் சொல் துறவியரின் உள்ளம் தூய்மையாயிருக்க வேண்டும் என்பதை உணர்த்தி நின்றது. ‘ உள்ளலும்’ இழிவு சிறப்பும்மை. ‘அல்’ இங்கு எதிர்மறை வியங்கோளீறு. இனி, கள்வேமெனல் உள்ளலுந்தீதே எனினுமாம்.

**

கலைஞர் உரை

பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா  என்று

ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘Tis sin if in the mind man but thought conceive;

‘By fraud I will my neighbour of his wealth bereave.’

**

Yogi Shuddhananda Translation

“We will by fraud win other’s wealth”

Even this thought is sin and stealth.

**

283      

களவினா லாகிய வாக்க மளவிறந்

தாவது போலக் கெடும்.

பரிமேலழகர் உரை

களவினால் ஆகிய ஆக்கம் – களவினால் உளதாகிய பொருள், ஆவது போல அளவிறந்து கெடும் – வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். (ஆக்கத்திற்கு ஏதுவாகலின் ‘ஆக்கம்’ எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். ‘அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்’ என்று உரைப்பாரும் உளர்.

**

மு.வரதராசனார் உரை

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவதுபோல தோன்றி, இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டுவிடும்.

**

மணக்குடவர் உரை

களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம் மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும்.

இது பொருள் நிலையாதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

களவினால் ஆகிய ஆக்கம் -கனவினால் உண்டான செல்வம் ; ஆவது போல அளவு இறந்து கெடும் – வளர்வது போலத் தோன்றி அளவு கடந்து கெடும்.

‘ஆக்கம்’ தொழிலாகு பெயர். அளவிறந்து கெடுதலாவது, புது வெள்ளம் பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போவது போல், தான் போகும்போது முன்பிருந்த பழஞ் செல்வத்தையும் தன்னொடு சேர்த்துக் கொண்டு போதலும் , இம்மைக்குப் பழியையும் மறுமைக்குத் தீவினையையும் உண்டாக்குதலுமாம்.

**

கலைஞர் உரை

கொள்ளையடித்துப்    பொருள்   குவிப்பது,   முதலில்    பெரிதாகத்

தோன்றினாலும்,    அந்தச்    செயல்  ஏற்கனவே இருந்த செல்வத்தையும்

அடித்துக் கொண்டு போய்விடும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The gain that comes by fraud, although it seems to grow

With limitless increase, to ruin swift shall go.

**

Yogi Shuddhananda Translation

The gain by fraud may overflow

But swift to ruin it shall go.

**

284      

களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமந் தரும்.

பரிமேலழகர் உரை

களவின்கண் கன்றிய காதல் – பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

களவுசெய்து பிறர்பொருள் கொள்ளுதலின் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும்போது தொலையாத துன்பத்தைத் தரும்.

**

மணக்குடவர் உரை

களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும்.

இது நரகம் புகுத்தும் என்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

களவின்கண் கன்றிய காதல் – பிறர் பொருளைக் கவர்தலின்கண் ஊன்றிய வேட்கை ; விளைவின்கண் வீயா விழுமம் தரும் – அற்றைக்கு நலஞ் செய்வதுபோல் தோன்றிப் பின்பு பயன் விளையுங் காலத்தில் தீராத துன்பத்தை யுண்டாக்கும்.

களவாசை வேரூன்றியதினால் மேன்மேலுங் களவிற் பயிற்றி, அதனால் இம்மைக்கும் மறுமைக்கும் தீராத பழியும் தீவினையும் விளைக்குமாதலின், ‘வீயா விழுமந் தரும்’ என்றார்.

**

கலைஞர் உரை

களவு   செய்வதில்  ஒருவனுக்கு  ஏற்படும் தணியாத தாகம், அதனால்

உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The lust inveterate of fraudful gain,

Yields as its fruit undying pain.

**

Yogi Shuddhananda Translation

The fruit that fraud and greed obtain

Shall end in endless grief and pain.

**

285      

அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

பரிமேலழகர் உரை

அருள் கருதி அன்பு உடையர் ஆதல் – அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல், பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் – பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது. (தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சிகூடாது என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

அருளைப் பெரிதாகக் கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

**

மணக்குடவர் உரை

அருளைக் குறித்து உயிர்மீது அன்புடையரா யொழுகுதல் பொருளை குறித்துப் பிறரது மறவியைப் பார்ப்பார் மாட்டு இல்லை.

இஃது அருளும் அன்பு மில்லையாமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அருள் கருதி அன்பு உடையர் ஆதல் – அருளின் அருமை நோக்கிப் பிறரிடத்து அன்புடையரா யொழுதல்; பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்-பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பாரிடத்தில் உண்டாகாது.

தம் சொந்தப் பொருளைத் தீதென்று விட்டுவிட்டுத் துறவு பூண்டோர், பின்பு மீண்டும் பொருளாசை கொண்டு பிறர் பொருளைக்கவரச் சமையம் பார்ப்பாராயின், நீங்கின நோயின் மறுதாக்கு முன்னினும் வலிதாயிருத்தல்போல அவராசையும் வலிதாயிருக்குமாதலின், அவர் கவரக் கருதும் பொருளுடையார் மீது அவர்க்கு அருளோ அன்போ பிறவாதென்பது கருத்து.

**

கலைஞர் உரை

மறந்திருக்கும்   நேரம்    பார்த்துப்   பிறர்   பொருளைக்  களவாட

எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘Grace’ is not in their thoughts, nor know they kind affection’s power,

Who neighbour’s goods desire, and watch for his unguarded hour.

**

Yogi Shuddhananda Translation

Love and Grace are not their worth

Who watch to waylay dozer’s wealth.

**

286      

அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்

கன்றிய காத லவர்.

பரிமேலழகர் உரை

அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் – உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார், களவின்கண் கன்றிய காதலவர் – களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார். (உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உற்ற விளைவுகளையும் அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.)

**

மு.வரதராசனார் உரை

களவு செய்து பிறர்பொருள் கொள்ளுதலின் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

**

மணக்குடவர் உரை

களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர் நேரின்கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார்.

இது நேர் செய்ய மாட்டாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

களவின்கண் கன்றிய காதலவர்-களவின்கண் ஊன்றிய வேட்கை யுடையவர் ; அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார்-தமக்குரிய ஒழுக்க வரம்பின்கண் நின்று ஒழுக மாட்டார்.

அளவைகளால் உயிர்க்கு வரும் இன்பதுன்பக் கூறுகளை ஆராய்ந்தறிதல் மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்திற்கே சிறப்பாக ஏற்குமாதலின், அறவூழ்கம் (தருமத்தியானம்) என்னும் ஆருகத மதக் கொள்கையைப் பரிமேலழகர் இங்குப் புகுத்துவது பொருந்தாது.

**

கலைஞர் உரை

ஓர்   எல்லைக்குட்பட்டு   வாழ்வைச்   செம்மையாக     அமைத்துக்

கொள்ளாதவர்கள்,    களவு    செய்து  பிறர்   பொருளைக் கொள்வதில்

நாட்டமுடையவராவார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

They cannot walk restrained in wisdom’s measured bound,

In whom inveterate lust of fraudful gain is found.

**

Yogi Shuddhananda Translation

They cannot walk in measured bounds

who crave and have covetous ends.

**

287      

களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு

மாற்றல் புரிந்தார்க ணில்.

பரிமேலழகர் உரை

களவு என்னும் கார் அறிவு ஆண்மை – களவு என்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை உடையராதல்; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் – உயிர் முதலியவற்றை அளத்தல் என்னும் பெருமையை விரும்பினார்கண் இல்லை. (இருள் – மயக்கம். காரியத்தைக் காரணமாக உபசரித்துக் ‘களவென்னும் கார் அறிவு ஆண்மை’ என்றும், காரணத்தைக் காரியமாக்கி ‘அளவு என்னும் ஆற்றல்’ என்றும் கூறினார். களவும் துறவும், இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறாகலின், ஒருங்கு நில்லா என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

களவு என்பதற்குக் காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

**

மணக்குடவர் உரை

களவாகிய பொல்லா அறிவுடைமை நேராகிய பெருமையைப் பொருந்தினார்மாட்டு இல்லை.

இது நேரறிந்தவர் களவு காணாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

களவு என்னும் கார் அறிவு ஆண்மை-களவாண்மை என்று சொல்லப்படும் இருண்ட அறிவுடைமை ; அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்-எல்லாப் பொருள்களின் இயல்பையும் உள்ளவாறு அளந்தறியுந் திறமையை விரும்பினவரிடத்து இல்லை.

இருள் என்பது அகவிருளாகிய மயக்கம். புறவிருளின் கருமை இனம் பற்றி அகவிருட்கும் ஏற்றப்பட்டது. களவையுந் திறம்படச் செய்வதற்கு அறிவு வேண்டியிருப்பதால், அத்தீய அறிவு காரறிவெனப்பட்டது. ‘என்னும்’ என்பது ஈரிடத்தும் ‘ஆகிய’ என்னும் பொருளது. ஒளியுடன் இருள்பொருந்தாததுபோலத் துறவறத்திற்குரிய தூய அறிவொடு தீய அறிவு பொருந்தாது என்பது கருத்து.

**

கலைஞர் உரை

அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல்

எனும் சூதுமதி கிடையாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Practice of fraud’s dark cunning arts they shun,

Who long for power by ‘ measured wisdom’ won.

**

Yogi Shuddhananda Translation

Men of measured wisdom shun

Black art of fraud and what it won.

**

288      

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்

களவறிந்தார் நெஞ்சிற் கரவு.

பரிமேலழகர் உரை

அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் – அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும், களவு அறிந்தார் நெஞ்சில் கரவு – களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை. (உயிர் முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம்போல், களவுசெய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.

**

மணக்குடவர் உரை

நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்: களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும்.

இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்த்தல் முடியாதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல – பொருள்களின் இயல்பை உள்ளவாறறிந்தவரின் உள்ளத்தில் அறம் நிலைத்து நிற்றல்போல; களவு அறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும்-களவையே பயின்றவரின் உள்ளத்தில் வஞ்சனை நிலைத்து நிற்கும்.

பழக்கம் நிலைத்து நிற்கும் இயல்பினதென்பதும், பொருள்களின் இயல்பை அளந்தறிதல் துறவறத்திற்கு இன்றியமையாத தென்பதும், இங்குக் கூறப்பட்டன.

**

கலைஞர் உரை

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர்

நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

As virtue dwells in heart that ‘measured wisdom’ gains;

Deceit in hearts of fraudful men established reigns.

**

Yogi Shuddhananda Translation

Virtue abides in righteous hearts

Into minds of frauds deceit darts.

**

289      

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

மற்றைய தேற்றா தவர்.

பரிமேலழகர் உரை

அளவு அல்ல செய்தாங்கே வீவர் – அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர், அளவு அல்ல மற்றைய தேற்றாதவர் – களவு அல்லாத பிறவற்றை அறியாதவர். (தீய நினைவுகளாவன : பொருளுடையாரை வஞ்சிக்குமாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்ட அதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், ‘செய்து’ என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்கும் ஆகலின் ஆங்கே வீவர்’ என்றும் கூறினார். மற்றையாவன: துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய், கனி ,கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை. இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

களவு செய்தல் தவிர மற்ற நல்லவழிகளை நம்பித் தெளியாதவர், அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.

**

மணக்குடவர் உரை

நேர் ஆகாதன செய்து அவ்விடத்தே கெடுவார்; களவல்லாத மற்றைய அறங்களைத் தெளியாதவர்.

இது கள்வாரை அரசர் கொல்வரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

களவு அல்ல மற்றைய தேற்றாதவர்-களவல்லாத பிறவற்றை அறியாதவர்; அளவு அல்ல செய்து ஆங்கே வீவர்- வரம்பு கடந்த செயல்களைச் செய்து அப்பொழுதே அழிவர் .

வரம்பு கடந்த செயல்கள் பெருங் களவுகள். அப்பொழுதே அழிதல், கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கப்பட்டு அரசனாலும் மக்களாலும் தண்டனை யடைதலும் எரியுலகில் வீழ்தலும். தேற்றாதவர் என்பது தன்வினைப் பொருளில் வந்த பிறவினைச்சொல்.

**

கலைஞர் உரை

களவு   என்பதைத்   தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு

கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who have no lore save that which fraudful arts supply,

Acts of unmeasured vice committing straightway die.

**

Yogi Shuddhananda Translation

They perish in their perfidy

Who know nothing but pilfery.

**

290      

கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தே ளுலகு.

பரிமேலழகர் உரை

கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் – களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும், கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது – அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது. (உயிர் நிற்றற்கு இடனாகலின், உயிர்நிலை எனப்பட்டது. சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், ‘உயிர் நிலையும் தள்ளும்’ என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் ‘புத்தேள் உலகும் தள்ளாது’ என்றும் கூறினார். ‘மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ (குறள்.566) என்புழியும் ‘தள்ளுதல்’ இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

களவு செய்வார்க்கு உடலில் உயிர்வாழும் வாழ்வும் தவறிப்போகும். களவு செய்யாமல் வாழ்வோர்க்குத் தேவருலகம் வாய்க்கத் தவறாது.

**

மணக்குடவர் உரை

பிறர் பொருளைக் கள்வார்க்கு உயிர்நிலையாகிய வீடு பெறுதல் தப்பும். கள்ளா

தார்க்குத் தேவருலகம் பெறுதல் தப்பாது.

இது கள்வார் முத்தி பெறுதலுமிலர், கள்ளாதார் சுவர்க்கம் பெறாமையுமிலரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

கள்வார்க்கு உயிர்நிலை தள்ளும்-களவு செய்வார்க்குத் தம்முடனேயே யுள்ள தம் சொந்த வுடம்பும் தவறும்; கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது-அது செய்யாதார்க்கு நெடுந் தொலைவிலுள்ள தேவருலகந் தவறாது கிட்டும்.

உயிர்நிற்பது உயிர்நிலை. தாம் குடியிருக்கும் வீடு போல்வது என்பதை யுணர்த்த ‘உயிர்நிலை’ யென்றார். உயிர்நிலை தள்ளுதலாவது அரசனால் தண்டிக்கப்படுதல்.

” கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.”(குறள்.550.)

” கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

வெள்வேற் கொற்றங் காண்”(சிலப். 20 . 654.)

**

கலைஞர் உரை

களவாடுபவர்க்கு   உயிர்    வாழ்வதேகூடத்  தவறிப்போகும்; களவை

நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

The fraudful forfeit life and being here below;

Who fraud eschew the bliss of heavenly beings know.

**

Yogi Shuddhananda Translation

Even the body rejects thieves;

The honest men, heaven receives.

**

×