3 நீத்தார் பெருமை

அதிகாரம் 3.

நீத்தார் பெருமை

21       

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவற் றுணிவு.

பரிமேலழகர் உரை

[அஃதாவது ,முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ் அறமுதற்பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் அவர் ஆகலின், இது வான் சிறப்பின்பின் வைக்கப்பட்டது.]

ஒழுக்கத்து நீத்தார் பெருமை – தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு – விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. (தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய ‘பயன்இல்’ முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய ‘எனது’ என்பதும், அகப்பற்று ஆகிய ‘யான்’ என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. ‘பனுவல்’ எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும்.

**

மணக்குடவர் உரை

ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும்.

யாதானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பனுவல் துணிவு – நூல்களது துணிவு; ஒழுக்கத்து நீத்தார் பெருமை – தமக்குரிய ஒழுக்கத்தின்கண் உறைத்து நின்று உலகப்பற்றைத் துறந்த முனிவரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் – சிறந்த பொருள் எல்லாவற்றுள்ளும் சிறந்ததாக விரும்பும்.

ஆசிரியர் துணிவு அவர்நூல்மேல் ஏற்றப்பட்டது.

“தொண்டரே இறைவ னுள்ளத் தொடுக்கம்

தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே”.

என்னும் ஒளவையார் கூற்றைத் தழுவியது இக்குறள். பற்று, நான் என்று தன்னைப்பற்றிய அகப்பற்றும் எனது என்று தன் உடமைகளைப் பற்றிய புறப்பற்றும் என இருவகையாம்.

**

கலைஞர் உரை

ஒழுக்கத்தில்  உறுதியான   துறவிகளின்  பெருமை, சான்றோர்  நூலில்

விருப்பமுடனும். உயர்வாகவும் இடம் பெறும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The settled rule of every code requires, as highest good,

Their greatness who, renouncing all, true to their rule have stood.

**

Yogi Shuddhananda Translation

No merit can be held so high

As theirs who sense and self deny.

**

22       

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்

திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.

பரிமேலழகர் உரை

துறந்தார் பெருமை துணைக் கூறின் – இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவு என்று எண்ணால் கூறி அறியலுறின் அளவுபடாமையான்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – இவ்வுலகத்துப் பிறந்து இறந்தாரை எண்ணி, இத்துணையர் என அறியலுற்றாற் போலும். (முடியாது என்பதாம், ‘கொண்டால்’ என்னும் வினை எச்சம் ‘கொண்டு’ எனத் திரிந்து நின்றது.)

**

மு.வரதராசனார் உரை

பற்றுகளைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரையில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றது.

**

மணக்குடவர் உரை

காம முதலாகத் துறந்தார் பெருமைக்கு அளவு கூறின் உலகத்துப் பிறந்திறந்தாரை இத்துணையாரென்று எண்ணி யறியலுற்றாற் போலும்.

இது பெருமைக்கெல்லை கூறுத லரிதாயினுஞ் சில சொல்லப் புகாநின்றே னென்றது கருதிக் கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

துறந்தார் பெருமை துணைக்கூறின் – இருவகைப்பற்றையும் முற்றும் விட்டுவிட்ட முனிவரது பெருமையை இவ்வளவினதென்று அளவிட்டுக் கூறப்புகின்; வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – அது இவ்வுலகத்தில் இதுவரை பிறந்திறந்தவரையெல்லாம் இத்தனையர் என எண்ணியறியப் புகுந்தாற் போல்வதாம்.

இரண்டும் முடியாதென்பது. கொண்டால் என்னும் வினையெச்சம் கொண்டு எனத்திரிந்தது. கொண்ட அற்று எனினுமாம்.

**

கலைஞர் உரை

உலகில்  இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா?

அதுபோலத்தான்  உண்மையாகவே   பற்றுகளைத்  துறந்த  உத்தமர்களின்

பெருமையையும் அளவிடவே முடியாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

As counting those that from the earth have passed away,

‘Tis vain attempt the might of holy men to say.

**

Yogi Shuddhananda Translation

To con ascetic glory here

Is to count the dead upon the sphere.

**

23       

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்

பெருமை பிறங்கிற் றுலகு.

பரிமேலழகர் உரை

இருமை வகை தெரிந்து – பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை – அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று – உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, ‘இருமை’ என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

**

மணக்குடவர் உரை

பிறப்பும் வீடுமென்னு மிரண்டினது கூறுபாட்டை யாராய்ந்து இவ்விடத்தே துறவறத்தை மேற்கொண்டவரது பெருமை உலகத்தில் மிக்கது.

இஃது எல்லாரானும் போற்றப்படுமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இருமை வகை தெரிந்து – பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்பவின்பக் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து; ஈண்டு அறம்பூண்டார் பெருமை – பிறப்பறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று – உலகின்கண் விளங்கித் தோன்றிற்று.

படைகொண்டு பொருது பார்முழுதும் வென்றவரினும், ஐம்புலனையடக்கி ஆசையை வென்றவரே பெரியர் என்பது. பிரிநிலையேகாரம் செய்யுளில் தொக்கது.

**

கலைஞர் உரை

நன்மை எது,   தீமை   எது   என்பதை   ஆய்ந்தறிந்து நன்மைகளை

மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக் குரியவர்களாவார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Their greatness earth transcends, who, way of both worlds weighed,

In this world take their stand, in virtue’s robe arrayed.

**

Yogi Shuddhananda Translation

No lustre can with theirs compare

Who know the right and virtue wear.

**

24       

உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்

வரனென்னும் வைப்புக்கோர் வித்து.

பரிமேலழகர் உரை

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம். (இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று. அந்நிலத்திற்சென்று முளைத்தலின், ‘வித்து’ என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

**

மணக்குடவர் உரை

அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன் மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

உரன் என்னும் தோட்டியான் – அறிவு என்னும் துறட்டியினால், ஓரைந்தும் காப்பான் – பொறிகளாகிய யானைகள் ஐந்தையும் தன்தன் புலன்மேற் செல்லாது அடக்குபவன்; வரன் என்னும் வைப்பிற்கு – எல்லா நிலங்களுள்ளும் மேலான வீட்டு நிலத்திற்போய் முளைத்தற்குரிய; ஓர் வித்து – ஒரு விளைந்த மணி விதை போல்வான்.

உரனைத் துறட்டியாக உருவகித்துப் பொறிகளை யானைகளாக உருவகியாதது ஒருமருங்குருவகம். துறடு – துறட்டி – தோட்டி.

புரம் = மேல், மேன்மாடம். புரம் – பரம் = மேல், மேலிடம், மேலுலகம். பரம் – வரம் = மேன்மை. வரம் – வரன் (கடைப்போலி) = மேலுலகம், வீட்டுலகம்.

இனி, வைப்பு என்பதற்குச் சேர்த்து வைக்கும் இடம் என்று பொருள்கொண்டு, வீட்டுலமாகிய களஞ்சியத்திற் சேர்த்துவைக்கப் பெறும் விளைந்த மணிபோல்வான் என்று உரைக்கினும் பொருந்தும்.

**

கலைஞர் உரை

உறுதியென்ற  அங்குசம்   கொண்டு,   ஐம்பொறிகளையும்   அடக்கிக்

காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

**

Rev. Dr. G.U.Pope Translation

He, who with firmness’ curb the five restrains,

Is seed for soil of yonder happy plains.

**

Yogi Shuddhananda Translation

With hook of firmness to restrain

The senses five, is heaven to gain.

**

25       

ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா

னிந்திரனே சாலுங் கரி.

பரிமேலழகர் உரை

ஐந்து அவித்தான் ஆற்றல் – புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி – அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று. (ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், ‘இந்திரனே சாலும் கரி’ என்றார்.

**

மு.வரதராசனார் உரை

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

**

மணக்குடவர் உரை

நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று.

இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஐந்தவித்தான் ஆற்றல் – ஐம்புலனையும் அடக்கின முனிவனது வலிமைக்கு; அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி – அகன்ற வானத்துள்ள தேவர்க்கரசனாகிய வேந்தனே (இந்திரனே) போதிய சான்றாளனாம்.

ஐந்து என்பது தொகைக்குறிப்பு. ஐந்தும் என்னும் முற்றும்மையும் ஆற்றற்கு என்னும் 4-ஆம் வேற்றுமையுருபும் செய்யுளால் தொக்கன. “தான் ஐந்தவியாது சாபமெய்தி நின்று அவித்தவனதாற்றல் உணர்த்தினானாதலின், ‘இந்திரனே சாலுங் கரி’ யென்றார்”. என்று பரிமேலழகர் அகலிகை சாவிப்புக் கதையை இங்கெடுத்துக் காட்டியது பொருந்தாது, அவள் கணவனான கோதமன் ஐந்தவித்தானல்லன் ஆகலின்.

“இந்திரன் சான்று என்றது, இவ்வுலகின்கண் மிகத்தவஞ் செய்வார் உளரானால், அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியன் என்றவாறு”. என்று மணக்குடவரும்,

“ஈண்டுத் தன்பதங் கருதித் தவஞ்செய்யும் நீத்தார்மாட்டுத் திலோத்தமை முதலிய தெய்வமகளிரை விடுத்து, மற்று அத்தவமழித்துந் தவம் அழியாமை நிலைநிற்கையாலும், தனது பதம் விரும்பாமையாலும், தானே சான்றாய் அமையும் என்றவாறு”. என்று காளிங்கரும் கூறிய விளக்கம் ஒருவாறு பொருந்தும்.

ஆயினும், ஆசிரியர் கருதிய கதை ஒன்றிருத்தல்வேண்டும். அது இன்று அறியப்படவில்லை. இந்திரன் என்பது வேந்தன் என்னும் தென்சொற்கு நேரான வடநாட்டுச் சொல். வேந்தன் மருத நிலத் தமிழ்த்தெய்வம். “வேந்தன் மேய தீம்புன லுலகமும்” (தொல். 951)

**

கலைஞர் உரை

புலன்களை   அடக்க  முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச்

சான்றாக   இந்திரன்   விளங்கி, ஐம்புலன்களால்  ஏற்படும்  ஆசைகளைக்

கட்டுப்படுத்தியதால் வான்புகழ்  கொண்டவர்களின்  ஆற்றலை   எடுத்துக்

காட்டுகிறான்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Their might who have destroyed ‘the five,’ shall soothly tell

Indra, the lord of those in heaven’s wide realms that dwell.

**

Yogi Shuddhananda Translation

Indra himself has cause to say

How great the power ascetics’ sway.

**

26       

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

பரிமேலழகர் உரை

செயற்கு அரிய செய்வார் பெரியர் – ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் – அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். (செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இமயம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, ‘நாலிரு வழக்கின் தாபதபக்கம்'(புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.)

**

மு.வரதராசனார் உரை

செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

**

மணக்குடவர் உரை

செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர். அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர்.

செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

செயற்கு அரிய செய்வார் பெரியர் – உயர்திணை எனப்படும் மக்களுள் பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்து முடிப்பவர் பெரியோர்; செயற்கு அரிய செய்கலாகாதார் சிறியர் – பிறர் செய்யமுடியாத அருஞ்செயல்களைச் செய்யாது எளிய செயல்களையே செய்து முடிப்பவர் சிறியோர்.

“செயற்கரியவாவன இயமம் நியமம் முதலாய எண்வகை யோக வுறுப்புகள்”. என்பர் பரிமேலழகர். எண்வகை ஓக உறுப்புகள் கடிவு (இமயம்), நோன்பு (நியமம்), இருக்கை (ஆசனம்), வளிநிலை (பிராணாயாமம்), ஒருக்கம் (பிரத்தியாகாரம்), நிறை (தாரணை), ஊழ்கம் (தியானம்), ஒன்றுகை (சமாதி) என்பன. இவற்றுள் ஒருக்கமும் நிறையுமான மனவடக்கம் சிறந்ததாம்.

“வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும்

வேதித்து விற்றுண்ணலாம்

வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்

விண்ணவரை யேவல்கொளலாம்

சந்ததமு மிளமையோ டிருக்கலா மற்றொரு

சரீரத்தினும் புகுதலாம்

சலமே னடக்கலாம் கனன்மே லிருக்கலாம்

தன்னிகரில் சித்திபெறலாம்

சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற

திறமரிது”

என்றார் தாயுமான அடிகள். ஆதலால், மனமடக்குதலும் அவாவறுத்தலுமே செயற்கரிய செயல்கள் என அறிக.

செயற்கெளியவாவன உலகத்தொழில் செய்தலும் பொருளீட்டுதலும் இன்பந்துய்த்தலும் எளியாரை வாட்டுதலுமாம். இல்லறம் துறவறத்தை நோக்க எளிதாயினும், அதையுஞ்செய்ய இயலாதவர் சிலர் உளர். அவரே சிறியர் என்னுங் கருத்தினர் “செயற்குரிய செய்கலாதார்” என்று பாட வேறுபாடு காட்டுவர். அவ்வேறுபாடு பெரியர் சிறியர் என்னும் இரு வகுப்பார்க்கும் இடையே வேறொரு வகுப்பாரையும் வேண்டுதலின், அது அத்துணைச் சிறந்ததன்றாம்.

**

கலைஞர் உரை

பெருமை   தரும்   செயல்களைப்  புரிவோரைப்  பெரியோர் என்றும்,

சிறுமையான   செயல்களையன்றிப்      பெருமைக்குரிய    செயல்களைச்

செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Things hard in the doing will great men do;

Things hard in the doing the mean eschew.

**

Yogi Shuddhananda Translation

The small the paths of ease pursue

The great achieve things rare to do.

**

27       

சுவையொளி யூறொசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு.

பரிமேலழகர் உரை

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை – சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு – ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். ‘வகைதெரிவான் கட்டு’ என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

**

மணக்குடவர் உரை

சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய்வான் கண்ணதே யுலகம்.

எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தின் வகை – சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என்னும் பூதமூலங்கள் ஐந்தின் கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு – ஆராய்ந்தறியும் ஓகியின் அறிவிற்குள் அடங்கியதே உலகம்.

காட்சி ஒளியினால் தோன்றுதலின் ஒளியெனப்பட்டது. உறுவது ஊறு. உறுதலாவது உடம்பின் உள்ளும் புறம்பும் படுதல் அல்லது தொடுதல். உலக வழக்கில் தீய பொருளிலேயே வழங்கும் நாற்றம் என்னும் சொல், இங்கு நறுமைக்குந் தீமைக்கும் பொதுவாய் நின்றது.

உகு – யுஜ் (வ). ஓதம் – யோக (வ.g). ஓகி – யோகின் (வ.g).

ஐந்தின் கூறுபாடாவன, மேற்கூறிய பூதமூலம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய நிலம், நீர், தீ, வளி, (காற்று) வெளி என்னும் பூதங்கள் ஐந்தும், அவற்றொடு தொடர்புடைய புலனைக் கொண்ட மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அறிவுப் பொறியைந்தும், அவற்றைப்போல் உடம்பின் கூறாகிய நாவு, கை, கால், அண்டி (எருவாய்) குறி (கருவாய்), கருமப்பொறி யைந்தும் ஆக இருபதுமாம். இனி, ‘வகைதெரிவான் கட்டு’ என்றதினால், தெரிகின்ற ஆதனும் (புருடனும்) , அவன் தெரிதற் கருவியாகிய மதி (மான்) தன்முனைப்பு (அகங்கார) மனங்களும், அவற்றிற்கு. முதலாகிய சித்தமும் (மூலப்பகுதியும்) பெறப்படும்.

இவற்றை ஆராயும் வகை : –

ஆதன் தான் ஒன்றினின்று தோன்றாமையாலும் பிறிதொன்றைத் தோற்றுவியாமையாலும் தனிநிலையாம்.

மூல முதனிலை ( சித்தம் ) தான் ஒன்றினின்று தோன்றாமையால் முதனிலையாம்.

மதியும் அதனின்று தன்முனைப்பும் அதனின்று பூத மூலங்களுமாக ஏழும், மூல முதனிலையினின்று முறையே தோன்றுவதனாலும் மன முதலியவற்றைத் தோற்றுவித்தலாலும் இடைநிலையாம்.

மனமும் அறிவுப்பொறிகளும் கருமப்பொறிகளும் பூதங்களுமாகிய பதினாறும், இடைநிலையினின்று தோன்றுவதனாலும் வேறெவற்றையுந் தோற்றுவியாமையாலும் இறுதிநிலையாம்.

இனி, சாங்கியத்திற்கு மாறாக,

அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு

என்றமையால், எல்லாவற்றொடுங் கலந்துநின்று அவற்றையியக்கி முத்தொழிற்படுத்தும் இறைவனென்னும் முழு முதனிலையொடு சேர்க்க. மெய்ப்பொருள்கள் மொத்தம் இருபத்தாறாம். ஆகவே, “சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல்” என்பது தவறாம் துண்ணிய அடிப்படைப் பாகுபாட்டில், ஆவிவடிவான உயிராதனும் (சீவாத்துமாவும்) பரவாதனும் (பரமாத்துமாவும்) காற்றுள் அடங்குதலால், ஐந்தின் வகையென்று எல்லாவற்றையும் அடக்கினார் ஆசிரியர். வெளி என்னும் இடத்தின் உண்மை நீட்சி அல்லது தொடர்ச்சியே காலம்.

ஐம்பூதங்களும் அவற்றொடு தொடர்புள்ள பொறிபுலன்களும்

பூதம்   பூதத்தன்மை  பொறி            புலன்

நிலம்  நாற்றம்          மூக்கு முகர்தல்

நீர்       சுவை வாய்   சுவைத்தல்

தீ         ஒளி     கண்    காண்டல்

வளி    ஊறு   மெய்  உறுதல்(தொடுதல்)

வெளி ஒசை   செவி  கேட்டல்

“வகை தெரிவான் கட்டு” என்றது உடம்பொடு புணர்த்தல் என்னும் உத்தி ; அதாவது, ஒர் உண்மையை அல்லது நெறியை வெளிப்படையாகக் கூறாது ஒரு சொல்லாட்சியாற் பெறவைத்தல். கண்ணது – கட்டு ( கண் + து ).

மூலப்பகுதியின் சேர்க்கையாற் கட்டுற்ற ஆதன் ( புருடன் ) அதைத்தன்னின் வேறாகக் காண்டலே வீடுபேறென்பது சாங்கியக் கொள்கை. அதிற் கடவுட் கொள்கையில்லை.

**

கலைஞர் உரை

ஐம்புலன்களின்   இயல்பை  உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன்

கொண்டவனையே உலகம் போற்றும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Taste, light, touch, sound , and smell: who knows the way

Of all the five, -the world submissive owns his sway.

**

Yogi Shuddhananda Translation

They gain the world, who grasp and tell

Of taste, sight, hearing, touch and smell.

**

28       

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.

பரிமேலழகர் உரை

நிறைமொழி மாந்தர் பெருமை – நிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் – நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். (‘நிறைமொழி’ என்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.)

**

மு.வரதராசனார் உரை

பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

**

மணக்குடவர் உரை

நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும்.

இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நிறைமொழி மாந்தர் பெருமை – பயன் நிறைந்த சொற்களையுடைய துறவியரின் பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும் – நிலவுலகத்தில் அவர் கட்டளையாகச் சொல்லப்பெறும் மந்திரங்களே கண்கூடாகக் காட்டிவிடும்.

இக்குறள்,

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப”.

என்னும் தொல்காப்பிய நூற்பாவைத் ( 1484 ) தழுவியது. மறை மொழி அல்லது மந்திரம் என்பது, வாய்மொழியும் சாவிப்பும் என இருவகைப்படும். திருமூலரின் திருமந்திரமும், நம்மாழ்வாரின் திரு வாய்மொழியும் வாய்மொழிபோல்வன; கவுந்தியடிகள் காவிரித் தென்கரைச் சோலையொன்றில் வம்பப்பரத்தையும் வறுமொழியாளனுமான இருவரை நரிகளாக்கியது சாவிப்பு. மறை ( வேத ) த் தன்மையுடைய மொழி மறைமொழி ; மனத்திண்மையாற் கருதியது நிறை வேறும் மொழி மந்திரம் . மன் + திரம் = மந்திரம். முன்னுதல் = கருதுதல். முன் – மன். திரம் = திறம். ஒ.நோ : மன்று – மந்து – மந்தை. முரி – முறி ( வளை ).

ஆரியர் வருகைக்கு முற்பட்டதும், எண்வகை வனப்பான பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுநிலத்திற்கும் இலக்கியமாயிருந்ததுமான முதலிரு கழகத் தூய தமிழிலக்கியம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டதென அறிக.

**

கலைஞர் உரை

சான்றோர்களின்   பெருமையை, இந்த உலகில்  அழியாமல்  நிலைத்து

நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The might of men whose word is never vain,

The ‘Secret word’ shall to the earth proclaim.

**

Yogi Shuddhananda Translation

Full-worded men by what they say,

Their greatness to the world display.

**

29       

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்த லரிது.

பரிமேலழகர் உரை

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி – துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; ‘கணம் ஏயும்’ காத்தல் அரிது – தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது. (சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின்,கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், ‘காத்தல் அரிது’ என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறிநின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

**

மணக்குடவர் உரை

குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது.

நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி – நற் குணத்தொகுதி என்னும் மலையின் கொடுமுடியேறி நின்ற முனிவரின் கடுஞ்சினத்தை; கணமேயும் காத்தல் அரிது – சினக்கப்பட்டாரால் நொடி நேரமேனுந் தடுத்தல் முடியாது.

குன்று சிறுமலை. இங்கு மலையென்னும் பொதுப் பொருளது எரிக்கும் நெருப்புப் போன்றது வெகுளி. வேகு – வெகுள் – வெகுளி திண்மையும் பெருமையும் வண்மையும் பற்றி நற்குணத்தொகுதியை மலையாக வுருவகித்தார், இக்குறட்கு, நற்குணமலையாகிய முனிவர் நொடிநேரமேனும் தம் உள்ளத்திற் சினத்தைப் பேணுதலில்லை யென்று பொருள் கூறுவாருமுளர்.அது உரையன்மை,முந்தின குறளாலும் “சொல்லொக்குங் கடிய வேகச் சுடுசரம்” என்னுங் கம்பர் கூற்றாலும் ( பால. தாடகை. 71) கண்டு தெளிக. உம்மை இழிவு சிறப்பு.

**

கலைஞர் உரை

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம்

அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

**

Rev. Dr. G.U.Pope Translation

The wrath ‘tis hard e’en for an instant to endure,

Of those who virtue’s hill have scaled, and stand secure.

**

Yogi Shuddhananda Translation

Their wrath, who’ve climb’d the mount of good,

Though transient, cannot be withstood.

**

30       

அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்

செந்தண்மை பூண்டொழுக லான்.

பரிமேலழகர் உரை

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் – எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் – அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். ‘அந்தணர்’ என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.

**

மு.வரதராசனார் உரை

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால் அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

**

மணக்குடவர் உரை

எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர்.

மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் – எவ்வகைப்பட்ட உயிர்களிடத்தும் செம்மையான குளிர்ந்த அருளைப் பூண்டொழுகுதலால்; அந்தணர் என்போர் அறவோர் – அந்தணரென்று சிறப்பித்துச் சொல்லப்படுபவர் துறவியரே.

அந்தணர் என்னுஞ்சொல் அழகிய குளிர்ந்த அருளையுடைவர் என்னும் பொருளது. அருளாவது ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரைப்பட்ட எல்லாவுயிர்களிடத்தும் இரக்கங் கொண்டு அன்பு செய்தல். இது துறவியர்க்கே இயலும். அதனால், அருளுடைமையைத் துறவுநிலைக்குரிய முதலறமாகக் குறித்தார் திருவள்ளுவர். தமக்கு வாழ்வளித்துக் காக்கும் தலைநாகரிக மக்களையுந் தாழ்வாகக் கருதும் தந்நல ஆணவப் பிராமணர் அந்தணராகார் என்பது, இதனால் அறிவிக்கப்பட்டது. பூணுதல் நோன்பாக மேற்கொள்ளுதல். ‘என்போர்’ செயப்பாட்டுவினை செய்வினையாக நின்றது; ‘மற்று’ அசைநிலை. உம்மை முற்றும்மை.

**

கலைஞர் உரை

அனைத்து   உயிர்களிடத்திலும்  அன்புகொண்டு   அருள்  பொழியும்

சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Towards all that breathe, with seemly graciousness adorned they live;

And thus to virtue’s son’s the name of ‘Anthanar’ men give.

**

Yogi Shuddhananda Translation

With gentle mercy towards all,

The sage fulfils the vitue’s call.

**

×