5 இல்வாழ்க்கை

அதிகாரம் 5.

இல்வாழ்க்கை

41       

இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு

நல்லாற்றி னின்ற துணை.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, இல்லாளோடு கூடி வாழ்தலினது சிறப்பு.இந்நிலை அறம் செய்தற்கு உரிய இருவகை நிலையுள் முதலது ஆதலின், இஃது அறன் வலியுறுத்தலின் பின் வைக்கப்பட்டது)

இல்வாழ்வான் என்பான் – இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை- அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை – அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம். (இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் ‘நல் ஆற்றின் நின்ற துணை’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

**

மணக்குடவர் உரை

இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை. (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்)

என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இல்வாழ்வான் என்பான் இல்லறத்தில் வாழ்பவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வேளாளன்; இயல்புடைய மூவர்க்கும்-இல்லறத்தில் வாழும் இயல்புடைய ஏனை மூவர்க்கும்; நல்லாற்றின் நின்ற துணை-அவர் செல்லும் நல்லற நெறிக்கண் நிலைபெற்ற துணையாம்.

ஏனை மூவராவார் இருவகை யந்தணருள் இல்லறத்தானான பார்ப்பானும் அரசனும் வணிகனுமாவர். ‘இயல்புடைய’ என்னும் அடைமொழி அதிகார இயைபினால் இல்லறத்தாரைக் குறிக்குமேயன்றித் துறவறத்தாரைக் குறிக்காது. அந்தணர் (பார்ப்பார்) முதலிய நால்வரும் இல்லறத்தாரா யிருப்பரேனும், அவருள் தலைசிறந்தவர் வேளாளரே யென்பது கருத்து.

“உழுவா ருலகத்திற் காணியஃ தாற்றா

தெழுவாரை யெல்லாம் பொறுத்து.”

“ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்.”

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்

தொழுதுண்டு பின்செல்பவர்.”

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்

கைம்புலத்தா றோம்ப றலை.”

“இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.”

“வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.”

என்று திருவள்ளுவரும்,

“வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான்” என்று நல்லாதனாரும், கூறியிருத்தலையும், ‘இல்வாழ்வான்’ என்பதனோடொத்த ‘குடியானவன்’ என்னுஞ் சொல் உலக வழக்கில் உழவனையே குறித்து வருதலையும் நோக்குக.

ஆரியர் வருமுன் ஐயரென்றும் பார்ப்பாரென்றும் சொல்லப்பட்ட இருவகையந்தணரும் தமிழரே. அவருள் முன்னவர் துறவியர்; பின்னவர் ஆசிரியர் புலவர் பண்டாரம் உவச்சர் குருக்கள் திருக்கள் நம்பியர் போற்றியர் எனப் பல்வேறு பெயர்பெற்ற இல்லறத்தார். ஏனை மூவகுப்பார் போன்றே அந்தணரும் இருவகுப்பார் என அறிக.

திருவள்ளுவர் பிராமணீயம் என்னும் ஆரியத்தை ஓழிக்கவே நூல் செய்தாராதலின், பிரமசரியம் வானப்பிரத்தம் சந்நியாசம் என்னும் முந்நிலைப்பட்ட பிராமணரைக் காத்தலைத் தமிழ வேளாளன் கடமையெனக் கூறியிரார் என்பது தெளிவுறு தேற்றமாம்.

“அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை” என்று ஆசிரியர் கூறுவதால்,’நல்லாறு’ என்றது இல்லறத்தையே என்பது துணியப்படும்.’என்பான்’ என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப் பொருளது.

**

கலைஞர் உரை

பெற்றோர், வாழ்க்கைத்   துணை,   குழந்தைகள்   என  இயற்கையாக

அமைந்திடும்  மூவர்க்கும்  துணையாக   இருப்பது இல்லறம் நடத்துவோர்

கடமையாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The men of household virtue, firm in way of good, sustain

The other orders three that rule professed maintain.

**

Yogi Shuddhananda Translation

The ideal householder is he

Who aids the natural orders there.

**

42       

துறந்தார்க்குத் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு

மில்வாழ்வா னென்பான் றுணை.

பரிமேலழகர் உரை

துறந்தார்க்கும்- களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் – நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் ‘துணை’-இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான்.

******************************************************************

மணக்குடவர் உரை

வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான். (வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்)

மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

துறந்தார்க்கும்-உலகப்பற்றைத் துறந்தவர்க்கும்; துவ்வாதவர்க்கும்-உண்பதற்கில்லாத வறியர்க்கும்: இறந்தார்க்கும்-ஒருவருமின்றித் தன்னிடம் வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் துணை-இல்லறத்தான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் துணையாம்.

“உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்

விட்டேமென் பார்க்கு நிலை”.

“இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்”.

என்று ஆசிரியர் வேறிடத்துங் கூறுதல் காண்க.

“துறந்தார் பொருமை” (22) “துறந்தாரின் தூய்மை” (159), “துறந்தார்க்குத் துப்புரவு “(263) , “துறந்தார் படிவத்தர்” (586) என வருமிடமெல்லாம், துறந்தார் என்னுஞ்சொல் செய்வினைப் பொருளே தருதலால், “களைகணானவராற்றுறக்கப் பட்டார்க்கும்” என்று பரிமேலழகர் ஈண்டு செயப்பாட்டுவினைப் பொருள் கூறுவது பொருந்தாது. முந்தின குறளுரையில் அவர் மூவகைப் போலித் துறவியரைப் பொருத்தியதினாலேயே இங்கு இவ்வாறுரைக்க நேர்ந்தது. களைகணானவரால் துறக்கப்பட்டவரும் துவ்வாதவருள் அடங்குவர். இறந்தார்க்குச் செய்யுந்துணை ஈமக்கடனும் இறுதிக் சடங்கும் தென்புலத்தார் படையலுமாம்.

**

கலைஞர் உரை

பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும்,  பாதுகாப்பற்றவர்க்கும்

இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

To anchorites, to indigent, to those who’ve passed away,

The man for household virtue famed is needful help and stay.

**

Yogi Shuddhananda Translation

His help the monk and retired share,

And celebrate students are his care.

**

43       

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்

கைம்புலத்தா றோம்ப றலை.

பரிமேலழகர் உரை

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று – பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை – ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம். (பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென்திசை ஆதலின், ‘தென்புலத்தார்’ என்றார். தெய்வம் என்றது சாதியொருமை. ‘விருந்து’ என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்: சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று. ‘என்ற என்பது விகாரமாயிற்று’. ‘ஆங்கு’ அசை. ஐவகையும் அறம் செய்தற்கு இடனாகலின் ‘ஐம்புலம்’ என்றார். அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக.)

**

மு.வரதராசனார் உரை

தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

**

மணக்குடவர் உரை

பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.

தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று – இறந்த முன்னோர் வழிபடுதெய்வம் விருந்தினர் ஏழையுறவினர் தன் குடும்பம் என்று சொல்லப்படும்; ஆங்கு ஐம்புலத்து ஆறு ஒம்பல் – அவ் வைந்திடத்தும் செய்யவேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல்; தலை – இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாம்.

முதற்காலத் தமிழகமாகிய குமரிநாடு பல்வேறு கடல்கோள்களால் மூழ்கிப் போனமையால், அது இருந்த தென்றிசை கூற்றுவன்திசையாகவும் இறந்தோரின் இருப்பிடமாகவும் கொள்ளப்பட்டது. தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாவது, அவர் ஆவி ஆறுதலும் மகிழ்வும் அடைதற்பொருட்டு, அவர் இறந்த நாளில் தெய்வத்திற்குப் படைப்பது போல் அடையாள முறையிற் சில வுண்டிகளை அவர்க்கும் படைத்து, அவர் பெயரால் துறவியர்க்கும் இரப்போர்க்கும் சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல். தெய்வம் என்றது அவரவர் உளநிலைக் கேற்றவாறு சிறுதெய்வமும் பெருந்தேவனும் கடவுளுமாகிய மூவகைத் தேவுகளை. கோயிற்கும் அடியார்க்கும் செய்யும் தானங்களும் தெய்வ வழிபாட்டின் பாற்படும் விருந்து என்றது புதிதாக வரும் மதிப்புள்ள அயலாரை. அவரை வரவேற்றுச் சிறந்த உணவளிப்பது இக்காலத்து வழக்கற்றது. அயலுரினின்று வந்த உறவினர்க்குச் சிறந்த வுணவளிப்பது கைம்மாறு கருதிய கடமையேயன்றி அறமாகாது. தன் என்றது தன்னையுந்தன் குடும்பத்தையும் “உண்டி முதற்றே யுணவின் பிண்டம்” (புறம் – 18). “உடம்பாரழியின் உயிரா ரழிவர்” ( திருமந்திரம், 724 ). ஆதலால், பிறருக்குத் தொண்டு செய்பவன் தன்னையும் பேணிக் கொள்ளல் வேண்டும் “தனக்கு மிஞ்சித் தானம்”. ஆதலால், ஒருவன் தன் குடும்பத்தைக் கவனியாது பிறரைப் பேணுதலும் அறமாகாது.

இங்குக் குறிக்கப்பட்ட ஐந்திட வினைகளும் அறவினையாகவே ஆறாவது இடமாகிய அரசிற்குச் செலுத்தவேண்டிய வரி கட்டாய வினையாகிய கடமையாயிற்று. ஆறிலொரு கடமையிறுத்தல் என்னும் பண்டை வழக்கும், உழவனையே இல்லறத்தாருட் சிறந்தவனாகக் காட்டும். பிறதொழிலார் எல்லாரும் பெரும்பாலும் குறிப்பிட்ட சிறுதொகைப் பணத்தையே வரியாகச் செலுத்திவந்தனர்.

“பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்”.

என்று திருவள்ளுவரும்,

“இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்

உழவிடை விளைப்போர் பழவிற லூர்களும்”.

(சிலப். 10: 149.150)

என்று இளங்கோவடிகளும், கூறுதல் காண்க.

**

கலைஞர் உரை

வாழ்ந்து  மறைந்தோரை  நினைவுகூர்தல், வாழ்வாங்கு  வாழ்வோரைப்

போற்றுதல்,    விருந்தோம்பல்,   சுற்றம்  பேணல்   ஆகிய கடமைகளை

நிறைவேற்றத் தன்னை    நிலைப்படுத்திக்   கொள்ளல் எனப்படும் ஐவகை

அறநெறிகளும் இல்வாழ்வுக் குரியனவாம்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The manes, God. Guest, Kindred, self, in due degree

These Five to cherish well is chiefest charity.

**

Yogi Shuddhananda Translation

By dutiful householder’s aid

God, manes, kin, self and guests are served.

**

44       

பழியஞ்சிப் பாத்தூ னுடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்.

பரிமேலழகர் உரை

பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் – பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்பு உடைய மூவர் முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல் – அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றல் அல்லது இறத்தல் இல்லை. (பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், ‘பழி அஞ்சி’ என்றார். வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல் ஏற்றப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால், அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

**

மணக்குடவர் உரை

இல்வாழ்க்கையாகிய நிலை, பழியையுமஞ்சி பகுத்துண்டலையுமுடைத்தாயின், தனதொழுங்கு, இடையறுதல் எக்காலத்தினுமில்லை.

மேல் பகுக்குமாறு கூறினார். பகுக்குங்காற் பழியோடு வாராத பொருளைப் பகுக்க வேண்டுமென்று கூறினார்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வாழ்க்கை – ஒருவனது இல்லறவாழ்க்கை; பழி அஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின் – ஈயாத கஞ்சன் என்று பிறர் பழித்தற்கு அஞ்சித் துறந்தார் முதலிய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய ஐவர்க்கும் அவன் பொருளைப் பகுத்தளித்து உண்டலை இயல்பாகக் கொண்டிருப்பின் ; வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்-அவனது மரபுவழி ஒருபோதும் அறாது எக்காலும் தொடர்ந்து வருவதாம்.

இறைவனருளும் உலகோர் வாழ்த்தும் அவன் வழியை நீடிக்கச் செய்யும் என்பது கருத்து.

**

கலைஞர் உரை

பழிக்கு  அஞ்சாமல்   சேர்ந்த  பொருள்  கணக்கின்றி    இருப்பினும்

அதைவிட, பழிக்கு  அஞ்சிச்   சேர்த்தபொருளைப்   பகுத்து   உண்ணும்

பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who shares his meal with other, while all guilt he shuns,

His virtuous line unbroken though the ages runs.

**

Yogi Shuddhananda Translation

Sin he shuns and food he shares

His home is bright and brighter fares.

**

45       

அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை

பண்பும் பயனு மது.

பரிமேலழகர் உரை

இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் – ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் – அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

**

மணக்குடவர் உரை

இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே.

பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் – ஒருவனது இல்லறவாழ்க்கை அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதலையும் அவர் கருத்தொருமித்துப் பிறர்க்குச் செய்யும் அறவினைகளையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் – அவ்வுடைமை அவ்வாழ்க்கைக்கு முறையே தன்மையும் பயன்விளைவுமாகும்.

இல்லறவாழ்க்கை இருபகட்டொருசகட் டொழுக்கம் போல்வ தாகலின், கணவன் மனைவியரிடைப்பட்ட இருதலையன்பு அதன் பண்பாயிற்று. அதனாற் செய்யப்படும் அறம் அதன் பயனாயிற்று. அன்பு பண்பும் அறம் பயனும் ஆகும் என்பது நிரனிறை.

**

கலைஞர் உரை

இல்வாழ்க்கை   பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு

அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

**

Rev. Dr. G.U.Pope Translation

If love and virtue in the household reign,

This is of life the perfect grace and gain.

**

Yogi Shuddhananda Translation

In grace and gain the home excels,

Where love with virtue sweetly dwells.

**

46       

அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்

போஒய்ப் பெறுவ தெவன்.

பரிமேலழகர் உரை

இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் – ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் – அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? (‘அறத்தாறு’ என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. ‘புறத்தாறு’ இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

**

மணக்குடவர் உரை

இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?.

மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் – ஒருவன் இல்லறவாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி நடத்துவானாயின்; புறத்தாற்றில் போய்ப் பெறுவது எவன் – அதற்குப் புறம்பாகியதுறவு நெறியிற் போய்ப் பல்வகையில் துன்புறுவதல்லது சிறப்பாகப் பெறும் பயன் யாது?

அறத்தாறு என்றது அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், நடுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனிலசொல்லாமை, தீவினை யச்சம், ஒப்புரவறிதல், ஈகை என்னும் பதினாறறத் தொகுதியை. இல்லறத்தாலும் வீடுபேறுண்டாமென்பது தமிழர் கொள்கையாதலின், துறவறத்தினால் மட்டும் வீடுபெற முடியும் என்னும் ஆரியக் கொள்கையை மறுத்து, இல்லறத்தில் தானும் இன்புற்றுப் பிறர்க்கும் ஒல்லும் வகையால் அறவினை ஒவாதே செல்லும் வாயெல்லாம் செய்து இறுதியில் பேரின்பமும் பெறுவதாயிருக்க; துறவறத்திற் போய்ப் பசிபட்டினியாலும் தட்பவெப்ப மிகையாலும் துன்புற்றும் ஒருவர்க்கும் ஒருவகையிலும் உதவாதும், கூடாவொழுக்கத்திற் காளாகியும், ஒருகால் இறுதியிற் பிறவாவீடுபெறினும் சிறப்பாகப் பெறுவது எதுதானென்று வினவுகின்றார் ஆசிரியர். சிவனடியார் பலர் இல்லறத்தில் நின்றே வீடு பெற்றாரென்று பெரிய புராணங் கூறுதல் காண்க. போஒய் என்பது இசைநிறை யளபெடை.

**

கலைஞர் உரை

அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள்  பெற்றிடும்

பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

If man in active household life a virtuous soul retain,

What fruit from other modes a virtue can he gain?

**

Yogi Shuddhananda Translation

Who turns from righteous family

To be a monk, what profits he?

**

47       

இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்

முயல்வாரு ளெல்லாந் தலை.

பரிமேலழகர் உரை

இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் – இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை – புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். (முற்றத் துறந்தவர் விட்டமையின், ‘முயல்வார்’ என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், ‘தலை’ எனவும் கூறினார்.)

**

மு.வரதராசனார் உரை

அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன்- வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன் ஆவான்.

**

மணக்குடவர் உரை

நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான்.

முயறல்- பொருட்கு முயறல்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் – முறைப்படி இல்லறவாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்; முயல்வாருள் எல்லாம் தலை – பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையானவனாம்.

முற்றத்துறந்தார் யாரென மக்களால் அறியப் படாமையின், ‘முயல்வாருளெல்லாம்’ என்றும், இருவகை யறத்தார்க்கும் உதவியே வீடு பெறுதலின் ‘தலை’ என்றுங் கூறினார். என்பான் என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப்பொருளது.

**

கலைஞர் உரை

நல்வாழ்வுக்கான   முயற்சிகளை  மேற்கொள்வோரில் தலையானவராகத்

திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.

**

Rev. Dr. G.U.Pope Translation

In nature’s way who spends his calm domestic days,

‘Mid all that strive for virtue’s crown hath foremost place.

**

Yogi Shuddhananda Translation

Of all who strive for bliss, the great

Is he who leads the married state.

**

48       

ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரி னோன்மை யுடைத்து.

பரிமேலழகர் உரை

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை – தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து – அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (பசி முதலிய இடையூறு நீக்கலின் ‘ஆற்றின் ஒழுக்கி’ என்றார். ‘நோற்பார்’ என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், ‘நோற்பாரின் நோன்மையுடைத்து’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

**

மணக்குடவர் உரை

பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும்

இல்வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து.

ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்தென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஆற்றின் ஒழுக்கி – தவஞ்செய்வாரைத் தவநெறியில் ஒழுகச் செய்து; அறன் இழுக்கா இல்வாழ்க்கை – தானும் தன் அறத்தினின்று தவறாத, இல்லறவாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து – அத்தவஞ் செய்வார் நிலையினும் மிகுந்த பொறைத் திறனை யுடையது.

பசி தகை முதலிய இடையூற்றை நீக்கலின் ‘ஆற்றினொழுக்கி’ என்றார். இல்வாழ்வான் தன்மை அவன் வாழ்க்கைமேல் ஏற்றிக் கூறப்பட்டது. இல்லறத்தையுங் காத்துத் தவநெறியையும் ஊக்குவது, தவநெறியை மட்டுங் காப்பதினும் வலிமையுடைத்தாயிற்று. நோற்பார் என்பது ஆகுபொருட்சொல்.

**

கலைஞர் உரை

தானும்   அறவழியில்   நடந்து, பிறரையும்    அவ்வழியில்   நடக்கச்

செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப்

பெருமையுடையதாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Others it sets upon their way, itself from virtue ne’er declines;

Than stern ascetics’ pains such life domestic brighter shines.

**

Yogi Shuddhananda Translation

Straight in virtue, right in living

Make men brighter than monks praying.

**

49       

அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்

பிறன்பழிப்பது தில்லாயி னன்று.

பரிமேலழகர் உரை

அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை – இருவகை அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று – ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று. (ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், ‘அஃது’ என்னும் சுட்டுப்பெயர் அதன் மேல் நின்றது. ‘பிறன் பழிப்பது’ என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம் மனத்தையும் பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத்துய்க்கும் மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று. இவை நான்கு பாட்டானும் இல்நிலையே பயனுடைத்து என இதன் சிறப்புக் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்; அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

**

மணக்குடவர் உரை

அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப்படுவதொன்றை யுடைத்தல்லவாயின்.

பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை. இனி வாழ்க்கைத் துணைநலங் கூறுகின்றாராகலின், இது கூறப்பட்டது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை – இரு வகை யறத்துள்ளும் அறம் என்று தமிழ் நூல்களாற் சிறப்பித்துச் சொல்லப்பெற்றது இல்லறமே; அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று – அவ்வில்லறமும் பிறராற் பழிக்கப்படாத தூய்மையுடைத்தாயின் மிக நன்றாம்.

பிரிநிலையேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. அஃது என்னுஞ் சுட்டுப் பெயர், முற்குறிக்கப் பெற்ற இல்லறத்தைச் சுட்டுமேயன்றி அதற்கு மறுதலையானதும் ஓரிடத்துங் குறிக்கப் பெறாததுமான துறவறத்தைச் சுட்டாது. மேலும், துறவறமும் நல்லதே யென்று கூறின், அது ‘அறனெனப் பட்டது இல்வாழ்க்கையே’ என்னும் பிரிநிலைத்தேற்றக் கூற்றின் வலிமையைக் கெடுத்து முன்னுக்குப் பின் முரணாதல் காண்க. “இல்லற மல்லது நல்லற மன்று” என்னும் ஒளவையார் கூற்றையும் நோக்குக.

பிறன்பழிக்கும் இல்வாழ்க்கை விருந்தோம்பாமையாலும் பிறனில் விழைவாலும் வரைவின் மகளிர் தொடர்பாலும் பிறவற்றாலும் நேர்வதாம்.

**

கலைஞர் உரை

பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The life domestic rightly bears true virtue’s name;

That other too, if blameless found, due praise may claim.

**

Yogi Shuddhananda Translation

Home-life and virtue, are the same;

Which spotless monkhood too can claim.

**

50       

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்

தெய்வத்துள் வைக்கப் படும்.

பரிமேலழகர் உரை

வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் – இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், ‘தெய்வத்துள் வைக்கப்படும்’ என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.(அதி.24.புகழ்)

**

மு.வரதராசனார் உரை

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.

**

மணக்குடவர் உரை

இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன்.

இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – இவ்வுலகத்தில் இல்லறத்து வாழும் முறைப்படி வாழ்கின்றவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் – இவ்வுலகத்தானேயாயினும் வானுலகிலுள்ள தேவருள் ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான்.

இல்லறவாழ்க்கையில் தூய்மையாக வாழ்பவன் மக்களுட் சிறந்தவனாக இருப்பனாதலாலும், இம்மையிற் செய்த நல்வினைப் பயனை மறுமையில் தேவனாகித் தேவருலகத்தில் நுகர்வான் என்னும் நம்பிக்கையினாலும், ‘வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்றார். தெய்வம் என்றது வகுப்பொருமை.

**

கலைஞர் உரை

தெய்வத்துக்கென  எத்தனையோ   அருங்குணங்கள்  கூறப்படுகின்றன.

உலகில்   வாழ  வேண்டிய  அறநெறியில்  நின்று  வாழ்கிறவன்  வானில்

வாழ்வதாகச்   சொல்லப்படும்   தெய்வத்துக்கு    இணையாக    வைத்து

மதிக்கப்படுவான்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who shares domestic life, by household virtues graced,

Shall, mid the Gods, in heaven who dwell, be placed.

**

Yogi Shuddhananda Translation

He is a man of divine worth

Who lives in ideal home on earth.

**

×