6 வாழ்க்கைத் துணைநலம்

அதிகாரம் 6.

வாழ்க்கைத் துணைநலம்

51       

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, அவ்வில்வாழ்க்கைக்குத் துணை ஆகிய இல்லாளது நன்மை. அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.)

மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் – மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.

**

மணக்குடவர் உரை

தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

மனைத்தக்க மாண்பு உடையளாகி – இல்லறத்திற் கேற்ற நற்குண நற்செய்கைகள் உடையவளாய்; தற்கொண்டான் வளத்தக்காள் – தன்னை மணந்து கொண்ட கணவனின் வருவாய்க்குத் தக்கவாறு வாழ்க்கை நடத்துபவள்; வாழ்க்கைத் துணை-அவனுக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாம்.

நற்குணங்களாவன, கணவனையும் பிறக்கும் மக்களையும் பேணுதலும் அன்பாக விருந்தோம்புதலும் துறவியரைப் போற்றுதலும் இரப்போர்க்கு ஈதலும் முதலியன, நற்செய்கைகளாவன, அறுசுவை யுண்டிகளைச் சுவையாகச் சமைத்தலும் வீட்டையும் பொருள்களையும் பாதுகாத்துக் கொள்ளுதலும் அக்கம் பக்கத்தாரொடு நட்பாயிருத்தலும் கணவன் உத்தரவின்றி வீட்டைவிட்டு வெளியேறாமையும் முதலியன.

**

கலைஞர் உரை

இல்லறத்திற்குரிய   பண்புகளுடன்,  பொருள்  வளத்துக்குத்  தக்கவாறு

குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

As doth the house beseem, she shows her wifely dignity;

As doth her husband’s wealth befit, she spends: helpmeet is she.

**

Yogi Shuddhananda Translation

A good housewife befits the house,

Spending with thrift the mate’s resource.

**

52       

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை

யெனைமாட்சித் தாயினு மில்.

பரிமேலழகர் உரை

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் – மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் – அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. (‘இல்’ என்றார் பயன்படாமையின்.)

**

மு.வரதராசனார் உரை

இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால். ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

**

மணக்குடவர் உரை

குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் – இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள் ஒருவனுடைய மனைவியிடத்தில் இல்லாவிடின்; வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல் – அவனது இல்வாழ்க்கை வேறு செல்வத்திலும் அதிகாரத்திலும் எத்துணைச் சிறந்ததாயினும் சிறப்புடையதாகாது.

‘இல்’ என்றது பயனின்மையை, “ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே”. என்னும் பழமொழி இங்குக் கவனிக்கத் தக்கது.

**

கலைஞர் உரை

நற்பண்புள்ள   மனைவி   அமையாத    இல்வாழ்க்கை    எவ்வளவு

சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.

**

Rev. Dr. G.U.Pope Translation

If household excellence be wanting in the wife,

Howe’er with splendour lived, all worthless is the life.

**

Yogi Shuddhananda Translation

Bright is home when wife is chaste.

If not all greatness is but waste.

**

53       

இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ

னில்லவண் மாணாக் கடை.

பரிமேலழகர் உரை

இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் – ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் – அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? (‘மாண்பு’ எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

**

மணக்குடவர் உரை

ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் – ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்புடையவளானால் அவனுக்கு இல்லாதது எது?; இல்லவள் மாணாக்கடை உள்ளது என் – அம்மனைவி அச்சிறப்பில்லாதவளானால் அவனுக்கு உள்ளது எது?

மாண்பு என்னும் பண்பின் பெயர் பண்பியின்மேல் நின்றது. இல்லறத்திற்கு முதன்மையாக வேண்டுவது மனைவியின் குணச் சிறப்பே என்பது இதனாற் கூறப்பட்டது.

**

கலைஞர் உரை

நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.

அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

**

Rev. Dr. G.U.Pope Translation

There is no lack within the house, where wife in worth excels,

There is no luck with the house, where wife dishonoured dwells.

**

Yogi Shuddhananda Translation

What is rare when wife is good.

What can be there when she is bad?

**

54       

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்.

பரிமேலழகர் உரை

பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் – அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் ‘யாஉள’ என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

**

மணக்குடவர் உரை

பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பெண்ணின் பெருந்தக்க யா உள ஒருவன் இவ்வுலகத்திற் பெறக்கூடிய பொருள்களுள் மனைவியினுஞ் சிறந்த தகுதியுடையவை வேறு எவை உள்ளன? ; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் -அவளிடத்திற் கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருக்குமாயின்.

கற்பு என்பது கற்போல் உறுதியான இருபாலிடைக் காதற் பண்பு. கல் -கற்பு. “கற்பு றுத்திய கற்புடை யாடனை” என்று கம்பரும் (அயோத்தி. நகர்நீங்கு. 19) கூறுதல் காண்க. அது மணப்பருவம் வரை தோன்றாதிருந்து பின்பு ஒருவரையே காதலிப்பது; இருபாற்கும் பொதுவானது. ஆதலின், மனைவியையன்றி அணங்கையும் நோக்காத ஆண்கற்பும் கணவனையன்றிக் காவலனையும் நோக்காத பெண்கற்பும் எனக்கற்பு இருதிறப்பட்டதாம். இங்குக் கூறியது பெண்கற்பு என அறிக. இன்னும் இதன் விளக்கத்தைக் கற்பியலிற் காண்க.

கற்புடை மனைவியால் அறம்பொருளின்பப் பேற்றுடன் வாழ் நாளும் நீடிப்பதால், பெண்ணிற் பெருந்ததக்க யாவுள? என்றார். உண்டாகப் பெறின் என்பது உண்டாதலின் அருமை குறித்து நின்றது.

**

கலைஞர் உரை

கற்பென்னும்  திண்மை    கொண்ட  பெண்மையின் உறுதிப் பண்பைப்

பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?

**

Rev. Dr. G.U.Pope Translation

If women might of chastity retain,

What choicer treasure doth the world contain?

**

Yogi Shuddhananda Translation

What greater fortune is for men

Than a constant chaste woman?

**

55       

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யு மழை.

பரிமேலழகர் உரை

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என – பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் ‘பெய்’ என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், ‘தொழுது எழுவாள்’ என்றார். ‘தொழாநின்று’ என்பது, ‘தொழுது’ எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!

**

மணக்குடவர் உரை

தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தெய்வம் தொழான் – தான் மணக்கு முன்பு தொழுதுவந்த சிறு தெய்வமாகிய இல்லுறை தெய்வத்தைத் தொழாது; கொழுநற் றொழுதெழுவாள் – தன் கணவன் பாதங்களையே வைகறையிறுதியில் தொட்டுக் கும்பிட்டெழும் கற்புடை மனைவி பெய் என மழை பெய்யும் – பெய்யென்று சொன்னவுடன் மழை பெய்யும்.

“அணங்குடை நல்லில்” என்னும் மதுரைக்காஞ்சித் தொடர் (678) இல்லுறை தெய்வத்தைக் குறித்தல் காண்க. சிவனும் திருமாலும் போன்ற பெருந்தேவரைக் கற்புடை மனைவியரும் தத்தம் கணவனாரொடு கூடி வழிபட்டமையை, திருநீலகண்ட நாயனாரின் மனைவியார், மங்கையர்க்கரசியார், காரைக்காலம்மையார் முதலியோர் வாழ்க்கையினின்று அறிந்துகொள்க.

“வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது

நீணில வேந்தர் கொற்றம் சிதையாது

பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு” (சிலப். 18 : 445-7)

என்னும் பண்டை நம்பிக்கை, நாளடைவில் “பெய்யெனப் பெய்யும் மழை”, “வான்றரு கற்பின் மனையறம்” ( மணி, உஉ : 53 ), “மழைதரும் இவள் ( மணி, உஉ : 13)என்னும் வழக்குக்கட்கு வழிகுத்தது போலும்! ஒருகால் வள்ளுவர் குறள் பண்டைக்காலத்து ஒரு பத்தினிப் பெண் செய்த இறும்பூதை (அற்புதத்தை ) அடிப்படையாகக் கொண்ட தாகவும் இருக்கலாம்.

இனி, “அனிச்சமும்………நெருஞ்சிப்பழம்” என்பதைப்போல் உயர்வுநவிற்சியாகக் கொள்ளின் ஒரு குற்றத்திற்கும் இடமில்லை.

புரட்சிப் பாவலர் பாரதிதாசனார், “கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழைக்கு ஒப்பாவள்”. என்று பொருள் கூறிப் பொருத்தமாக்குவர்.

தொழா அள் என்பது இசைநிறை யளபெடை.

**

கலைஞர் உரை

கணவன்   வாக்கினைக்  கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி

அவனையே  தொழுதிடும்  மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி

நடுங்கிப்  பெய்கின்ற  மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்

கொள்பவளாவாள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

No God adoring , low she bends before her lord;

Then rising, serves: the rain falls instant at her word!

**

Yogi Shuddhananda Translation

Her spouse before God who adores,

Is like rain that at request pours.

**

56       

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

பரிமேலழகர் உரை

தன் காத்துத் தன் கொண்டான் பேணி – கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து – இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் – மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

**

மணக்குடவர் உரை

தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தற்காத்து-தன் கற்பையும் உடல்நலத்தையுங் காத்து; தற்கொண்டாற் பேணி – தன் கணவனையும் உண்டி மருந்து முழுக்கு முதலியவற்றாற் பேணி; தகைசான்ற சொல்காத்துதம் – இருவரையும் பற்றிய தகுதிவாய்ந்த உலக மதிப்பையுங் காத்து; சோர்விலாள் – பிறர்க்குச் செய்யும் அறவினைகளிலும் தளர்ச்சியில்லாதவள்; பெண் – இல்லறத்திற்குச் சிறந்த பெண்ணாவாள்.

**

கலைஞர் உரை

கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு,தமக்குப்

பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல்

இருப்பவள் பெண்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who gaurds herself, for husband’s comfort cares, her household’s fame,

In perfect wise with sleepless soul preserves,-give her a woman’s name.

**

Yogi Shuddhananda Translation

The good wife guards herself from blame,

She tends her spouse and brings him fame.

**

57       

சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்

நிறைகாக்குங் காப்பே தலை.

பரிமேலழகர் உரை

மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் – மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை – அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், ‘நிறைகாக்கும் காப்பே தலை’ என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

**

மு.வரதராசனார் உரை

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.

**

மணக்குடவர் உரை

மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும்-பெண்டிரைக் கணவர் சிறைச்சாலையுள் அடைத்துவைத்தாற்போற் காக்குங் காவல் என்ன பயன்படும் ?; நிறை காக்கும் காப்பே தலை -அப்பெண்டிரே தங்கள் கற்பினால் தங்களைக் காத்துக் கொள்ளுதலே தலையாய காவலாம்.

சிறை காப்பாவது இரவும் பகலும் வீட்டைவிட்டு வெளியேறாமற் காவல் செய்தல். நிறை யென்பது மனத்தைக் கற்புநெறியில் நிறுத்துதல். கற்பில்லாத பெண்ணைக் காவல் செய்தல் அரிது என்பது கருத்து. ஏகாரம் பிரிநிலை.

**

கலைஞர் உரை

தம்மைத்  தாமே  காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை

அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Of what avail is watch and ward?

Honour’s a woman’s safest guard.

**

Yogi Shuddhananda Translation

Of what avail are watch and ward?

Their purity is women’s guard.

**

58       

பெற்றார்ப் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழு முலகு.

பரிமேலழகர் உரை

பெண்டிர் பெற்றான் பெறின் – பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் – புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப் பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.

**

மணக்குடவர் உரை

பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பெண்டிர் பெற்றாற் பெறின் – பெண்டிர் தம் கணவனுக்குத் தொண்டு செய்தலைப் பெறுவாராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ் சிறப்புப் பெறுவர் – தேவர் வாழும் உலகின்கண் அவராற் பெருஞ்சிறப்புச்செய்யப் பெறுவர்.

தொண்டுசெய்தல் என்பது சொல்லெச்சம். கொண்டானைப் பேணும் பெண்டிர் மண்ணுலகத்தில் மட்டுமன்றி விண்ணுலகத்திலும் சிறப்படைவர் என்பது இதனாற் கூறப்பட்டது.

**

கலைஞர் உரை

நற்பண்பு   பெற்றவனைக்   கணவனாகப்   பெற்றால்,    பெண்டிர்க்கு

இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

If wife be wholly true to him who gained her as his bride,

Great glory gains she in the world where gods bliss abide.

**

Yogi Shuddhananda Translation

Women who win their husbands’ heart

Shall flourish where the gods resort.

**

59       

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்முன்

னேறுபோற் பீடு நடை.

பரிமேலழகர் உரை

புகழ் புரிந்த இல் இலோர்க்கு – புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை – தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. (‘புரிந்த’ என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், ‘ஏறுபோல்’ என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர்முன் காளைபோல் நடக்கும் பெருமித நடை இல்லை.

**

மணக்குடவர் உரை

புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை.

ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

புகழ் பரிந்த இல் இல்லோர்க்கு – தனக்கும் தன் கணவனுக்கும் புகழை விரும்பிய மனைவியில்லாதார்க்கு; இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை இல்லை-தம்மைப் பழித்துரைக்கும் பகைவர் முன் ஆணரிமா போல் இறுமாந்து நடக்கும் பெருமித நடையில்லை.

பரிந்த என்னும் பெயரெச்சத்தின் அகரம் தொக்கது. ஏறு என்னும் விலங்கின ஆண்பாற் பொதுப் பெயர் நடைச் சிறப்புப்பற்றி இங்கு அரிமாவின் ( சிங்கத்தின் ) ஆண்பாலைக் குறித்தது. கற்புடை மனைவியாற் கணவன் மதிக்கப்படுதலை,

“செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ” (புறம். 3 : 6 ),

“அறம்பா டிற்றே ஆயிழை கணவ” (புறம். 34 : 7 )

“சேணுறு நல்லிசைச் சேயிழை கணவ” (பதிற். 88 : 36)

என்னும் விளிகள் உணர்த்துதல் காண்க.

**

கலைஞர் உரை

புகழுக்குரிய   இல்வாழ்க்கை  அமையாதவர்கள்,   தம்மைப்  பழித்துப்

பேசுவோர்   முன்பு   தலைநிமிர்ந்து   நடக்க  முடியாமல் குன்றிப் போய்

விடுவார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who have not spouses that in virtue’s praise delight,

They lion-like can never walk in scorner’s sight.

**

Yogi Shuddhananda Translation

A cuckold has not the lion-like gait

Before his detractors aright.

**

60       

மங்கல மென்ப மனைமாட்சி மற்றத

னன்கல நன்மக்கட் பேறு.

பரிமேலழகர் உரை

மங்கலம் என்ப மனை மாட்சி – ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு – அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. (‘அறிந்தோர்’ என்பது எஞ்சி நின்றது. ‘மற்று’ அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்றும் கூறுவர்.

**

மணக்குடவர் உரை

ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

மனைமாட்சி மங்கலம் – மனைவியின் நற்குண நற்செய்கைச் சிறப்பே இல்லறத்திற்கு மங்கலமாவது; நன்மக்கட்பேறு அதன் நன்கலம் – நல்ல அறிவுடை மக்கட்பேறு அதற்கு அணிகலமாவது; என்ப – என்று கூறுவர் அறிந்தோர்.

மங்கலமென்பது நெடுநன்மை. அறிந்தோர் என்னும் எழுவாய் எஞ்சி நின்றது. ‘மற்று’ அசைநிலை; பெயர்மாற்று எனினும் ஒக்கும். இல்லறத்திற்கு அணிகலங் கூறுமுகத்தான் அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

**

கலைஞர் உரை

குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு  மேலும்

சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.

**

Rev. Dr. G.U.Pope Translation

The house’s ‘blessing’, men pronounce the house – wife excellent;

The gain of blessed childern is its goodly ornament.

**

Yogi Shuddhananda Translation

An honest wife is home’s delight

And children good are jewels abright.

**

×