8 அன்புடைமை

அதிகாரம் 8.

அன்புடைமை

71       

அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர்

புல்கணீர் பூச றரும்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, அவ் வாழ்க்கைத்துணையும் புதல்வரும் முதலிய தொடர்புடையார்கண் காதலுடையன் ஆதல்.அதிகார முறைமையும் இதனானே விளங்கும். இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள்மேல் அருள்பிறத்தலும் அன்பின் பயன் ஆகலின் , இது வேண்டப்பட்டது. வாழ்க்கைத்துணை மேல் அன்பு இல்வழி இல்லறம் இனிது நடவாமை ‘அறவோர்க்கு அளித்தலும் , அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை’ (சிலப்.16,71-73) என்பதனானும்,அதனான் ‘அருள்பிறத்தல் அருள் என்னும் அன்பு ஈன் குழவி’ (குறள்.757) என்பதனாலும் அறிக.)

அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ – அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ?; ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் -தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் ஆதலான். (உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை. கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படும் என்பதாம். இதனால் அன்பினது உண்மை கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.

**

மணக்குடவர் உரை

அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் – ஒருவரது அன்பிற்கும் அதைப் பிறர் அறியாதவாறு அடைத்துவைக்கும் தாழ்ப்பாள் உளதோ? ஆர்வலர் புன் கண் நீர் பூசல் தரும்-தம்மால் அன்புசெய்யப் பட்டாரது துன்பங்கண்டவிடத்து அன்புடையாரின் துன்புறுங் கண் சிந்தும் நீரே அவருள்ளத்திலுள்ள அன்பை எல்லாரும் அறியப் பறைசாற்றிவிடும்.

உம்மை சிறப்புப் பற்றியது. புன்கண் புன்கூர்ந்த கண். புன்மை துன்பம். ஆர்வலர் துன்பம் அவர் கண்ணின் மேல் ஏற்றப்பட்டது.

இனி, துன்பக்கண்ணீரன்றி நீண்டகாலத்திற்குப்பின் கண்ணன்ன கேளிரைக் காணும்போது சிந்தும் காதற்கண்ணீரும் உண்டென அறிக.

**

கலைஞர் உரை

உள்ளத்தில் இருக்கும்  அன்பைத்   தாழ்ப்பாள்   போட்டு  அடைத்து

வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து,  கண்ணீர்த்துளி

வாயிலாக அது வெளிப்பட்டு விடும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

And is there bar that can even love restrain?

The tiny tear shall make the lover’s secret plain.

**

Yogi Shuddhananda Translation

What bolt can bar true love in fact

The trickling tears reveal the heart.

**

72       

அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா

ரென்பு முரியர் பிறர்க்கு.

பரிமேலழகர் உரை

அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் – அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் – அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும் பிறர்க்கு உரியர். (ஆன் உருபுகளும் பிரிநிலை ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. ‘என்பு’ ஆகு பெயர். என்பும் உரியராதல் ‘தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்’ (புறநா.43) முதலாயினார் கண்காண்க.)

**

மு.வரதராசனார் உரை

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

**

மணக்குடவர் உரை

அன்பிலாதார் எல்லாப் பொருளையுந் தமக்கு உரிமையாக வுடையர்: அன்புடையார் பொருளேயன்றித் தம்முடம்புக்கு அங்கமாகிய வெலும்பினையும் பிறர்க்கு உரிமையாக வுடையர்.

அன்புடையார்க்கல்லது அறஞ்செய்த லரிதென்றாயிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் – அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களையுந் தமக்கே பயன்படுத்துவர்; அன்பு உடையார் என்பும் பிறர்க்கு உரியர் – அன்புடையாரோ பிறிதின் கிழமைப்பொருள்களை மட்டுமன்றித் தற்கிழமைப் பொருளாகிய தம் உடம்பையும் பிறர்க்குப் பயன் படுத்துவர்.

பிரிநிலையேகாரமும், ‘உரியர்’ என்னும் வினைக்கேற்ற ‘எல்லாவற்றாலும்’ ‘என்பாலும்’ என்னும் கருவி வேற்றுமையுருபுகளும் தொக்கன. எலும்பு என்பதன் மரூஉவான ‘என்பு’ சினையாகுபெயர் . உம்மை சிறப்பும்மை , உடம்பைப் பிறர்க்கு உதவிய அன்பிற்கு, தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவிற்காகத் தன் தசையையும் உடம்பையும் அளித்த செம்பி ( சிபி ) என்னும் சோழ வேந்தன் கதை எடுத்துக் காட்டாகக் கூறப்பெறும். ஆயின், அதனினும் சிறந்த எடுத்துக்காட்டு, தன் தம்பியால் தன் நாடு கொள்ளப்பட்டுக் காட்டிற்போய்த் தங்கியிருந்த குமணன், தன்னைப்பாடிய பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர்க்குத் தன்தலையை வெட்டிக்கொண்டுபோய்த் தன் தம்பியிடங் காட்டிப் பெரும் பொருள் பெறுமாறு தன் வாளைக் கொடுத்ததாகும். இதை,

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்

நாடிழந் ததனினு நனியின் னாதென

வாள்தந் தனனே தலையெனக் கீயத்

தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்

என்று (புறம்.165 ) அப்புலவர் பாடியதினின்று அறிந்து கொள்க. இனி, பாரி தன்னையும் பரிசிலர்க்குத்தர அணியமாயிருந்ததும் இத்தகைய செயலாம்.

“பறம்பு பாடின ரதுவே யறம்பூண்டு

பாரியும் பரிசில ரிரப்பின்

வாரே னென்னான் அவர்வரை யன்னே”.

என்று ( புறம்.108 ) கபிலர் பாடியிருத்தல் காண்க.

**

கலைஞர் உரை

அன்பு  இல்லாதவர்,  எல்லாம்  தமக்கே என உரிமை கொண்டாடுவர்;

அன்பு  உடையவரோ  தம்  உடல்,  பொருள்,  ஆவி ஆகிய அனைத்தும்

பிறருக்கென எண்ணிடுவர்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The loveless to themselves belong alone;

The loving men are other’s to the very bone.

**

Yogi Shuddhananda Translation

To selves belong the loveless ones;

To oth’rs the loving e’en to bones.

**

73       

அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்

கென்போ டியைந்த தொடர்பு.

பரிமேலழகர் உரை

ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு – பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப – அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர். (பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. ‘இயைந்த’ என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.)

**

மு.வரதராசனார் உரை

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

**

மணக்குடவர் உரை

முற்பிறப்பின்கண் அன்போடு பொருந்தச் சென்ற செலவென்று சொல்லுவர்; பெறுதற்கரிய வுயிர்க்கு இப்பிறப்பின்கண் உடம்போடு இடைவிடாத நட்பினை.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு – பெறுதற்கரிய மக்களுயிர்க்கு உடம்போடு பொருந்திய தொடர்பை;அன்பொடு இயைந்த வழக்கு என்ப – அன்பு செய்தற்கு ஏற்பட்ட நெறியின் பயன் என்று கூறுவர் அறிவுடையோர்.

வழக்கு என்பது வழங்கும் நெறி, அஃது இங்கு அதன் பயனைக் குறித்தது. ‘ அன்பு ‘ ஆகுபெயர். அன்பு செய்தலே மக்கட் பிறப்பின் நோக்கமும் பயனும் என்பது இங்குக் கூறப்பட்டது.

**

கலைஞர் உரை

உயிரும்  உடலும்போல்  அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த

பொருத்தமாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Of precious soul with body’s flesh and bone,

The union yields one fruit, the life of love alone.

**

Yogi Shuddhananda Translation

Soul is encased in frame of bone

To taste the life of love alone.

**

74       

அன்பீனு மார்வ முடமை யதுவீனு

நண்பென்னு நாடாச் சிறப்பு.

பரிமேலழகர் உரை

அன்பு ஆர்வமுடைமை ஈனும் – ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்; அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் – அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவறந்த சிறப்பினைத் தரும்.(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை ‘நாடாச்சிறப்பு’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

**

மணக்குடவர் உரை

அன்பு தரும் ஆர்வமுடைமையை அவ்வார்வமுடைமை தரும். நட்பென்று சொல்லப்பட்ட ஆராய்தலில்லாத சிறப்பினை.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பு ஆர்வமுடைமை ஈனும் – உறவினரிடத்துச் செய்யும் அன்பு ஒருவனுக்குப் பிறரிடத்தும் விருப்பத்தை உண்டாக்கும்; அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும் – அது நாளடைவில் எல்லாரையும் நட்பாக்கி எல்லாப் பொருள்களும் எளிதாய்க் கிடைக்கக் கூடிய நல்ல நிலைமையை உண்டு பண்ணும்.

நாடாமை வருந்தித் தேடாமை.

**

கலைஞர் உரை

அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம்,  நட்பு

எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

From love fond yearning springs for union sweet of minds;

And that the bond of rare excelling friendship binds.

**

Yogi Shuddhananda Translation

Love yields aspiration and thence

Friendship springs up in excellence.

**

75       

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்

தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு.

பரிமேலழகர் உரை

அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப – அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு – இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை. (‘வழக்கு’ ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

**

மணக்குடவர் உரை

முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு – இவ்வுலகத்து இல்லறத்தில் நின்று இன்பம் நுகர்ந்தவர் மறுமையில் தேவருருலகஞ் சென்று அடையும் சிறந்த இன்பத்தை; அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப – அவர் முன்பு இங்கு அன்பொடு பொருந்த வாழ்ந்த நெறியின் பயன் என்று சொல்வர் அறிந்தோர்.

‘ வழக்கு ‘ என்பது ஆகுபொருளது. இல்லறத்தினாலேயே இம்மையில் இவ்வுலக இன்பமும் மறுமையில் விண்ணுலக வின்பமும் பெறுவதற்குக் கரணியமாயிருப்பது அன்பு ஒன்றே என்பது இங்குக் கூறப்பட்டது.

**

கலைஞர் உரை

உலகில்  இன்புற்று    வாழ்கின்றவர்க்கு    வாய்க்கும்  சிறப்பு, அவர்

அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Sweetness on earth and rarest bliss above,

These are the fruits of tranquil life of love.

**

Yogi Shuddhananda Translation

The crowning joy of home life flows

From peaceful psychic love always.

**

76       

அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்

மறத்திற்கு மஃதே துணை.

பரிமேலழகர் உரை

அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் – அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை – ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. (ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின்,மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், ‘மறத்திற்கும் அஃதே துணை’ என்றார். துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள் 1299)என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

**

மணக்குடவர் உரை

அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பு அறத்திற்கே சார்பு என்ப – அன்பு அறத்திற்கே துணையாவது என்று சிலர் சொல்வர்; அறியார் – அவர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை – அதன் மறுதலையான மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.

அறம் மறம் என்பன இங்கு நல் வினை தீவினை என்று பொருள்படும் எதிர்ச் சொற்கள். அன்பு மறத்திற்குத் துணை என்பது, இஞ்சி பித்தத்திற்கு நல்லது என்பது போல்வது.

“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

தகுதியான் வென்று விடல்”. (158)

“இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண

நன்னயஞ் செய்து விடல்”. (314)

என்னுங் குறள்கள் இங்குக் கவனிக்கத்தக்கன. ஒரு பகைவனுக்கு நன்மை செய்தவிடத்து அவன் நாணித் தன் பகைமையைவிட்டு நட்பாவது இயல்பாதலின், “மறத்திற்கு மஃதே துணை” என்றார்.

ஒருவன் தன் மனைவி மக்கள் மேலுள்ள அன்பினால், அவரைக் காத்தற்குத் தீயவழிகளிலும் பொருள் தேடுதல் உலகத்து நிகழ்தலால், அதனையே மறத்திற்கு மஃதே துணை என்று குறித்தார் என்று உரை கூறுவாருமுளர். அகப்பற்றால் தீமை செய்வது போன்றதே புறப்பற்றால் தீமை செய்வது மாதலானும், தீமைக்குத் துணைசெய்வது அறத்தோடு பொருந்தாமையாலும், அது உரையன்மை அறிக.

**

கலைஞர் உரை

வீரச்   செயல்களுக்கும்   அன்பு    துணையாகத் திகழ்கிறது என்பதை

அறியாதவர்களே,   அறச்   செயல்களுக்கு  மட்டுமே  அன்பு துணையாக

இருப்பதாகக் கூறுவார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The unwise deem love virtue only can sustain,

It also helps the man who evil would restrain.

**

Yogi Shuddhananda Translation

“Love is virtue’s friend” say know-nots

It helps us against evil plots.

**

77       

என்பி லதனை வெயில்போலக் காயுமே

யன்பி லதனை யறம்.

பரிமேலழகர் உரை

என்பு இலதனை வெயில் போலக் காயும் – என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்; அன்பு இலதனை அறம் – அன்பில்லாத உயிரை அறக்கடவுள். (‘என்பிலது’ என்றதனான் உடம்பு என்பதூஉம் ‘அன்பிலது’ என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும் ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன் இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு ‘அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்’ (நான்மணி.83) எனப் பிறரும் கூறினார்.)

**

மு.வரதராசனார் உரை

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

**

மணக்குடவர் உரை

என்பிலாத சீவனை வெயில் சுடுமாறு போற் சுடும்: அன்பிலாதவுயிரினை அறம்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அறம் – அறத் தெய்வம்; அன்பு இலதனை – அன்பில்லாத உயிரை; என்பு இலதனை வெயில் போலக் காயும் – எலும்பில்லாத வுடம்பை வெயில் எரித்தாற் போல் எரிக்கும்.

எலும்பில்லாத வுடம்பு பூச்சி புழுக்களுடையன. அன்பில்லாதவுயிர் என்றது மக்களுயிரை. வெயில் வந்தபோது எலும்பில்லா வுடம்பு துன்புறுவதுபோல. வினைப்பயன் வந்தபோது அன்பு செய்யா மக்களுயிர் துன்புறும் என்பது. அன்பு செய்யாமையாவது அதற்கு மறுதலையான தீமை செய்தல். “அறம் பிழைத்தோர்க்கு அறங் கூற்ற மாவது” என்றார் இளங்கோவடிகள் (சிலப். பதிகம்.) “அல்லவை செய்வார்க் கறங் கூற்றம்” என்றார் விளம்பிநாகனார் (நான்மணி 83). மக்களை உயிர் என்றது அன்பின்மையாகிய இழிவு பற்றி.

**

கலைஞர் உரை

அறம்  எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காத வரை, அவரது

மனச்சாட்சியே  வாட்டி  வதைக்கும்.  அது  வெயிலின் வெம்மை புழுவை

வாட்டுவதுபோல இருக்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

As sun’s fierce ray dries up the boneless things,

So loveless beings virtue’s power to nothing brings.

**

Yogi Shuddhananda Translation

Justice burns the loveless form

Like solar blaze the boneless worm.

**

78       

அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பார்க்கண்

வற்றன் மரந்தளிர்த் தற்று.

பரிமேலழகர் உரை

அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை – மனத்தின்கண் அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்; வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று – வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற் போலும். ( கூடாது என்பதாம். வன்பால் – வல்நிலம். வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப் பெயர்.)

**

மு.வரதராசனார் உரை

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

**

மணக்குடவர் உரை

தன்னிடத்து அன்பில்லாத உயிரினது வாழ்க்கை வலிய பாரிடத்து (பாறை) உண்டாகிய உலர்ந்த மரம் தளிர்த்தாற் போலும்.

தளிர்த்தற்குக் காரணமின்மையால் தளிராதென்றவாறு.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அகத்து அன்பு இல்லா உயிர்வாழ்க்கை – உள்ளத்தில் அன்பில்லாத வுயிர் இல்லற வாழ்க்கை நடாத்துதல்; வன்பாற்கண்வற்றல் மரம் தளிர்த்த அற்று-பாலை நிலத்தின் கண் பட்டுப்போன மரம் தளிர்த்தாற் போலும்.

நடவாத தென்பதாம். ‘ வற்றல் ‘ தொழிலாகு பெயர். ‘ வற்றன் மரம்’ இருபெயரொட்டு அன்னது – அற்று. அன்பில்லா மக்களை உயிர் என்றது இழிவுக் குறிப்பு.

**

கலைஞர் உரை

மனத்தில்  அன்பு  இல்லாதவருடைய  வாழ்க்கை,  பாலை  வானத்தில்

பட்டமரம் தளிர்த்தது போன்றது.

**

Rev. Dr. G.U.Pope Translation

The loveless soul, the very joys of life may know,

When flowers, in barren soil, on sapless trees, shall blow.

**

Yogi Shuddhananda Translation

Life bereft of love is gloom

Can sapless tree in desert bloom?

**

79       

புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை

யகத்துறுப் பன்பி லவர்க்கு.

பரிமேலழகர் உரை

யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – யாக்கை அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் – ஏனைப் புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்.? (புறத்து உறுப்பாவன: இடனும், பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றால் பயன் இன்மையின் ‘எவன் செய்யும்’ என்றார். உறுப்புப் போறலின் ‘உறுப்பு’ எனப்பட்டன ‘யாக்கையின் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதார்க்கு’ என்று உரைப்பாரும் உளர்.அதற்குஇல்லறத்தோடு யாதும் இயைபு இல்லாமை அறிக.

**

மு.வரதராசனார் உரை

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?

**

மணக்குடவர் உரை

உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

யாக்கை யகத்து உறுப்பு அன்புஇலவர்க்கு – இல்லறம் நடத்துவாரின் உடம்புள் நின்று இல்லறத்திற்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு; புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் – மற்றப் புறத்து நின்று உறுப்பாவன வெல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்?

புறத்துறுப்பாவன இடம் பொரு ளேவல் முதலியன.

இது பரிமேலழக ருரையைத் தழுவியது.

இனி, மணக்குடவர் பரிதி காளிங்கர் உரைக் கருத்து வருமாறு :-

உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலாதவர்க்குப் புறத்துறுப்பாகிய மெய் வாய் கண் மூக்குச் செவியும், மார்பும் தோளும் முகமும் மயிர்முடியும் பிறவும், மரப்பாவை போல் அழகாயிருந்தும் என்ன பயன்?

இதுவுங் கொள்ளத் தக்கதே, அகத்துறுப்பாகிய அன்பில்லாதவர்க்குப் புறுத் துறுப்பாகிய ஐம்பொறிகளும் கை கால் முதலிய வினையுறுப்புக்களும் நிறைவாயிருந்தும், அவற்றால் இல்லற நடப்பிற்கு என்ன பயன் என்று வினவற்கிட மிருத்தலால், “அதற்கு இல்லறத்தோடு யாதுமியை பில்லாமை யறிக”. என்று பரிமேலழகர் மறுத்துரைப்பது பொருந்தாது. அன்பில்லாத வுடம்பு என்பு தோற்போர்ப் பென்று ஆசிரியரும் அடுத்த குறளிற் கூறுதல் காண்க.

**

கலைஞர் உரை

அன்பு  எனும்  அகத்து  உறுப்பு  இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள்

அழகாக இருந்து என்ன பயன்?

**

Rev. Dr. G.U.Pope Translation

Though every outward part complete, the body’s fitly framed;

What good, when soul within, of love devoid, lies halt and maimed?

**

Yogi Shuddhananda Translation

Love is the heart which limbs must move,

Or vain the outer parts will prove.

**

80       

அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்

கென்புதோல் போர்த்த வுடம்பு.

பரிமேலழகர் உரை

அன்பின் வழியது உயிர்நிலை – அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த – அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா. (இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

**

மணக்குடவர் உரை

உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அன்பின் வழியது உயிர்நிலை – அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுவது; அஃது இல்லார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த – அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் உயிரில்லாது எலும்பைத் தோலாற் போர்த்த போர்ப்புக்களே.

அன்பின் வழியது என்பது அன்பு செய்தற்கென்றே ஏற்பட்டது. இதன் விளக்கமே,

அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்

கென்போ டியைந்த தொடர்பு.

என்னுங் குறள். உயிர்நிலை என்பது கதவுநிலை என்பது போன்ற கூட்டுச் சொல். என்புதோற் போர்ப்பு என்றது பிணத்தினும் இழிந்த தென்னுங் குறிப்பினது.

**

கலைஞர் உரை

அன்புநெஞ்சத்தின்   வழியில்   இயங்குவதே   உயிருள்ள உடலாகும்;

இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.

 **

Rev. Dr. G.U.Pope Translation

Bodies of loveless men are bony framework clad with skin;

Then is the body seat of life, when love resides within.

**

Yogi Shuddhananda Translation

The seat of life is love alone;

Or beings are but skin and bone!

**

×