19ஆம் அதிகாரம் (புறங்கூறாமை)

அதிகாரம் 19.

புறங்கூறாமை

181      

அறம்கூறா னல்ல செயினு மொருவன்

புறம்கூறா னென்ற லினிது.

பரிமேலழகர் உரை

[அஃதாவது, காணாதவழிப் பிறரை இகழ்ந்து உரையாமை. மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், இஃது அழுக்காறாமை வெஃகாமைகளின்பின் வைக்கப்பட்டது.)

ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் – ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது – பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும் மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

**

மணக்குடவர் உரை

ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம்,

இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் – ஒருவன் அறம் என்னுஞ் சொல்லையுஞ் சொல்லாது அறமல்லாதவற்றைச் செய்யினும்; புறங்கூறான் என்றல் இனிது – ஒருவரையும் பற்றிப் புறங்கூறான் என்று உலகத்தாராற் சொல்லப்படுதல் நன்றாம்.

புறங்கூறாமை அக்குற்றங்களினும் மேம்பட்டுத் தோன்றும் என்பதாம்.

**

கலைஞர் உரை

அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற

சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு

நல்லது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Though virtuous words his lips speak not, and all his deeds are ill,

If neighbour he defame not, there’s good within him still.

**

Yogi Shuddhananda Translation

Though a man from virtue strays,

To keep from slander brings him praise.

**

182      

அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே

புறனழீஇப் பொய்த்து நகை.

பரிமேலழகர் உரை

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது – அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை – ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் – ஒளியைக் கோறல்.)

**

மு.வரதராசனார் உரை

அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்தலைவிட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.

**

மணக்குடவர் உரை

அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத

விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல்.

இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

புறன் அழீஇப் பொய்த்து நகை – ஒருவனைக்காணாவிடத்துப் பழித்துரையால் அழித்துக் கூறிக் கண்டவிடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல்; அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது – அறம் என்றே ஒன்றுமில்லையென அழித்துக்கூறி அறமல்லாதவற்றைச் செய்தலினுந் தீயதாம்.

அறனழித்தலினும் புறனழித்தலும் அல்லவை செய்தலினும் பொய்த்து நகையும் தீதென நிரனிறையாகக் கொள்க. பழித்துரையால் அழித்தலாவது பெயரைக் கெடுத்தல். ‘ அழீஇ’ ஈரிடத்தும் பிறவினைப் பொருளில் வந்த சொல்லிசையளபெடை.

**

கலைஞர் உரை

ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப்  பேசிவிட்டு

அவர்   இல்லாத   இடத்தில்   அவரைப்  பற்றிப் பொல்லாங்கு பேசுவது

அறவழியைப்   புறக்கணித்து  விட்டு,  அதற்கு  மாறான   காரியங்களைச்

செய்வதைவிடக் கொடுமையானது.

**

Rev. Dr. G.U.Pope Translation

Than he who virtue scorns, and evil deeds perfoms , more vile,

Is he that slanders friend, then meets him with false smile.

**

Yogi Shuddhananda Translation

Who bite behind, and before smile

Are worse than open traitors vile.

**

183      

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத

லறம்கூறு மாக்கந் தரும்.

பரிமேலழகர் உரை

புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் – பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் – அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். (பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், ‘சாதல் ஆக்கம் தரும்’ என்றார். ‘ஆக்கம்’ அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். ‘அறம்’ ஆகுபெயர். ‘தரும்’ என்பது இடவழு அமைதி.)

**

மு.வரதராசனார் உரை

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்துவிடுதல் அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

**

மணக்குடவர் உரை

காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

புறங் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் – ஒருவன் பிறனைக் காணாவிடத்துத் தீதாகக் கூறி அவனைக் கண்டவிடத்து நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் – அங்ஙனஞ் செய்யாது இறந்து போதல் அவனுக்கு அற நூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும்.

இறந்தவழிப் புறங்கூறலின்மையால் ‘ அறங் கூறும் ஆக்கத்தரும்’ என்றார். ஆக்கம் மறுமையிற் பெறும் நன்மை. ‘ அறம்’ ஆகு பெயர். தரும் என்னும் சொல்.

“தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்

தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த”.

(512)

என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி தன்மை முன்னிலையில் வராது படர்க்கையில் வந்ததினால், இடவழு வமைதியாம்.

**

கலைஞர் உரை

கண்ட   இடத்தில்   ஒன்றும்,  காணாத   இடத்தில் வேறொன்றுமாகப்

புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் சாவது நன்று.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘Tis greater gain of virtuous good for man to die,

Than live to slander absent friend, and falsely praise when nigh.

**

Yogi Shuddhananda Translation

Virtue thinks it better to die,

Than live to backbite and to lie.

**

184      

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க

முன்னின்று பின்நோக்காச் சொல்.

பரிமேலழகர் உரை

கண் நின்று கண் அறச் சொல்லினும் – ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க – அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக. (‘பின்’ ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

எதிரே நின்று கணணோட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

**

மணக்குடவர் உரை

ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக,

இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

கண் நின்று கண் அறச் சொல்லினும் – ஒருவனெதிரே நின்று கண்ணோட்டமின்றிச் சொல்லினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க – அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்களைச் சொல்லா தொழிக.

‘பின் ‘ ஆகு பொருளது. சொல்வான் செயல் சொல்லின் மேலேற்றப் பட்டது. இதில் வந்துள்ளது முரணணி.

**

கலைஞர் உரை

நேருக்கு    நேராக  ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும்

சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல்   நேரில்

இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.

**

Rev. Dr. G.U.Pope Translation

In presence though unkindly words you speak, say not,

In absence words whose ill result exceeds your thought.

**

Yogi Shuddhananda Translation

Though harsh you speak in one’s presence

Abuse is worse in his absence.

**

185      

அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்

புண்மையாற் காணப் படும்.

பரிமேலழகர் உரை

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை – புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் – அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும். (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை, ஒருவன் மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

**

மணக்குடவர் உரை

ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும்.

இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை – புறங்கூறுவா னொருவன் அறம் நல்ல தென்று சொல்லினும், அவன் அதை நெஞ்சாரச் சொல்கின்றானல்லன் என்னும் உண்மை; புறஞ் சொல்லும் புன்மையாற் காணப்படும் – அவன் புறஞ் சொல்லுதற்குக் கரணியமான சிறுதன்மையால் அறியப்படும்.

மனந்திருந்தாமையால் அவன் சொல் நம்பப்பெறா தென்பதாம். இனி, அறம் நல்ல தென்று ஒருவனது மனச்சான்று ஒப்புக் கொள்ளினும், வழக்கத்தினாலும் விருப்பினாலும் நெஞ்சுரமின்மையாலும் அவன் அதற்கு மாறாக ஒழுகலாமாகலின், ‘ அறங் கூறும் நெஞ்சத்தானன்மை’ என்பதற்கு, அறத்தின் தன்மையைப் பற்றிக் கூறித் தகுதியுள்ள மனத்தானல்லாமை என்று உரைப்பினு மமையும்.

**

கலைஞர் உரை

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டே

அவன்    அறவழி   நிற்பவன்  அல்லன்  என்பதை  எளிதில்  தெரிந்து

கொள்ளலாம்.

**

Rev. Dr. G.U.Pope Translation

The slanderous meanness that an absent friend defames,

‘This man is words owns virtue, not in heart,’ proclaims.

**

Yogi Shuddhananda Translation

Who turns to slander makes it plain

His praise of virtue is in vain.

**

186      

பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்

திறன்றெரிந்து கூறப் படும்.

பரிமேலழகர் உரை

பிறன் பழி கூறுவான் – பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் – தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும். (‘புறத்து’ என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். ‘திறன்’ ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், ‘திறன் தெரிந்து கூறப்படும்’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

**

மணக்குடவர் உரை

பிறனுடைய பழியைச் சொல்லுமவன் தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பிறன்பழி கூறுவான் – பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் – தன் சொந்தப் பழிகளுள்ளும் கடுமையானவை தெரிந்தெடுக்கப்பட்டு அப்பிறனால் தன் எதிரிலேயே கூறப்படுவான்.

புறத்து என்பது அதிகாரத்தால் வந்தது. ‘திறன்’ வலிமை, அது இங்குத் திறனான பழிகளைக் குறித்தது; ஆதலால் ஆகுபொருளது. திறந் தெரிந்து கூறுவதற்குக் கரணியம் புறங்கூற்றைப் பற்றி அறிவிக்கப் பட்டமை அல்லது கேள்விப்பட்டமையென்பது, கருதலளவையால் அறியப்படும். செய்யாமற் செய்த புறங் கூற்றிற்குப் பழிவாங்குஞ் செய்கையாதலாலும், ‘திறந் தெரிந்து’ என்னுங் குறிப்பினாலும், நேரிற் சொல்லுதலும் உய்த்துணரப்படும்.

**

கலைஞர் உரை

பிறர்மீது  ஒருவன்    புறங்கூறித்  திரிகிறான் என்றால் அவனது பழிச்

செயல்களை   ஆராய்ந்து  அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது

கூற நேரிடும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Who on his neighbours’ sins delights to dwell,

The story of his sins, culled out with care,the world will tell.

**

Yogi Shuddhananda Translation

His failings will be found and shown,

Who makes another’s failings known.

**

187      

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாட றேற்றா தவர்.

பரிமேலழகர் உரை

பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் – தம்மை விட்டு நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் – கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார். (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கருத்தான், ‘அயலாரோடும்’ என்பது வருவித்துரைக்கப்பட்டது. ‘அறிதல்’ தமக்கு உறுதி என்று அறிதல். “கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை” (கலி. மருதம்.27) என்புழிப் போலத் ‘தேற்றாமை’ தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.)

**

மு.வரதராசனார் உரை

மகிழும்படியாகப் பேசி நட்புக்கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மைவிட்டு நீங்கும்படியாகப் புறங்கூறி நண்பரையும் பிரித்துவிடுவர்.

**

மணக்குடவர் உரை

நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்: மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வுபண்ண மாட்டாதார்.

இது நட்டவரை யிழப்பர் என்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

நகச் சொல்லி நட்பாடல் தேற்றாதவர் – மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடும் நட்பாடல் தமக்கு நன்றென்று தெளியாத புறங்கூற்றாளர்; பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் – பிளவுண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியப்பண்ணுவர்.

கேளிரையும் என்னும் சிறப்பும்மை தொக்கது. நட்பாடல் என்னுங் குறிப்பால் அயலாரோடும் என்பது வருவிக்கப்பட்டது. அவ்வும்மை எச்சவும்மை. தம் கேளிர் என்னாது கேளிர் என்று மட்டுங் குறித்ததினால், பிறரினத்தார்க்குள்ளும் புறங்கூற்றாற் பிரிவினையுண்டாக்குவர் என்பது பெறப்படும். இங்ஙனம் எல்லார்க்கும் பொல்லாதவராவர் என்பது கருத்து. தேறாதவர் என்னும் தன்வினை தேற்றாதவர் என்று பிறவினை வடிவில் நின்றது, “கனவிலுந்தேற்றாதார் மாட்டு” (குறள்: 1054) என்புழிப்போல.

**

கலைஞர் உரை

இனிமையாகப் பழகி  நட்புறவைத்  தொடரத்  தெரியாதவர்கள், நட்புக்

கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

With friendly art who know not pleasant words to say,

Speak words that sever hearts, and drive choice friends away.

**

Yogi Shuddhananda Translation

By pleasing words who make not friends

Sever their hearts by hostile trends.

**

188      

துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா

ரென்னைகொ லெதிலார் மாட்டு.

பரிமேலழகர் உரை

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் – தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் – அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? (‘தூற்றுதல்’ பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், ‘என்னைகொல்’ என்றார். ‘செய்வது என்பது சொல்லெச்சம்’. ‘என்னர் கொல்’ என்று பாடம் ஓதி, ‘எவ்வியல்பினராவர்’ என்று உரைப்பாரும் உளர்.)

**

மு.வரதராசனார் உரை

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?

**

மணக்குடவர் உரை

தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார் செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ?

இது யாவரோடும் பற்றிலரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் – தம் நெருங்கிய வுறவினர் குற்றத்தையும் அவர்புறத்துத் தூற்றும் இயல்புடைய வன்னெஞ்சர்; ஏதிலார் மாட்டு என்னை கொல் – அயலார் செய்தியில் எத்தகையவராவார்.

‘குற்றமும்’ என்பது துன்னியாரை நோக்கிய சிறப்பும்மை, தூற்றுதல் என்பது களத்திற் பொலி தூற்றுதல்போலப் பலருமறியப் பரப்புதல். மிகக் கொடியவராவர் என்பது பற்றியும் அறியப்படாமை பற்றியும் ‘என்னை கொல்’ என்றார். ‘என்னர் கொல்’ என்னும் பாடமும் ஏற்றதே. ‘கொல்’ ஐயம்.

**

கலைஞர் உரை

நெருங்கிப்   பழகியவரின்  குறையைக்கூடப்   புறம்  பேசித் தூற்றுகிற

குணமுடையவர்கள்  அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச

மாட்டார்கள்?

**

Rev. Dr. G.U.Pope Translation

Whose nature bids them faults of closest friends proclaim,

What mercy will they show to other men’s good name?

**

Yogi Shuddhananda Translation

What will they not to strangers do

Who bring their friends’ defects to view?

**

189      

அறன்நோக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப்

புன்சொ லுரைப்பான் பொறை.

பரிமேலழகர் உரை

புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை – பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் – நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்! (எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், ‘அறன் நோக்கி ஆற்றுங்கொல்’ என்றார்.’ இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல்பாரத்தை, `இவனையும் சுமப்பதே எனக்கு அறம்’ என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

**

மணக்குடவர் உரை

பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும்.

இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை – பிறர் இல்லாத சமயம் பார்த்து அவரைப் பழித்துரைக்கும் புறங் கூற்றாளனது உடலைப் பொறுத்தலை; வையம் அறன்நோக்கி ஆற்றுங்கொல் – மாநிலம் தனக்கு அறமென்று கருதிச் செய்யும் போலும்!

தன்னை அகழ்வாரைப் தாங்கும் நிலத்திற்கும் புறங்கூற்றாளன் உடலைச் சுமத்தல் அரிதென்னுங் கருத்தால். ‘அறனோக்கி யாற்றுங் கொல்’ என்றார். பொறை என்னும் சொல் இங்குச் சுமத்தலும் பொறுத்துக்கொள்ளுதலுமாகிய இரு பொருளையும் ஒருங்கே தழுவிய தாம். ‘கொல்’ ஐயங்கலந்த உய்த்துணர்வு.

**

கலைஞர் உரை

ஒருவர்  நேரில்  இல்லாதபோது  பழிச்சொல் கூறுவோனுடைய உடலை

‘இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.

**

Rev. Dr. G.U.Pope Translation

‘Tis charity, I ween, that makes the earth sustain their load,

Who, neighbours’ absence watching, tales or slander tell abroad.

**

Yogi Shuddhananda Translation

The world in mercy bears his load

Who rants behind words untoward

**

190      

ஏதிலார் குற்றம்போற் றம்குற்றங் காண்கிற்பிற்

றீதுண்டோ மன்னு முயிர்க்கு.

பரிமேலழகர் உரை

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் – ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?[நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, ‘காண்கிற்பின்’ என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, ‘உயிர்க்குத் தீது உண்டோ’ என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.]

**

மு.வரதராசனார் உரை

அயலாருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும் காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?

**

மணக்குடவர் உரை

பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும்.

இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் – புறங்கூறுவார் தாம் காணும் பிறர் குற்றம்போல் தம்குற்றத்தையுங் காணவல்லராயின்; மன்னும் உயிர்க்கு தீது உண்டோ – நிலைபெற்ற மக்களுயிர்க்கு வரக்கூடிய துன்பமுண்டோ ?

அயலாரையும் பகைவரையுங் குறிக்கும் ஏதிலார் என்னும் சொல், இங்குப்பிறர் என்னும் பொருட்டாய் நின்றது. பிறர் குற்றம் போல் தம் குற்றமுங் காண்டலருமை நோக்கிக் ‘காண்கிற்பின்’ என்றார். கண்டவழித் தீவினை நிகழாதாதலின் அதனால் துன்பமுமிராதென்பதாம். ‘கில்’ ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இனி , காண்கின்பின் என்று பிரிப்பினும் அமையும். உடல்நில்லா தொழியவும் உயிர் நிலைபெற்று நிற்றலால் மன்னுமுயிர் என்றார்.

**

கலைஞர் உரை

பிறர்  குற்றத்தைக்  காண்பவர்கள்  தமது  குற்றத்தையும்    எண்ணிப்

பார்ப்பார்களேயானால்  புறங்கூறும்   பழக்கமும்  போகும்;  வாழ்க்கையும்

நிம்மதியாக அமையும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

If each his own, as neighbours’ faults would scan,

Could any evil hap to living man?

**

Yogi Shuddhananda Translation

No harm would fall to any man

If each his own defect could scan.

**

×