30ஆம் அதிகாரம் (வாய்மை)

அதிகாரம் 30.

வாய்மை

291      

வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்

தீமை யிலாத சொலல்.

பரிமேலழகர் உரை

[அஃதாவது மெய்யினது தன்மை. பெரும்பான்மையும் காமமும் பொருளும் பற்றி நிகழ்வதாய பொய்ம்மையை விலக்கலின் , இது ‘கூடா ஒழுக்கம்’ , ‘கள்ளாமை’ களின் பின் வைக்கப்பட்டது.)

வாய்மை எனப்படுவது யாது எனின் – மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின், தீமை யாதொன்றும் இலாத சொலல் – அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல். (‘தீமை யாதொன்றும் இலாத’ என இயையும். ‘எனப்படுவது’ என்பது ‘ஊர் எனப்படுவது உறையூர்’ என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம் : பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.)

**

மு.வரதராசனார் உரை

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

**

மணக்குடவர் உரை

பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல்,

வாய்மை யாது என்றார்க்கு இது கூறப்பட்டது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

வாய்மை எனப்படுவது யாது எனின்-மெய்ம்மையென்று சொல்லப்படுவது யாதென்று வினவின் ; தீமை யாது ஒன்றும் இலாத சொலல்-அது எவ்வகை யுயிர்க்கும் எவ்வகைத் தீங்கும் எட்டுணையும் விளைக்காத சொற்களைச் சொல்லுதலாம்.

வாய்மையின் இலக்கணம் பிறர்க்கும் பிற வுயிர்கட்கும் தீங்கு பயவாமையே யன்றி நிகழ்ந்தது கூறலன்று என்பது கருத்து. இது திருக்குறளை ஒப்புயர்வற்ற உலக அற நூலாக்கும் இயல்வரையறையாம்.

உண்மை, வாய்மை, மெய்ம்மை என்னும் ஒரு பொருட்சொல் மூன்றும், முறையே, உள்ளமும் வாயும் உடம்புமாகிய முக்கரணத்தொடு தொடர்புடையனவாகச் சொல்லப்பெறும். இனி, உள்ளது உண்மை, வாய்ப்பது வாய்மை, மெய் (substance) போன்றது மெய்ம்மை எனினுமாம்.

**

கலைஞர் உரை

பிறருக்கு   எள்முளையளவு   தீமையும்  ஏற்படாத  ஒரு  சொல்லைச்

சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

You ask , in lips of men what ‘truth’ may be;

‘Tis speech from every taint of evil free.

**

Yogi Shuddhananda Translation

If “What is truth”? the question be,

It is to speak out evil-free.

**

292      

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்.

பரிமேலழகர் உரை

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் – பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின் , பொய்ம்மையும் வாய்மை இடத்த – பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பால ஆம். (குற்றம் தீர்ந்த நன்மை : அறம். அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் ‘தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும் நிகழந்தது கூறலும் பொய்ம்மை’ எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

குற்றம் தீர்ந்த நன்மையை விளைக்குமானால் பொய்யான சொற்களும் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம்.

**

மணக்குடவர் உரை

பொய்யும் மெய்யோ டொக்கும், குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்- குற்றமற்ற நன்மையைப் பிறர்க்கு விளைக்குமாயின்; பொய்ம்மையும் வாய்மை இடத்த-பொய்யான சொற்களும் மெய்யான சொற்களின்பாற்பட்டனவாம்.

குற்ற மற்ற நன்மையாவது, எவருக்கும் எவ்வகைத் தீங்கும் இழப்பும் விளைக்காத நற்பயன். அது, வழிச்செல்லும் சிறாரை நோக்கித் தாம் செல்லும் ஊர் மிகத் தொலைவிலிருந்தும் அணியதென்பதும் மருத்துவன் நோயாளியை நோக்கி அவன் நோய் மிகக் கடுமையாயிருந்தும் வரவர நலமாகி வருகின்ற தென்பதும், ஒருவர்க்குத் தொடர்ந்து விக்க லெடுப்பதைத்தடுக்க அவர் திடுக்கிடத்தக்க ஒரு பொய்ச் செய்தியைச் சொல்வதும், போல்வதாம் . இத்தகைய தீங்கற்ற பொய்யுரைகளால் , ஒருவர்க்குப் பெருஞ்செல்வங் கிட்டுவித்தலும் ஒருவரைச் சாவினின்று தப்புவித்தலும் கூடும்.

நன்மை பயக்கும் பொய்யுரையும் வாய்மையின் பாற்படுமெனவே, தீமை பயக்கும் மெய்யுரையும் பொய்ம்மையின் பாற்படும் என்பதாம். ஆகவே, ஓர் உரையின் மெய்ம்மையும் பொய்ம்மையும் அதன் விளைவும் பற்றியல்லது நிகழ்ச்சி மட்டும் பற்றித் துணியப்படுவதன்றென்பது கருத்தாம்.

**

கலைஞர் உரை

குற்றமற்ற   நன்மையை   விளைவிக்கக்    கூடுமானால்   பொய்யான

சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Falsehood may take the place of truthful word,

If blessing, free from fault, it can afford.

**

Yogi Shuddhananda Translation

E’en falsehood may for truth suffice,

When good it brings removing vice.

**

293      

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

றன்னெஞ்சே தன்னைச் சுடும்.

பரிமேலழகர் உரை

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க – ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் – பொய்த்த தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும். (நெஞ்சு கரியாதல் “கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் – தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் – நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் – நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்” (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னால் அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

**

மணக்குடவர் உரை

தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான்.

இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க- ஒருவன் தன் நெஞ்சு அறிந்த தொன்றைப் பிறர் அறியவில்லை யென்று கருதிப்பொய் சொல்லா தொழிக; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச்சுடும்-பொய் சொன்னானாயின், அதனை யறிந்த தன் நெஞ்சே தான் செய்த தீவினைக்குச் சான்றாக நின்று தன்னைக் குற்றஞ் சாட்டித் துன்புறுத்தும்.

“நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை.” (கொன்றை.54) முக்கரணவினைக ளெல்லாவற்றையும் நெஞ்சு அறிவதனாலேயே அதற்கு மனச்சான்று என்று பெயர். மனச்சான்று உடனிருந்துரைக்கவும் அதை மறுத்துப் பொய் சொல்வது கொடிய தென்பதை யுணர்த்தவே, “நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.” என்றார் உலகநாதர். ‘சுடும்’ என்றதினால், மனச்சான்று குத்தியுணர்த்தி மன நோவை யுண்டுபண்ணுவது மட்டுமன்றி, தெய்வச் சான்றாக நின்று வெளிப்படுத்தி அரசன் தண்டனையையும் அடைவிக்கும் என்பது பெறப்படும்.

**

கலைஞர் உரை

மனச்சாட்சிக்கு    எதிராகப்    பொய்    சொல்லக்கூடாது;  அப்படிச்

சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Speak not a word which false thy own heart knows,

Self-kindled fire within the false one’s spirit glows.

**

Yogi Shuddhananda Translation

Let not a man knowingly lie;

Conscience will scorch and make him sigh.

**

294      

உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா

ருள்ளத்து ளெல்ல முளன்.

பரிமேலழகர் உரை

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் – ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் – அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். (‘உள்ளத்தால்’ என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால், அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

**

மணக்குடவர் உரை

தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான்

இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது

**

ஞா. தேவநேயப் பாவாணர்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்-ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின்; உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்-அவன் உயர்ந்தோ ருள்ளத்திலெல்லாம் உளனாவன்.

உயர்ந்தோர் உள்ளத்தில் உளனாதலாவது அவரால் மதிக்கப்படுதலும் என்றும் நினைக்கப்படுதலுமாம். ‘உள்ளத்தான்’ என்பது வேற்றுமை மயக்கம்.

**

கலைஞர் உரை

மனத்தால்கூடப்    பொய்யை   நினைக்காமல்   வாழ்பவர்கள், மக்கள்

மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

True to his inmost soul who lives,-enshrined

He lives in souls of all mankind.

**

Yogi Shuddhananda Translation

He lives in loving hearts of all

Who serves the Truth serene in soul.

**

295      

மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.

பரிமேலழகர் உரை

மனத்தொடு வாய்மை மொழியின் – ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை – அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன். (மனத்தொடு பொருந்துதல் – மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை பேசுவானானால், அவன் தவத்தோடு தானமும் ஒருங்கே செய்வாரைவிடச் சிறந்தவன்.

**

மணக்குடவர் உரை

தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான்.

இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

மனத்தோடு வாய்மை மொழியின்- ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மையைச் சொல்வானாயின்; தவத்தோடு தானம் செய்வாரின் தலை- அவன் தவமுந் தானமும் ஒருங்கே செய்தவரினுஞ் சிறந்தவனாவன்.

தவத்தோடு தானஞ் செய்வதினினும் உளத்தோடு பொருந்த உண்மை சொல்வது அரிதாதலால், “தவத்தோடு தானஞ் செய்வாரிற் றலை” என்றார்.

**

கலைஞர் உரை

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை    பேசுகிறவர்கள்    தவமும்,

தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Greater is he who speaks the truth with full consenting mind.

Than men whose lives have penitence and charity combined.

**

Yogi Shuddhananda Translation

To speak the truth from heart sincere

Is more than giving and living austere.

**

296      

பொய்யாமை யன்ன புகழில்லை பொய்யாமை

யெல்லா வறமுந் தரும்.

பரிமேலழகர் உரை

பொய்யாமை அன்ன புகழ் இல்லை – ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை. எய்யாமை எல்லா அறமும் தரும் – மறுமைக்கு மெய் வருந்தாமல் அவனுக்கு எல்லா அறங்களையும தானே கொடுக்கும். (‘புகழ்’ ஈண்டு ஆகுபெயர். இல்லத்திற்குப் பொருள் கூட்டல் முதலியவற்றானும், துறவறத்திற்கு உண்ணாமை முதலியவற்றானும் வருந்தல் வேணடுமன்றே? அவ்வருத்தங்கள் புகுதாமல் அவ்விருவகைப் பயனையும் தானே தரும் என்பார், ‘எய்யாமை எல்லா அறமும் தரும்’ என்றார்.)

**

மு.வரதராசனார் உரை

ஒருவனுக்குப் பொய் இல்லாமல் வாழ்தலைப் போன்ற புகழ்நிலை வேறொன்றும் இல்லை; அஃது அவன் அறியாமலே அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

**

மணக்குடவர் உரை

பொய்யாமையை யுடையன் என்பதனோடு ஒத்த புகழ் வேறொன்றில்லை; பொய்யாமையானது அவனறியாமல் தானே எல்லா அறங்களையுங் கொடுக்குமாதலான்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பொய்யாமை அன்ன புகழில்லை- இம்மையில் ஒருவனுக்கு பொய்சொல்லாமை போன்ற புகழ்க் கரணகம் (காரணம்) வேறில்லை; எய்யாமை எல்லா அறமும் தரும் – உடம்பு வருந்தி எதுவுஞ் செய்யாமலே அது அவனுக்கு மறுமைக்கு வேண்டிய எல்லா அறங்களையுந் தரும்.

இல்லறத்திற் பொருளீட்டுதற்கும் துறவறத்தில் தவஞ் செய்தற்கும் உடம்பை வருத்தும் முயற்சி இன்றியமையாததாகும். அம் முயற்சி யின்றியே அவ்விருவினைப் பயனையுந் தருதலால் , “எய்யாமை யெல்லா வறமுந் தரும்” என்றார். ‘புகழ்’ ஆகு பெயர். எய்த்தல் உடம்பு வருந்தியிளைத்தல்.

**

கலைஞர் உரை

பொய்   இல்லாமல்    வாழ்வது   போன்ற  புகழ் மிக்க வாழ்வு வேறு

எதுவுமில்லை;   என்றும்    நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த

வாழ்வேயாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

No praise like that of words from falsehood free;

This every virtue yields spontaneously.

**

Yogi Shuddhananda Translation

Not to lie brings all the praise

All virtues from Truth arise.

**

297      

பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

பரிமேலழகர் உரை

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் – ஒருவன் பொய்யாமையையே, பொய்யாமையையே செய்ய வல்லவனாயின், பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று – அவன் பிற அறங்களைச் செய்யாமையே செய்யாமையே நன்று (அடுக்கு இரண்டனுள் முதலது இடைவிடாமை மேற்று, ஏனையது துணிவின் மேற்று. ‘பல அறங்களையும் மேற்கொண்டு செய்தற்கு அருமையால் சில தவறின் குற்றப்படுதலின், அவை எல்லாவற்றின் பயனையும் தானே தரவற்றாய இதனையே மேற்கொண்டு தவறாமல் செய்தல் நன்று ‘என்பார், ‘செய்யாமை செய்யாமை நன்று’ என்றார்.இதனை இவ்வாறு அன்றிப் ‘பொய்யாமையைப் பொய்யாமல் செய்யின் பிற அறம் செய்கை நன்று’,எனப் பொழிப்பாக்கி, ‘பொய் கூறின் பிறவறம் செய்கை நன்றாகாது’ என்பது, அதனால் போந்த பொருளாக்கி உரைப்பாரும் உளர். பிற அறங்களெல்லாம் தரும் பயனைத் தானே தரும் ஆற்றலுடைத்து என மறுமைப்பயனது மிகுதி இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

**

மணக்குடவர் உரை

பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின் பிற அறங்களைச் செய்தல் நன்றாம்; அல்லது தீதாம்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின்- ஒருவன் வாய்மை யறத்தைத் தொடர்ந்து செய்ய வல்லவனாயின்; பிற அறம் செய்யாமை செய்யாமை நன்று- அவன் பிற அறங்களைச் செய்யாதிருத்தலே நன்றாம்.

அடுக்குத்தொடர் இரண்டனுள் முன்னது தொடர்ச்சி பற்றியது; பின்னது தேற்றம் பற்றியது. வாய்மை யொன்றே எல்லாவறங்களின் பயனையுந் தருவதாலும் எல்லா வறங்களையும் ஒருவன் மேற்கொள்ளுதல் அரிதாதலாலும், பல வறங்களை ஒருங்கே மேற்கொள்ளின் அவற்றுட் சில தவறுவதால் ஏனையவற்றின் பயனையும் ஏனையறங்களின் பயனையும் பெறுவதே சிறந்ததாகும் என்பதையுணர்த்த ‘அறம்பிற செய்யாமை நன்று’ என்றார்.

வாய்மையைக் கடைப்பிடிப்பவன் தான் செய்யுந் தீவினைகளையெல்லாம் பிறருக்கு மறைக்காதிருக்க வேண்டுமாதலானும் அவை பிறரால் அறியப்படின் தான் தண்டனை யடைவது திண்ணமாதலாலும், ஒவ்வொன்றாக எல்லாத் தீவினைகளையும் விட்டுவிடுவன் என்பது கருத்து.

மணக்குடவர் ஈரடுக்குத் தொடர்களையும் தழாத் தொடராகக் கொள்ளாது தழுவு தொடராகக் கொண்டு “பொய்யாமையைப் பொய்யாமல் செலுத்துவனாயின், பிற அறங்களைச் செய்தல் நன்றாம் அல்லது தீதாம்” என்று இக் குறளுக்குப் பொருளுரைப்பர்.

**

கலைஞர் உரை

செய்யக்கூடாததைச்   செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய்

கூறாத   பண்பு  பொய்த்துப்  போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை

தருவதாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

If all your life be utter truth, the truth alone,

‘Tis well , though other virtuous acts be left undone.

**

Yogi Shuddhananda Translation

Lie not lie not. Naught else you need

All virtues are in Truth indeed.

**

298      

புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை

வாய்மையாற் காணப் படும்.

பரிமேலழகர் உரை

புறம் தூய்மை நீரான் அமையும் – ஒருவனுக்கு உடம்பு தூய்தாந் தன்மை நீரானே உண்டாம்: அகம் தூய்மை வாய்மையான் காணப்படும். – அதுபோல, மனம் தூய்தாந் தன்மை வாய்மையான் உண்டாம். “(காணப்படுவது உளதாகலின் , ‘உண்டாம்’ என்று உரைக்கப்பட்டது. உடம்பு தூய்தாதல்: வாலாமை நீங்குதல்: மனம் தூய்தாதல் மெய்யுணர்தல். புறம் தூய்மைக்கு நீரல்லது காரணம் இல்லாதாற் போல, அகம் தூய்மைக்கு வாய்மையல்லது காரணம் இல்லை என்பதாம். இதனானே, துறந்தார்க்கு இரண்டு தூய்மையும் வேண்டும்” என்பதூஉம் பெற்றாம்.)

**

மு.வரதராசனார் உரை

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும்; அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

**

மணக்குடவர் உரை

உடம்பு தூயதாதல் நீரினாலே யமைந்து விடும்: மனத்தின் தூய்மை மெய்சொல்லுதலினாலே யறியப்படும்.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

புறம் தூய்மை நீரான் அமையும் – ஒருவனது உடம்புத்தூய்மை நீரால் உண்டாகும்; அகம் தூய்மை வாய்மையான் காணப்படும்- உள்ளத்தூய்மை வாய்மையால் அறியப்படும்.

புறந்தூய்மை அழுக்குப் போதல்; அகத்தூய்மை குற்றம் நீங்குதல். காணப்படுதல் அறியப்படுதல். காணுதல் என்றது அகக் கண்ணாற் காணுதலை. புறத்தழுக்கும் நீரும் போல அகக் குற்றமும் வாய்மையும் காட்சிப் பொருளன்மையின், அறியப்படும் என்றார். வாய்மையால் அகத்தூய்மை உண்டாகும் வகை மேற் கூறப்பட்டது. துறவியர்க்குப் புறந்தூய்மையினும் அகத்தூய்மையே சிறந்ததென்பாம்.

**

கலைஞர் உரை

நீரில்    குளிப்பதால்   உடலின்  அழுக்கு  மட்டுமே  நீங்கும்; மனம்

அழுக்குப்படாமல்   தூய்மையுடன்   விளங்கிட,   சொல்லிலும் செயலிலும்

வாய்மை வேண்டும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Outward purity the water will bestow;

Inward purity from truth alone will flow.

**

Yogi Shuddhananda Translation

Water makes you pure outward

Truth renders you pure inward.

**

299      

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

பரிமேலழகர் உரை

எல்லா விளக்கும் விளக்கு அல்ல – புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா, சான்றோர்க்கு விளக்கு பொய்யா விளக்கே – துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே. (உலகத்தார் விளக்காவன: ஞாயிறு,திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாத இருள் போகலின் ‘பொய்யா விளக்கே விளக்கு’ என்றார். அவ்விருளாவது அறியாமை. ‘பொய்யாத விளக்கு’ என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் ‘கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம் அல்ல: அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே’, என்று உரைப்பாரும் உளர்.)

**

மு.வரதராசனார் உரை

(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

**

மணக்குடவர் உரை

சான்றோர்க்கு எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல: பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும்.

இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

சான்றோர்க்கு எல்லா விளக்கும் விளக்கல்ல – ஆன்றவிந்தடங்கிய துறவோர்க்குப் புறவிருள் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்காகா, பொய்யா விளக்கே விளக்கு – அகவிருள் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காம்.

புறவிருள் போக்கும் விளக்குகள் கதிரவன், நிலா, தீ என்பன. இவைபொய்யாமைபோல் அகவிருள் போக்காமையின், ‘பொய்யாவிளக்கே விளக்கு’ என்றார். அகவிருள் அறியாமை. ‘பொய்யா’ ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம். பொய்யாமையாகிய விளக்கு என்பது உருவக வணி.

முந்திய குறளில் வாய்மை அகத்தழுக்கைப் போக்குவதென்ற கருத்துட்கொண்டு, அதற்கேற்ப வாய்மையை விளக்காக உருவகித்தார்.

**

கலைஞர் உரை

புறத்தின்  இருளைப்  போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப்

போக்கும்  பொய்யாமை  எனும்  விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக்

காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Every lamp is not a lamp in wise men’s sight;

That’s the lamp with truth’s pure radiance bright.

**

Yogi Shuddhananda Translation

All lights are not lights for the wise;

Truth light is light bright like sun-light

**

300      

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்

வாய்மையி னல்ல பிற.

பரிமேலழகர் உரை

யாம் மெய்யாக் கண்டவற்றுள் – யாம் மெய்ந்நூல்களாகக் கண்ட நூல்களுள், எனைத்து ஒன்றும் வாய்மையின் நல்ல பிற இல்லை – யாதொரு தன்மையாலும் வாய்மையின் மிக்கனவாகச் சொல்லப்பட்ட பிற அறங்கள் இல்லை. (மெய் உணர்த்துவனவற்றை ‘மெய்’ என்றார். அவையாவன: தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள். அவையெல்லாவற்றினும் இஃது ஒப்ப முடிந்தது என்பதாம். இவை மூன்று பாட்டானும் இவ்வறத்தினது தலைமை கூறப்பட்டது.)

**

மு.வரதராசனார் உரை

யாம் உண்மையாகக் கண்ட பொருள்களுள் வாய்மையைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத் தக்கவை வேறு இல்லை.

**

மணக்குடவர் உரை

யாம் மெய்யாக் கண்டவற்றுள் மெய் சொல்லுதல்போல நன்றாயிருப்பன, வேறு யாதொன்றும் இல்லை.

இஃது எல்லா அறமும் இதனோடு ஒவ்வாதென்று அதன் தலைமை கூறிற்று.

**

ஞா. தேவநேயப் பாவாணர்

யாம் மெய்யாக் கண்டவற்றுள்- யாம் உண்மையான அறங்களாகக் கண்டவற்றுள்; எனைத்து ஒன்றும் – எவ்வகையிலும்; வாய்மையின் நல்ல பிற இல்லை- மெய்ம்மைபோலச் சிறந்த அறங்கள் வேறில்லை.

‘மெய்யா’ என்பதில் ஆக என்னும் வினையெச்ச வீறு ‘ஆ’ எனக் கடைக்குறைந்து நின்றது. வாய்மை தலைமையான அறமாகச் சொல்லப்பட்டிருப்பதால், ‘வாய்மையின்’ என்பதிலுள்ள 5-ஆம் வேற்றுமையுருபு தனக்குரிய உறழ்ச்சிப் பொருளில் வராது 2-ஆம் வேற்றுமைக்குரிய ஒப்புப் பொருளில் வந்ததாகக் கொள்க.

**

கலைஞர் உரை

வாய்மையைப்   போல்   சிறந்த   பண்பு   வேறொன்றுமே  இல்லை

என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

**

Rev. Dr. G.U.Pope Translation

Of all good things we’ve scanned with studious care,

There’s nought that can with truthfulness compare.

**

Yogi Shuddhananda Translation

Of all the things we here have seen

Nothing surpasses Truth serene !

**

×