மின் செய் வான் செஞ்சடை: அற்புதத் திருவந்தாதி (பாடல் 15)

பொந்திகை அற்றிருப்பது (மன நிறைவு அற்றிருப்பது) நல்லதா?

தாழ் உணர்ச்சி மேவும் மனம் கொண்டு ‘எனக்கு அது கிட்டவில்லையே! இது கிடைக்கவில்லையே’ என்று தாவித் தாவி அங்கலாய்ப்பதும் மாய்வதும் துன்பத்தையே தரும்.

ஆனால் உயர்ந்த இலக்குகளின் பாலான வேட்கை – பொந்திகை இன்மை (மன நிறைவு இன்மை) – விரும்பத் தக்கது.

‘பெரிதினும் பெரிது கேள்’ என்பார் பாரதி.

Divine discontent என்ற தொடரைப் பயன்படுத்துவார் ஆங்கிலேய அறிஞர் பேர்னார்ட் ஷா. 

மேலானவற்றை அவாவும் மனத்தின் உணர்வே அது. 

அத்தகைய Divine discontent ஐ வரும்பாடலில் வெளிப்படுத்துகிறார் அம்மை.

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம் புனைந்தும் அடிபொருந்த மாட்டார் – எப்போதும் சிவன் அடிகள் நினைந்திருந்து மிகு மலர்கள் தூவி வணங்கும் தேவர்கள் கூட அவன் அடிகளை அடைந்ததில்லை… 

நினைந்திருந்து, மின்செய் வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்கு என் செய்வான் கொல்லோ இனி? – செவ்வானத்தில் மின்னல் தோன்றினாற்போன்ற சுடர்ப்பொலிவு கொண்ட சடையை உடையவனே! வேதப்பொருளாய் விளங்கும் பிரானே என்றெல்லாம் சொல்லால் மட்டும் தொழும் எனக்கு எவ்வாறு அருள் செய்வானோ!

பாடல் 15 

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்

புனைந்தும் அடிபொருந்த மாட்டார் – நினைந்திருந்து

மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்

கென்செய்வான் கொல்லோ இனி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×